இன்ஷா அல்லாஹ்! விரைவில் கிறிஸ்தவம் பற்றிய பல புதிய கட்டுரைகள் வெளிவர இருக்கின்றது. தொடர்ந்து படியுங்கள்! உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் | ஏகத்துவம் இனையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, September 10, 2009

மனித வாழ்வு இவ்வுலகோடு முடிவு பெற்றால்!


- அபூ ஃபாத்திமா


பகுத்தறிவற்ற எண்ணற்ற பிராணிகளைப்போல், பகுத்தறிவுள்ள மனிதனும் ஒரு பிராணியே. சிலர் சொல்லுவது போல் அவனுக்கு மறுமை வாழ்க்கை என்று ஒன்றில்லை. மனிதன் மரணிப்பதோடு அவனது வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. மற்ற பிராணிகளைப் போல் அவனும் வாழந்து மடிந்து மண்ணாகிப் போவதே அவனது இறுதி முடிவு என்பது நாத்திக நண்பர்களின் உறுதியான முடிவு.

இந்த அவர்களின் முடிவின் அடிப்படையில் எமக்குச் சில ஐயங்கள் எழுகின்றன. அவற்றைத் தீர்த்து வைப்பது அவர்களின் கடமையாகும்.

நாத்திகர்கள் தாங்கள் தான் அசலான பகுத்தறிவாளர்கள் என்று பறைசாற்றிக் கொள்வது ஊர் அறிந்த உண்மை. எனவே எமது சில பகுத்தறிவுக் கேள்விகளுக்கு விடை தருவது அவர்கள் மீதுள்ள பொறுப்பாகும். அவர்கள் தரும் பதில்களிலிருந்து அவர்கள் பகுத்தறிவுப் பாசறையிலுள்ளவர்களா? அல்லது ஐயறிவு பாசறையிலுள்ளவர்களா? என்பதை எம்போன்றவர்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

உலகில் காணப்படும் கோடான கோடி ஜீவராசிகளைப் போல் அதாவது புழு பூச்சிகளைப் போல் மனிதனும் ஒரு புழு -பூச்சியே - ஒரு பிராணியே ஜீவராசியே! அனைத்து உயிரினங்களும் மடிந்து மண்ணணாகிப் போவது போல் மனிதனும் மடிந்து மண்ணாகி போகின்றவன்தான். மற்றபடி அவனுக்கொரு ஆத்மாவோ, மறுமை வாழ்க்கையோ இல்லை என்பதே நாத்திகர்களின் பகுத்தறிவு வாதம். அதாவது உலக வாழ்வோடு மனித வாழ்வு முற்றுப் பெற்று விடுகிறது. அதன் பின் ஒரு தொடர்ச்சியும் இல்லை என்பதே அவர்களின் வாதம். இப்போது அவர்களின் வாதத்தில் நமக்கு ஏற்படும் ஐயங்கள் இவைதான்.

மற்ற படைப்பினங்களைப் போன்றதொரு சராசரி படைப்பினமே மனிதன் எனும் போது மற்ற படைப்பினங்களுக்குரிய சட்டங்களே மனிதனுக்கும் பொருந்த வேண்டும். மற்ற படைப்பினங்களைப் பொருத்தமட்டிலும் "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the fittest) என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே அவற்றின் வாழ்வு அமைந்துள்ளது. அதாவது வலிமையுள்ளவை வலிமையற்றவற்றை வீழ்த்தி, அல்லது அழித்து தம்மை வளப்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக பெரிய மீன்கள் சிறிய மீன்களைக் கொன்று தமக்கிரையாக்கி கொள்கின்றன. சிங்கம், புலி போன்றவை மான், மாடு போன்றவற்றைக் கொன்று தமக்கிரையாக்கிக் கொள்கின்றன. இந்த "வல்லனவற்றின் வாழ்வு வளம்" புழு, பூச்சியிலிருந்து, ஊர்வனவற்றிலிருந்து, நாலு கால் பிராணிகள் வரை பொருந்தும், தரையிலுள்ள பிராணிகளுக்கும் பொருந்தும். இந்த சித்தாந்தத்தை நாத்திக பகுத்தறிவாளர்கள் அநீதி என்று தீர்ப்பு அளிப்பதில்லை.

அப்படியானால், அந்த ஜீவராசிகளைப் போன்றதொரு புழு, பூச்சி-மிருகம் போன்ற ஜீவராசிதான் மனிதன் என்று நாத்திக பகுத்தறிவாளர்கள் கூறும் போது, அதே "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the Fittest) என்ற சித்தாந்தம் மனிதனுக்கும் பொருந்திப் போக வேண்டுமல்லவா? மனிதர்களிலும் வலியவர்கள் வலிமை அற்றவர்களை வீழ்த்தி தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்வதை அநீதி என்று கூற முடியுமா? இல்லை; இது அநீதி என்று நாத்திகர்கள் கூறுவார்களேயானால், எந்த அடிப்படையில் அநீதி என்று கூறுகிறார்கள்? மற்ற படைப்பினங்களைப் போன்றதொரு, மண்ணோடு மண்ணாகிப் போகும் ஒரு படைப்புத்தானே - புழு பூச்சிதானே, மிருகம் போன்றவன்தானே மனிதனும் நாத்திகர்களின் கூற்றுப்படி அப்படியானால் மற்றப் படைப்பினங்களுக்குப் பொருந்திப் போகும் "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the fittest) என்ற கோட்பாடு மனிதனுக்கு மட்டும் ஏன் பொருந்திப் போகாது? இதற்குரிய சரியான விளக்கத்தை பகுத்தறிவு அடிப்படையில் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள் நாத்திகர்கள். அது மட்டுமல்ல; மற்ற படைப்பினங்கள் விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் மட்டுமே அது அநீதியாகும் என்று பிரித்துச் சட்டம் சொன்ன அதிகாரம் பெற்ற சக்தி எது? இதற்கு பகுத்தறிவு ரீதியாக விளக்கம் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

நீதிக்கும், தர்மத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்பவர்களில் பெரும்பாலோர் வறுமையிலும், துன்பங்களிலும் சதா உழன்று மடிகிறார்கள். அவர்கள் நீதிக்கும், தர்மத்திற்கும் உட்பட்டு வாழ்ந்ததற்குரிய நற்பலனை இவ்வுலகில் அனுபவிக்கவில்லையே! அப்படியானால் எங்கே பெறுவார்கள்?

அடுத்து வலுவில்லாதவர்கள் வலுவானவர்களை அடக்கி ஒடுக்கி தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வது அநீதியே என்ற பகுத்தறிவு ரீதியாகவும் மனச்சாட்சியின் படியும் அப்பட்டமாக ஒப்புக் கொண்டிருக்கும் நாத்திகர்களில் பலர், இன்று அதற்கு மாறாக மக்களையும் அரசையும் அதிகாரிகளையும் ஏமாற்றி அல்லது லஞ்சம் கொடுத்து கோடி, கோடியாகக் கொள்ளை அடித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சொத்துக்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார்களே? இதற்குக் காரணம் என்ன? அவர்கள் அநீதி என்று ஒப்புக் கொண்டுள்ளதற்கு மாற்றமாக - மக்களிடம் அநீதி என்று அப்பட்டமாக அறிவிப்பதற்கு மாற்றமாக அந்த அநீதியான கொள்ளை அடிக்கும் செயலை செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது? அவர்களது பகுத்தறிவும், மனச்சாட்சியும் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமற்ற செயல் என்று ஒப்புக்கொள்ளும் குடி, விபச்சாரம், சூது போன்ற தீய காரியங்களில் அவர்களில் பலர் மூழ்கி இருக்கிறார்களே? இத்தீய செயல்களைச் செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது?

இறைவனையும், மறுமையையும் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களோ மனிதனின் உடம்பில் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் அவனது பகிரங்கப் பகைவனான ஷைத்தான் ஓடிக்கொண்டு மனிதனை வழிகெடுத்து நரகில் கொண்டு தள்ளி அதை நிரப்ப கங்கணம் கட்டிச் செயல்படுகிறான். அவனது வலையில் சிக்கியே மனிதன், தானே பாவம், அநீதி, அக்கிரமம், ஓழுக்கமற்ற செயல் என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் துர்ச்செயல்களைச் செய்து பாவியாக நேரிடுகிறது என்று கூறிவிடுவார்கள். நிச்சயமாக நாத்திகர்கள் இறைவனையும், மறுமையையும், ஷைத்தானையும் மறுப்பதால் இந்தக் காரணத்தை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள்; சொல்லவும் மாட்டார்கள். அப்படியானால் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமற்ற செயல் என்று மனிதனே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டு, அடுத்த கனமே அவற்றைச் செய்வதற்குரிய காரணம் என்ன? பகுத்தறிவு செய்வதற்குரிய காரணம் என்ன? பகுத்தறிவு பாதையில் பயிற்சி பெற்ற நாத்திகர்கள் அதற்குரிய காரணம் கூறக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

அடுத்து அவர்களே பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு விட்டு அதற்கு மாறாக அந்த பாவமான செயல்களை, அநீதியான செயல்களை, அக்கிரமமான, ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்து கோடி, கோடியாக கொள்ளை அடித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குவித்து வைத்துள்ளனர். அவர்களுக்கு இன்று மக்களுக்கு மத்தியில் பெருஞ்செல்வாக்கு ஆள், அம்பு, பட்டம், பதவி, பலவித அதிகார ஆதிக்கம், அரசியல் செல்வாக்கு என்று மன்னாதி மன்னர்கள் போல் உல்லாச புரிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வுலகில் வாழ்நாள் பூராவும் அவர்கள் கொள்ளை அடித்து சேர்த்த சொத்துக்கள் அவர்களுக்கு இவ்வுலகை சுவர்க்கப்பூமியாக ஆக்கித் தருகிறது.

அவர்கள் செய்த அநீதி, அக்கிரமம், பாவச் செயல்கள், கொலை, கொள்ளைகள் இவை காரணமாக இவ்வுலகில் எவ்வித தண்டனையோ, கஷ்டமோ, துன்பமோ அனுபவிக்காமல் சுவர்க்கவாசிகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பாடையில் வைத்து மண்ணறையில் கொண்டு தள்ளும் வரை அல்லது தீயிலிட்டுப் பொசுக்கும் வரை இன்பமே இன்பம்; மற்றபடி துன்பத்தின் சாயல் கூட படாதபடி வாழ்ந்து மடிகிறார்கள். பகுத்தறிவு நாத்திகர்கள் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்ட செயல்களைச் செய்தே அவர்கள் இவ்வுலகில் குபேர வாழ்க்கையை- சொர்க்கலோக வாழ்க்கையை அடைந்தார்கள்.

ஆனால் அவர்கள் செய்து முடித்த எந்த பாவமான செயலுக்கும், அநீதியான செயலுக்கும், அக்கிரமமான செயலுக்கும், ஒழுக்கமற்ற செயலுக்கும் அணுவத்தனை கூட தண்டனையோ துன்பமோ அனுபவிக்கவில்லை. மரணத்திற்குப் பின் மனிதனுக்கு வாழ்வு உண்டு என்று உறுதியாக நம்பும் முஸ்லிம்களோ நிச்சயமாக அப்படிப்பட்டவர்கள் இவ்வுலகளில் மக்களையும், அரசுகளையும், அதிகாரிகளையும் ஏமாற்றித் தப்பிக் கொண்டாலும் இறைவனுடைய தர்பாரில் தப்பவே முடியாது. அங்கு வசமாக மாட்டிக் கொள்வார்கள். கடுமையான தண்டனைகள் அவர்களது குற்றச் செயல்களுக்குக் காத்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லி விடுவார்கள். ஆனால் இறைவனையும், மறுமையையும் மறுக்கும் நாத்திகர்கள் இப்படிச் சொல்ல முடியாது.

அப்படியாயின் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைப்படி இப்படிப்பட்ட பாவமான, அநீதியான, அக்கிரமமான, ஒழுக்கமற்ற செயல்களைச் செய்து வளமான வாழ்வை அமைத்துக் கொண்ட கொடியவர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவிப்பது எப்போது? பகுத்தறிவு ரீதியாக விடை தரக்கடமைப் பட்டிருக்கிறார்கள். ஒன்று புழு, பூச்சி, மிருகம் போன்ற படைப்பினங்களைப் போல், மனிதனும் "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the fittest) என்ற கோட்பாட்டின்படி வாழக் கடமைப்பட்டவன் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லை அது பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று சொன்னால் இந்த சட்டத்தை வகுத்தளித்த சக்தி எது என்பதையாவது தெளிவு படுத்த வேண்டும்.

மேலும் அவர்களே அவர்களது மனட்சாட்சிப்படி பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று அப்பட்டமாக ஒப்புக் கொண்டுவிட்டு மறைமுகமாக அவற்றைச் செய்யத் தூண்டும் சக்தி எது என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். இப்படி மனட்சாட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டு சொத்துக்களை குவித்து உலகில் குபேர வாழ்க்கை, சொர்க்கலோக வாழ்க்கை வாழ்ந்து மடியும் சண்டாளர்கள் தங்களின் குற்றங்களுக்குரிய தண்டனைகளை அனுபவிப்பது எப்போது? எங்கே? என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். இந்த எமது சந்தேகங்களுக்கெல்லாம் பகுத்தறிவு ரீதியான விளக்கங்களை அவர்கள் தரவேண்டும், அப்படியானால் மட்டுமே அவர்களைப் பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்றவர்களாக உலகம் ஒப்புக் கொள்ளும். இல்லை என்றால் புறக்கண்ணால் பார்த்தே கடவுளை, மறுமையை ஏற்பேன் என்ற ஐயறிவு வாதத்தையே அவர்கள் முன் வைக்கிறார்கள் என்ற முடிவுக்கே முறையான பகுத்தறிறவை- நுண்ணறிவை உடையவர்கள் வர நேரிடும்.

பாவமான, அநீதமான, அக்கிரமமான, ஒழுக்கமற்ற செயல்களைச் செய்கிறவனின் மனச்சாட்சியே அவனைக் கொள்ளாமல் கொன்று கொண்டிருக்கும்; அதுவே அவனுக்குரிய தண்டனையாகும் என்ற பிதற்றலான, மழுப்பலான, நழுவலான பதிலை அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கவில்லை. காரணம் இந்த வாதம் உண்மையானால், இவ்வுலகிலும் அதே வாதப்படி அக்குற்றச் செயல்களுக்கு அரசுகளும் எவ்விதத் தண்டனையும் அளிக்கக் கூடாது. அவர்களின் மனட்சாட்சியே அக்கயவர்களை கொல்லாமல் கொள்வதே போதுமானதாகும் என்பதையும் நாத்திகர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்? எதைச் சரிகாணப்போகிறார்கள் நாத்திகர்கள்?


நன்றி: Readislam.net


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Labels: , , , , , , ,

Friday, August 28, 2009

இவ்வுலக வாழ்க்கைக்கு பகுத்தறிவு அவசியமா?


பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு! - அபூ பாத்திமா


தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள். மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே! அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே! ஓரிறைவன், மறு உலக வாழ்க்கை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளின் கற்பனை என்று கூறி வருகிறார்கள்.

அவர்களின் பிரதான அடிப்படைக் கொள்கை மனிதனும் எண்ணற்ற பிராணிகளைப் போல் ஒரு பிராணி என்பதேயாகும். மனிதப் பிராணி அல்லாத இதர அனைத்துப் பிராணிகளுக்கும் இருப்பது ஐயறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் விசேஷமாக ஆறாவது அறிவான பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஓரிறை மறுப்பாளர்களான பகுத்தறிவு நாத்திகர்களும் மறுக்க மாட்டார்கள்.

முதலில் இந்த பகுத்தறிவு என்றால் என்ன? என்பதை ஆய்வு செய்துவிட்டுப் பின்னர் விசயத்திற்கு வருவோம். இதர பிராணிகளுக்க இருப்பது போல் பார்த்து அறிவது, கேட்டு அறிவது, முகர்ந்து அறிவது, ருசித்து அறிவது, தொட்டு அறிவது என இந்த ஐயறிவுகளும் (ஐம்புலன்களும்) மனிதனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஐயறிவு துணையுடன் ஆய்ந்தறியும் திறனான பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இற்த பகுத்தறிவு மேலே குறிப்பிட்டுள்ள ஐயறிவுகளின் உதவி கொண்டு மட்டுமே செயல் படமுடியும். இந்த ஐயறிவுகள் வராத - கட்டுப்படாத பல பேருண்மைகளை மறுக்கும் நிலையில் பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் இருக்கின்றனர். அந்த பேருண்மைகளை பின்னர் ஆய்வுக்கு எடுப்போம்.

இப்போது நாம் எடுத்துக் கொண்ட விஷயம் பகுத்தறிவாளர்கள் சொல்வது போல் மனித வாழ்க்கை அற்பமான இவ்வுலகோடு முற்றுப் பெறுவதாக இருந்தால், அப்படிப்பட்ட மனிதப் பிராணிக்கு பகுத்தறிவு தேவையா? என்பது தான். இன்று உலகில் கோடானுகோடி ஐயறிவு பிராணிகளைப் பார்க்கிறோம். அவை ஆறறிவு மனிதனை விட மிகமிக மகிழ்ச்சியாக, சந்தோசமாக, களிப்புடன் வாழ்ந்து வருகின்றன. விரும்பியதை விரும்பிய அளவு உண்டு மகிழ்கின்றன. குடித்து மகிழ்கின்றன. தங்களின் ஜோடிகளோடு இணைந்து சந்ததிகளை தாராளமாகப் பல்கிப் பெருகச் செய்கின்றன. அவற்றிற்கு ஏதாவது இடையூறுகள் வருவதாக இருந்தால் அவை ஆறறிவு படைத்த மனிதனால் மட்டுமே ஏற்படுவதேயாகும். மற்றபடி அவற்றிற்கு கட்டுப்பாடோ விதிமுறைகளோ எதுவுமே இல்லை.

மானத்தை மறைப்பதற்கென்று அவற்றிற்கு விதவிதமான ஆடைகள் தேவையில்லை. ஒண்ட வீடுகள் தேவையில்லை. இன்ன ஆணுடன் தான் இணைய வேண்டும்; இன்ன பெண்ணுடன் தான் இணைய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை; அப்படி மாறி மாறி இணைவதால் எய்ட்ஸ் என்ற ஆட்கொல்லி நோயும் அவற்றிற்கு ஏற்படுவதில்லை. இன்னாருடைய மகன் இன்னார் என்ற வாரிசுப் பிரச்சினையும் இல்லை. உண்டு, பழித்து, ஜோடியுடன் கலந்து அனுபவித்து, மாண்டு மண்ணோடு மண்ணாகப் போகும் நிலை. நாளைக்கு நமது நிலை என்ன? சாப்பாட்டு பிரச்சினை என்ன? மனைவிப் பிரச்சினை என்ன? மக்கள் பிரச்சினை என்ன? அந்தப் பிரச்சினை என்ன? இந்தப் பிரச்சினை என்ன? என பல்வேறு பிரச்சினைகளால் அல்லும் பகலும் அவதியுற்று அல்லல்படும் நிலை ஐயறிவு பிராணிகளுக்கு இல்லை. ஆறறிவு மனிதப் பிராணியை விட ஐயறிவு பிராணிகள் மகிழ்ச்சிகரமாக, எவ்வித கெளரவ பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து மடிகின்றன என்பதை பகுத்தறிவாளார்கள் மறுக்க முடியுமா?

சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிராதயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைகள் , குண்டு கலாச்சாரம் இவற்றில் எதனையும் ஐயறிவு பிராணிகளிடையே பார்க்க முடிகிறதா? இல்லையே! நாளை நடப்பதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து மடிகின்றன. சொத்து, சுகங்களையோ, உணவு வகைகளையோ அவை சேர்த்து வைக்காவிட்டாலும் அதனால் அவை துன்பப்பட்டதுண்டா? உணவில்லாமல் பட்டினியால் மடிந்ததுண்டா?

பகுத்தறிவாளர்களே! சிறிது உங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்திப் பாருங்கள். இவ்வுலகோடு மனித வாழ்க்கை முற்றுப் பெறுவதாக இருந்தால், மனிதனுக்கும் மற்ற ஐயறிவு பிராணிகள் போல் பகுத்தறிவு கொடுக்கப்படாமல் இருந்தால், மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக, மகிழ்ச்சிகரமாக, கவலையோ, துக்கமோ இல்லாமல், சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைச் செயல்கள், வெடிகுண்டு, அணுகுண்டு கலாச்சாரங்கள், தற்கொலைப்படைத் தாக்குதல்கள் இவை எவையுமே இல்லாமல் மிக, மிக நிம்மதியாக வாழ்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகலாம். அப்படியானால் ஐயறிவு மிருகங்களுக்குக் கொடுக்கப்படாத இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையே இல்லாத பிரத்தியேக பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும் ஏன் கொடுக்கப்ட்டுள்ளது? முறையாக நடுநிலையோடு உங்களின் பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்தினால், இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கை - பரீட்சை வாழ்க்கை என்பதை உங்களாலும் புரிந்து கொள்ள முடியும்.

இன்று அனைத்து நாடுகளிலும் நீக்கமறக் காணப்படும் இனவெறி, மதவெறி, மொழி வெறி, ஜாதி வெறி, நிறவெறி என பல்வேறு வெறிகளால் இந்த மனித இனம் கூறு போடப்பட்டு நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வதற்கு இந்த ஆறாவது அறிவான பகுத்தறிவுதான் காரணம் என்பதை பகுத்தறிவாளர்களால் மறுக்க முடியுமா? மதங்களின் பெயரால் கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து மதப்புரோகிதர்கள் செய்து வரும் அட்டூழியங்கள், ஈவிரகமற்ற கொடூர செயல்கள், கொலை பாதகச் செயல்கள், மதப்புரோகிதர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என மார்தட்டிக் கொண்டு, மதப்புரோகிதர்களின் அனைத்து வகை ஈனச்செயல்கள், அட்டூழியங்கள் , அக்கிரமங்கள், வன்முறைச் செயல்கள் அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து செய்து வரும் அரசியல்வாதிகள் என்ற அரசியல் புரோகிதர்கள் (தொண்டைத் தொழிலாக்கி தொப்பையை நிரப்புகிறவர்கள் அனைவரும் இடைத்தரகர்களே - புரோகிதர்களே), ஏழைகளின் வயிற்றில் அடித்து, அவர்களின் உரிமைகளைப் பறித்து, மதப்புரோகிதர்களையும், ஆட்சியாளர்களையும், அரசியல் வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு குறுக்கு வழிகளில் பல நூறு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துக் குவிக்கும் கோடீஸ்வரர்கள், இப்படி அனைவரின் மனச்சாட்சிக்கும் விரோதமான அநியாய, அக்கிரம, அட்டூழிய செயல்களுக்கு இந்தப் பாழும் பகுத்தறிவு தானே காரணம்? இவ்வுலக வாழ்க்கையில் மனிதனுக்கு பகுத்தறிவு மட்டும் இல்லாவிடில், மற்ற பிராணிகளைப் போல், ஐயறிவுடன் மட்டும் வாழ்ந்தால் இந்தப் படுபாதகச் செயல்கள், அட்டூழியங்கள், அநியாயங்கள் இடம் பெறுமா? மனித அமைதி கெடுமா?

கடவுள்களின் பெயரால் மதங்களை கற்பனை செய்து பலவித அநியாயங்கள் நடக்கின்றன என காரணம் கூறி, மனிதப் பகுத்தறிவைக் கொண்டு கற்பனை செய்யப்பட்ட பொய்க் கடவுள்களோடு, அகில உலகையும் மனிதனையும் படைத்து நிர்வகித்து வரும் ஒரே கடவுளை மறுக்கத் துணிந்த பகுத்தறிவாளர்கள், கடவுளின் பெயரால் வெறியூட்டும் மதங்கள், அரசியலின் பெயரால் அட்டூழியங்கள், கோடீஸ்வர குபேரர்களின் தில்லுமுல்லுகள் என அனைத்திற்கும் காரணமான இந்தப் பகுத்தறிவை அழித்தொழிக்க முற்படுவதில்லையே! ஏன்? மனித வாழ்க்கை இவ்வுலகுடன் முடிவுக்கு வருகிறதென்றால் இவ்வுலக வாழ்க்கைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத பகுத்தறிவு ஏன்? ஏன்?? ஏன்??? தாங்களும் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொள்வதாலா? தாங்களும் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருப்பதலா? பகுத்தறிவை நியாயப்படுத்துகிறீர்கள்? விடை தாருங்கள் பகுத்தறிவாளர்களே!

பகுத்தறிவு மனிதனுக்கு இயற்கையிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது; அதனை அழிக்க முடியாது என்பது பகுத்தறிவாளர்களின் பதிலாக இருந்தால், பகுத்தறிவில்லா ஐயறிவு பிராணிகள் போல் மனிதனும் ஒரு பிராணியே! இவ்வுலகில் வாழ்ந்து மடிவதோடு அவனது முடிவு ஏற்பட்டு விடுகிறது என்று எந்தப் பகுத்தறிவின் அடிப்படையில் கூறுகிறீர்கள்? பகுத்தறிவின் மூலம் மனிதப்படைப்பு ஐயறிவு மிருகப் படைப்பிலிருந்து வித்தியாசப்படுகிறது என்பதை உங்களால் பகுத்தறிய முடியவில்லையா?

இவ்வுலக வாழ்ககைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத, அதே சமயம் இவ்வுலக மனித மற்றும் படைப்புகளின் நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கைக்கு பல வகையிலும் இடையூறு விளைவிக்கும் இந்தப் பகுத்தறிவு ஓர் உன்னத நோக்கத்தோடுதான் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உங்களால் உய்த்துணர முடியவில்லையா?

பகுத்தறிவாளர்களே! நீங்கள் பகுத்தறிவு, பகுத்தறிவு என பீற்றிக் கொள்வது உங்களுக்கிருக்கும் ஐயறிவைக் கொண்டு, அவை கொடுக்கும் ஆதாரங்களை மட்டும் வைத்து விளங்கிக் கொள்ளும் அற்ப விஷயங்கள் மட்டுமே. மற்றபடி உங்களது ஐம்புலன்களுக்கு எட்டாத, கட்டுப்படாத நுட்பமான உண்மைகளை கண்டறியும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை; அதாவது மதப்புரோகிதர்கள் கற்பனையில் உருவான கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுக்கும், பகுத்தறிவாளர்களாகிய உங்களையும், என்னையும் அகில உலக மக்களையும், அகிலங்களையும் சோதனைக்காக - பரீட்சைக்காக படைத்து சுதந்திரமாக நம்மை செயல்படவிட்டிருக்கும் ஒரேயொரு உண்மைக் கடவுளுக்குமுள்ள வேறுபாட்டை உங்களால் பகுத்தறிய முடியவில்லை. உண்மைக் கடவுளை உய்த்துணரும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை, சாந்தி மார்க்கத்தின் உறுதி மொழியின் ஆரம்ப பாதியை மட்டும் கூறி, அரைக்கிணறு தாண்டி கிணற்றின் உள்ளே விழும் மிகமிக ஆபத்தான, அபாயகரமான நிலையில் நுண்ணறிவில்லா பகுத்தறிவாளர்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என குற்றப் படுத்துகிறோம்; முறையாக நுண்ணறிவுடன் பகுத்தறிய வேண்டுகிறோம்.

(நபியே?!) நீர் கூறுவீராக: இறைவன் அவன் ஒருவனே. இறைவன் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை, (எவராலும்)பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. - திருக்குர்ஆன் - 112:1-4


நன்றி: Readislam.net


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here


Labels: , , , , , , ,

Wednesday, August 19, 2009

இயேசுவா? அல்லது இம்மானுவேலா?


இயேசுவின் வருகையும் - பொருத்தமற்ற முன்னறிவிப்புகளும்! (பாகம் 1)


இயேசுவின் வரலாற்றை விவரிப்பதாக சொல்லப்படும் புதிய ஏறபாட்டின் முதல் நான்கு சுவிசேஷங்களில் அவரைப் பற்றிய உன்மையான செய்திகளுக்கு பதிலாக, பல பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட, முரண்பாடான செய்திகளே அதிகமதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நாம் பல கட்டுரைகள் வாயிலாக அறிந்து வருகின்றோம்.

அதன் தொடர்ச்சியாக, இயேசுவின் பெயரால் இன்னும் என்னென்ன வகையிலான பொய்ச்செய்திகள் சுவிசேஷ எழுத்தாளர்கள் மூலம் பைபிளில் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கும் மற்றொரு ஆதாரமே இயேசுவின் பெயரால் கூறப்பட்டுள்ள பொருத்தமற்ற முன்னறிவிப்புகள்.

குறிப்பாக, புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு சுவிசேஷங்களில் இயேசுவின் வாழ்வில் நடந்ததாக சொல்லப்படும் பல சம்பவங்கள், முந்தைய தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்டு அது நிறைவேறும் வகையில் நடந்ததாகவும், அதன் மூலம் இயேசுவின் வருகை முழுமையாக நிறைவு செய்யப்பட்டுவிட்டது என்பது போன்ற ஒரு தோற்றம், சுவிசேஷ எழுத்தாளர்களால் ஏற்படுத்தப்படுகின்றது.

உண்மையிலேயே இயேசுவைப் பற்றித்தான் அந்த முன்னறிவிப்புகள் குறிப்பிடுகின்றது என்றால் அதை எடுத்துக்கூறுவதில் யாருக்கும் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இருக்கபோவதில்லை. ஆனால், இயேசுவுக்கு எந்தவகையிலும் சம்பந்தமில்லாத - அவரது காலத்தில் நடந்த நிக்ழ்சிகளுடன் எந்தவகையிலும் ஒத்துப்போகாத - இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால் முன்னறிவிப்பாவே சொல்லப்படாத பல வசனங்களை இயேசுவோடு சம்பந்தப்படுத்தி, 'அவரது வருகையின் மூலம் இது நிறைவேறியது' என்பது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை ஏன் ஏற்படுத்த வேண்டும்? அதன் மூலம் அவரின் வருகையையே பலர் சந்தேகிக்கும் அளவுக்கு ஒரு தவறான கண்னோட்டத்தை ஏன் உருவாக்க வேண்டும்? என்பது தான் பலராலும் எழுப்பப்பட்டு வரும் நியாயமான கேள்வி என்பதை கிறிஸ்தவ சகோதரர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

பைபிளில் எப்படிப்பட்ட பொய்யான, இயேசுவுக்கு சற்றும் சம்பந்தமில்லாத, தவறான முன்னறிவிப்புகளை இயேசுவின் பெயரால் இட்டுக்கட்டியுள்ளார்கள் என்பதையும், அதை எந்த அளவுக்கு கிறிஸ்தவர்கள் கண்மூடித்தனமாக பின்பற்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் இனி தொடராக பார்ப்போம்:

இயேசுவா? அல்லது இம்மானுவேலா?

இயேசுவின் தாய் மரியாள் இறை அதிசயத்தின் மூலம் இயேசுவைக் கருவுற்றிருக்கும் பொழுது, அவருக்கு கணவனாக நிச்சயிக்கப்பட்டிருந்த யோசேப்பு, மரியாளுடைய கர்ப்பத்தைக் குறித்து சந்தேகித்ததாகவும், அதன் காரணமாக, அவரை தள்ளிவிட யோசித்துக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் யோசேப்புக்கு கணவில் தோன்றி, நடந்த உன்மைகளைக் கூறியதுடன் அவரை தள்ளிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும், மத்தேயு தனது சுவிசேஷத்தில் குறிப்பிடுகின்றார். அப்போது கர்த்தருடைய தூதன் யோசேப்பினிடத்தில், பின்வரும் ஒரு செய்தியையும் கூறியதாக மத்தேயு பதிவு செய்கின்றார்:

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். - மத்தேயு 1:21

இத்துடன் கர்த்தருடைய தூதன் கணவின் மூலம் யோசேப்பிடம் கூறிய செய்தி முடிவடைந்து விடுகின்றது.

ஆனால், இந்த சுவிசேஷத்தை எழுதிய மத்தேயுவோ, இந்த சம்பவத்திற்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத ஒரு கருத்தை - அதுவும் மேலே நாம் எடுத்துக்காட்டிய மத்தேயு 1:21ம் வசனத்திற்கு மாற்றமான ஒரு கருத்தை, அதன் அடுத்தடுத்த வசனங்களிலேயே பதிவு செய்கின்றார்:

தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். - மத்தேயு 1:22-23

அதாவது முன்னர் வந்த தீர்க்கதரிசியால் முன்னறிவிக்கப்பட்ட செய்தி ஒன்று நிறைவேறும் வகையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக இந்த வசனத்தின் மூலம் மத்தேயு குறிப்பிடுகின்றார்.

ஆனால், இந்த சம்பவத்திற்கும், மத்தேயு எடுத்துக்காட்டும் இந்த முன்னறிவிப்பிற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கின்றதா? என்றால் ஒன்றும் கிடையாது.

ஏனெனில் கர்த்தருடைய தூதன் யோசேப்பிடம் கூறியதாக சொல்லப்படும் செய்தியில், 'மரியாள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு 'இயேசு' என்று பெயரிடுவாயாக' என்று கூறப்படுகின்றது. ஆனால் இந்த சம்பவத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக, மத்தேயுவால் எடுத்துக்காட்டப்படும் முன்னறிவிப்பிலோ, 'ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்' என்றிருக்கின்றது. இந்த வசனத்தின் படி பார்த்தால், இயேசு பிறந்ததும் அவருக்கு 'இம்மானுவேல்' என்று பெயரிட்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் இந்த முன்னறிவிப்பு அவருக்கு பொருந்துவதாக அமையும். அதைத்தான் இந்த வசனமும் குறிப்பிடுகின்றது. ஆனால், அவ்வாறு அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிட்டார்களா? என்றால் கிடையாது.

மத்தேயுவால் முன்னறிவிப்பாக எடுத்துக் காட்டப்படும் இந்த வசனத்தில் மிகத் தெளிவாக, 'கன்னிகை கர்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்' என்று கூறப்படுகின்றது. ஆனால் இயேசுவுக்கு 'இம்மானுவேல்' என்று பெயர் சூட்டப்பட்டாக பைபிளில் எந்த ஒரு வசனமும் கிடையாது. இதை எடுத்துக்கூறும் மத்தேயு தனது சுவிசேஷத்தில் கூட, அப்படி ஒரு பெயர் சூட்டப்பட்டதாக எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடவும் இல்லை. அப்படி பெயர் சூட்டப்பட்டதாக முழு பைபிளிலிருந்து ஒரு வசனத்தையும் யாராலும் காட்ட முடியாது. இயேசுவுக்கு இம்மானுவேல் என்ற பெயரை அவரது தாயார் சூட்டவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவரது காலத்தில் - அந்தப் பெயரை வைத்து வேறு யாராவது அவரை 'இம்மானுவேல்' என்று அழைத்துள்ளார்களா? என்றால் அதுவும் கிடையாது. மொத்த பைபிளிலும் அப்படி அழைத்ததாக எந்த ஒரு குறிப்பும் கிடையாது. அப்படி இருக்க இந்த இம்மானுவேல் என்ற முன்னறிவிப்பு, இயேசுவுவைப் பற்றி சொல்லப்பட்டதாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? இதை முதலில் கிறிஸ்தவ சகோதரர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.

அடுத்து, மத்தேயுவால் சுட்டிக்காட்டப்படும் இந்த 'இம்மானுவேல்' என்ற முன்னறிவிப்பு, பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் ஒன்றான ஏசாயாவின் 7:14ம் வசனத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த வசனம் இதோ:

அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள் நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ? ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார். இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். - ஏசாயா 7:13-14

இந்த வசனத்தைத் தான் மத்தேயு தனது சுவிசேஷத்தில் குறிப்பிட்டுவிட்டு, இயேசுவின் மூலமாக இந்த முன்னறிவிப்பு நிறைவேறியதாக எழுதுகின்றார். இவர் குறிப்பிடுவது போன்று இந்த முன்னறிவிப்பு இயேசுவைத்தான் குறிக்குமா என்றால் கண்டிப்பாக குறிக்காது. ஏனெனில், இங்கே முன்னறிவிக்கப்படும் 'இம்மானுவேல்' என்பவரை எப்படி அடையாளம் கண்டுக்கொள்வது? அவர் என்னென்ன செய்வார்? அவர் எப்படி எல்லாம் நடந்துக்கொள்வார்? அவரது காலத்தில் என்னென்ன அiடாயளங்கள் நடக்கும்? என்பதை இதே ஏசாயா 7 ம் அதிகாரத்தின் 15-25ம் வசனங்களில் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றது. அந்த அடையாளங்களில் ஒன்று கூட இயேசுவுக்குப் பொருந்திப்போகவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயது மட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார். அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும். எப்பிராயீம் யூதாவைவிட்டுப்பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் கர்த்தர் உன்மேலும், உன் ஜனத்தின்மேலும், உன் பிதாவுடைய வம்சத்தின்மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரப்பண்ணுவார். அந்நாட்களிலே, கர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியாதேசத்திலிருக்கும் தேனீயையும் பயில்காட்டி அழைப்பார். அவைகள் வந்து ஏகமாய் வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முட்காடுகளிலும், மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும். அக்காலத்திலே ஆண்டவர் கூலிக்குவாங்கின சவரன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால், தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து, தாடியையும் வாங்கிப்போடுவிப்பார். அக்காலத்தில் ஒருவன் ஒரு இளம்பசுவையும், இரண்டு ஆடுகளையும் வளர்த்தால், அவைகள் பூரணமாய்ப் பால் கறக்கிறபடியினால் வெண்ணெயைச் சாப்பிடுவான். தேசத்தின் நடுவில் மீதியாயிருப்பவனெவனும் வெண்ணெயையும் தேனையுமே சாப்பிடுவான். அந்நாளிலே, ஆயிரம் வெள்ளிக்காசு பெறும் ஆயிரம் திராட்சச்செடியிருந்த நிலமெல்லாம் முட்செடியும் நெரிஞ்சிலுமாகும். தேசமெங்கும் முட்செடியும் நெரிஞ்சிலும் உண்டாயிருப்பதினால், அம்புகளையும் வில்லையும் பிடித்து அங்கே போகவேண்டியதாயிருக்கும். மண்வெட்டியால் கொத்தப்படுகிற மலைகள் உண்டே முட்செடிகளுக்கும் நெரிஞ்சில்களுக்கும் பயப்படுவதினால் அவைகளில் ஒன்றிற்கும் போகக்கூடாமையினால், அவைகள் மாடுகளை ஓட்டிவிடுவதற்கும், ஆடுகள் மிதிப்பதற்குமான இடமாயிருக்கும் என்றான். - ஏசாயா 7:15-25

இந்த வசனங்களில் சொல்லப்படக்கூடிய எந்த அடையாளமாவது இயேசுவிற்கு பொருந்துகின்றதா? இங்கே குறிப்பிடப்படும் அடையாளங்களில் எந்த ஒரு அடையாளமாவது அவரது காலத்தில நடந்ததாக ஒரு பைபிள் வசனமாவது இருக்கின்றதா? என்றால் முழு பைபிளிலும் - ஒரு இடத்திலும் கிடையாது. இப்படி எந்த வகையிலும் இம்மானுவேலைக் குறித்த இந்த அடையாளங்கள் இயேசுவுக்குப் பொருந்திப்போகாமல் இருக்கும் நிலையில், எப்படி இந்த முன்னறிவிப்பு அவரைக் குறித்து சொல்லப்பட்டதாக இருக்க முடியும்? எனவே இம்மானுவேல் என்ற இந்த முன்னறிவிப்பை பொறுத்தவரை, மத்தேயு போதிய ஞானமின்றி - தவறாக குறிப்பிட்டிருக்க வேண்டும். அல்லது அவரது சுவிசேஷத்தில் இயேசுவின் பெயரால் வேறு யாராவது இந்த வசனத்தை திணித்திருக்கவேண்டும். எது எப்படி இருந்தாலும் இந்த முன்னறிவிப்பு இயேசுவுக்கு எந்த வகையிலும் பொருந்தாது என்பது மட்டும் நிச்சயம்.

அடுத்து, மத்தேயு சுவிசேஷத்தில் தவறாக கோடிட்டுக்காட்டப்படும் 'இம்மானுவேல்' என்ற இந்த முன்னறிவிப்பு இயேசுவிற்கு எந்த வகையிலும் பொருந்தாது என்பதுடன், அப்படிப்பட்ட பெயர் அவருக்கு சூட்டப்பட்டதாகவோ அல்லது அந்தப் பெயரில் அவரை யாரும் அழைத்ததாகவோ பைபிளில் எந்த ஒரு சான்றுகளும் இல்லை என்பதையும், போதுமான ஆதாரங்களுடன் மேலே நாம் பார்த்தோம். இது ஒரு புறமிருக்க, இந்த ஏசாயா 7:14ம் வசனத்தில் கூறப்படும் 'கன்னிகை' என்ற வார்த்தை இயேசுவின் தாய் மரியாளையே குறிக்கும் என்ற ஒரு வாதத்தையும் கிறிஸ்தவர்கள் முன்வைக்கின்றனர்.

இதுவும் சரியான வாதமன்று. ஏனெனில், 'இம்மானுவேல்' பற்றி முன்னறிவிக்கப்படும் ஏசாயா 7:14ம் வசனத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:

ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார் இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.- ஏசாயா 7:14

Therefore the Lord himself shall give you a sign; Behold, a virgin shall conceive, and bear a son, and shall call his name Immanuel.

இந்த வசனத்தில் இடம் பெரும் 'கன்னிகை' (virgin) என்ற சொல்லிற்கு, பழைய ஏற்பாட்டின் மூலமொழியாகக் கருதப்படும் எபிரேயு பைபிளில் இடம்பெற்றுள்ள வார்த்தை Almah (עלמה) என்பதாகும். இந்த Almah (עלמה) என்ற வார்த்தைக்கு Young Woman - இளம் பெண்' என்ற பொருள்தானே தவிர, கிறிஸ்தவ பைபிள்களில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது போல் 'virgin - கன்னிகை' என்ற பொருள் வராது. அப்படியே இந்த இடத்தில் 'virgin - கன்னிகை' என்று மொழிப்பெயர்ப்பதாக இருந்தால், உன்மையில் மூலமொழியில் இடம்பெற்றிருக்க வேண்டிய எபிரேயுச் சொல் Bethulah ("בתולה"), என்பதாகும்.

ஆனால், அவ்வாறு Bethulah ("בתולה") என்ற வார்த்தை இடம்பெறாமல், 'Young woman - இளம் பெண்' என்ற பொருள் தரும் Almah (עלמה) என்ற சொல்லே எபிரேயு பைபிளில் இடம்பெற்றுள்ளதால், இந்த வார்த்தை மரியாளை மட்டும் பிரத்யோகமாக குறிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், இந்த Almah (עלמה) என்ற Young woman - இளம் பெண் என்பவள் திருமணம் முடித்து உடலுறவுக் கொள்ளப்பட்ட பெண்ணாகவும் இருக்கலாம் அல்லது திருமணம் முடிக்காத இளம் பெண்ணாகவும் இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் இது ஒரு பொதுவான பருவ வயதை அடைந்த பெண்ணைதான் குறிக்குமே தவிர, பிரத்யோகமாக கண்ணிப்பெண்ணை மட்டும் குறிக்காது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதை ஏன் இங்கே தெரியப்படுத்துகின்றோம் என்றால், மத்தேயு சுவிசேஷத்தில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ள இம்மானுவேல் என்ற முன்னறிவிப்பு இயேசுவுக்கு அறவே பொருந்தாது என்பதால், அதை வேறு எந்த வகையிலாவது இயேசுவோடு சம்பந்தப்படுத்திவிட வேண்டும் என்பதற்காக, Almah (עלמה) என்ற வார்த்தையை 'கன்னிகை - Virgin' என்று (கிறிஸ்தவ பைபிள்களில்) மொழிப்பெயர்த்து - அது இயேசுவின் தாய் மரியாளையே குறிக்கும் என்று வாதிடுகின்றனர். காரணம், அன்றைய காலத்தில் எந்த ஒரு பெண்ணும் ஆண் துணையின்றி கர்ப்பமடைய முடியாது. இறைவனின் அற்புதம் நிகழ்ந்தாலே தவிர. ஆனால், அன்றைய காலத்தில் ஒரு பெண் - ஒரே ஒரு பெண் - கன்னி கழியாமல் - உடளுறவுக் கொள்ளப்படாமல் (இறை அதிசயத்துடன்) கர்ப்பமடைந்தார் என்றால் அவர் மரியாள் மட்டுமே. எனவே இந்த இடத்தில் Virgin - கன்னிகை என்று மொழிப்பெயர்த்து விட்டால், அது இயேசுவின் தாய் மரியாளையே குறிக்கும் என்ற கருத்தைத் தினிப்பதற்காக இங்கே இவ்வாறு மொழிப்பெயர்த்துள்ளனர். ஆனால் அதற்கும் இங்கே வழி இல்லை என்பது தான் மூல மொழியாகக் நம்பப்படும் எபிரேயு பைபிளிலிருந்து நமக்கு கிடைக்கும் சான்றுகள் என்பதை சகோதரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல, ஏசாயா 7:14ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்க்கதரிசனம் மரியாளை பற்றியதாக இருக்குமானால், அந்த அடையாளத்தைக் கொடுத்த கர்த்தர் அதில் 'கன்னிகை - Virgin' என்பதை மட்டும் பிரத்யோகமாகக் குறிக்கும் Bethulah ("בתולה") என்ற சொல்லை உபயோகிக்காமல் பொதுவான இளம் பெண்களைக் குறிப்பிடும் Almah (עלמה) என்ற சொல்லை உபயோகித்திருப்பாரா என்பதை சிந்தித்துப் பார்த்தாலே, இந்த முன்னறிவிப்பு இயேசுவின் தாயை எந்த வகையிலும் குறிக்காது என்பதை தெளிவாக உணரலாம்.

இன்னும் சொல்லப்போனால், கிறிஸ்தவர்களிடத்தில் பிரபலமாக விளங்கும் ஆங்கில மொழிப்பெயர்ப்பான Revised Standard Version (RSV, NRSV) போன்ற பைபிள்களிலும், யூதர்களால் வெளியிடப்பட்ட Jewish Publication Society of America Version (JPS) மொழிப்பெயர்ப்புகளிலும், இன்னும் வேறு சில பைபிள் மொழிப்பெயர்ப்புகளிலும் இந்த Almah (עלמה) என்ற சொல்லிற்கு 'Young woman - இளம் பெண்' என்றே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, இந்த ஏசாயா 7:14ம் வசனம் இயேசுவை எந்தவகையிலும் குறிக்காது என்பதுடன், மத்தேயு போன்றவர்கள் போதிய ஞானமின்றி தவறாக எழுதிய புத்தகங்களையே கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகங்கள் என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர் என்ற உன்மையை புரிந்துக்கொள்ள வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் கிறிஸ்தவர்களுக்கு சத்தியத்தை அறியும் நல்லதொரு பாக்கியத்தை தந்தருள்வாராக!

குறிப்பு: மத்தேயு சுவிசேஷத்தில் தவறாக கோடிட்டுக்காட்டப்பட்டுள்ள 'இம்மானுவேல்' என்ற இந்த முன்னறிவிப்பில் இன்னும் பல குளறுபடிகளும் இருக்கின்றது என்பதை இங்கே நினைவூட்ட விரும்புகின்றோம். கட்டுரை நீண்டக்கொண்டே செல்வதால் பல விளக்கங்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் அந்த குளறுபடிகளும் விளக்கப்படும்.


இறைவன் நாடினால், பைபிளின் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் தொடரும்...


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Labels: , , , , , ,

Friday, August 07, 2009

இயேசுவின் பிறப்பும் - நட்சத்திரக் கணிப்பும்!


புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்
புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்




புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 3

முரண்பாடு 3:

இயேசுவின் பிறப்பு சம்பந்தப்பட்ட வரலாற்றை பைபிளில் குறிப்பிடும் பொழுது - அவருக்கு புகழ் சேர்க்கின்றோம் என்றப் பெயரில் பல பொய்யான - இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும் சுவிசேஷங்களில் எழுதிவைத்துள்ளனர். குறிப்பாக இந்துமதத்தில் புறையோடிப்போயிருக்கும் போலி கலாச்சாரமான சோதிடம் மற்றும் நாள் நட்சத்திரக் கலாச்சாரத்தையும் மிஞ்சும் வகையில் கதை கட்டியுள்ளது தான் இங்கே கவனிக்கப்படவேண்டிய 'ஹைலைட்' சமாச்சாரம். குறிப்பாக பழைய ஏற்பாட்டு வசனங்களில் கூறப்பட்டதற்கு மாற்றமான ஒரு கருத்தை - தனது சுயக்கருத்தை இயேசுவின் பெயரால் அரங்கேற்றியுள்ளார் சுவிசேஷ எழுத்தாளரான மத்தேயு:

ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து (Magi) சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். - மத்தேயு 2:1-2

அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து: நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள் நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான். ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குள்பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். - மத்தேயு 2:7-11

இந்த வசனங்களின் மூலம், இயேசு என்னும் ஒரு குழந்தை பிறந்திருக்கின்றது என்பதை 'Magi' என்னும் சாஸ்திரிகள் வானத்தில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தின் மூலம் அறிந்துக்கொண்டதாகவும், அந்த நட்சத்திரம் எங்கே சென்று நின்றதோ அதை வைத்து அவர்கள் இயேசுவின் வீட்டை கண்டடைந்ததாகவும் மத்தேயு குறிப்பிடுகின்றார். இந்த கதையின் காரணமாகவே 'கிறிஸ்துமஸ்' கொண்டாட்டங்களில் நட்சத்திர அடையாளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மத்தேயு குறிப்பிடுவது போன்று, இந்த சம்பவம் உன்மையிலேயே நடந்திருக்குமா? என்றால் கண்டிப்பாக நடந்திருக்காது - நடந்திருக்கவும் வாய்ப்பில்லை.

ஏனெனில், இந்த சம்பவத்தைப் பற்றி மத்தேயு குறிப்பிடும் போது 'கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று கேட்டதாகவும், 'கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்' என்று கூறியதாகவும் குறிப்பிடுகின்றார்.

இது உன்மையாக இருந்தால், இந்த சாஸ்திரிகள் நட்சத்திரம் தோன்றிய அடையாளத்தை வைத்து இயேசு பிறந்திருக்கின்றார் என்பதை எப்படி கண்டுபிடித்தனர்? குறிப்பாக யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவரின் அடையாளமான நட்சத்திரம் இது தான் என்பது எப்படி இவர்களுக்குத் தெரிந்தது? இதற்கு ஏதாவது பழைய ஏற்பாட்டு வசனங்களில் ஆதாரம் இருக்கின்றதா? அல்லது இயேசுவின் பிறப்பின் போது இப்படிப்பட்ட ஒரு நட்சத்திரம் வானில் தோன்றும் என்ற முன்னறிவிப்பு ஏதாவது பழைய ஏற்பாட்டில் இருக்கின்றதா? என்றால் ஒரு இடத்திலும் கிடையாது. பழைய ஏற்பாட்டில், இயேசுவின் பிறப்பின் போது, இப்படிப்பட்ட ஒரு அடையாளம் தோன்றும் என்று எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவும் இல்லை. அப்படி இருக்க சாஸ்திரிகளுக்கு நட்சத்திரம் உதயமாவதின் மூலம் இயேசு பிறப்பார் என்பது எப்படித் தெரிந்தது? இதை முதலாவதாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்து, இப்படி எந்த வகையிலும் இதற்கு ஆதாரமான வசனங்கள் பழைய ஏற்பாட்டில் இல்லாதது மட்டுமல்லாமல், இதற்கு எதிரான கருத்தே அதிகமதிகம் காணப்படுகின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். குறிப்பாக நட்சத்திரத்தை வைத்து ஒருவன் எதையேனும் கணித்தானேயானால் அவன் கர்த்தரால் சபிக்கப்பட்டவன் என்றும் இப்படிப்பட்ட செயல்களைச் செய்வது கர்த்தருக்கு அருவருப்பானது என்றும் பைபிள் வசனங்கள் குறிப்பிடுகின்றது. இன்னும் தெளிவாக கூறுவது என்றால், மத்தேயு குறிப்பிடும் இந்த 'Magi' என்னும் சாஸ்திரிகளால் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் கர்த்தரால் முற்றிலும் தடுக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. ஏனெனில் இந்த 'Magi' என்னும் சாஸ்திரிகளின் பிரதான வேலையோ, ஜோதிடம் சொல்வது, நட்சத்திரத்தின் மூலம் நல்லது கெட்டதைக் கணிப்பது, நாள் நட்சத்திரம் பார்ப்பது போன்ற கர்த்தரால் தடை செய்யப்ப்டட செயல்களைச் செய்பவர்கள் என்று பைபிள் அறிஞர்களே குறிப்பிடுகின்றனர்.

தமிழ் பைபிளில் 'சாஸ்திரிகள்' என்று குறிப்பிடப்படும் சொல்லிற்கு கிரேக்க பைபிளில் உபயோகப்படுத்தப்படும் வார்த்தை μαγοι (magos) என்பதாகும். இதற்கு மந்திரவாதிகள், சூனியம் செய்பவர்கள், நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களை வைத்து ஜோதிடம் கூறுபவர்கள் என்று பொருள்படும். இப்படிப்பட்டர்களின் செயல்கள் எந்த அளவுக்குத் கர்த்தரால் தடுக்கப்பட்டது என்பதை பின்வரும் பைபிள் வசனங்கள் குறிப்பிடுகின்றது:

உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய் இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும். இதோ, அவர்கள் தாளடியைப்போல இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும் அவர்கள் தங்கள் பிராணனை அக்கினிஜுவாலையினின்று விடுவிப்பதில்லை அது குளிர்காயத்தக்க தழலுமல்ல எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல. - ஏசாயா 47:13-14

புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள். - எரேமியா 10:2

தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன். இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார். - உபாகமம் 18:10-13

யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக - லேவியராகமம் 19:26

இந்த வசனங்களில் மிகத் தெளிவாக நட்சத்திரங்களின் மூலம் கணிப்பது மிக மிகத் தவறு என்பதுடன், அப்படி செய்பவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் - என்றும் அது கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு செயல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. ஆனால், இதற்கு மாற்றமாக மத்தேயுவோ, நட்சத்திரங்களைப் பார்த்து கணிப்பவர்கள் சாஸ்திரிகள் - ஞானிகள் என்றும், அவர்கள் இயேசுவின் பிறப்பை நட்சத்திரத்தின் மூலம் அறிந்து, அதை வைத்து பிறந்த இடத்தைக் கண்டுபிடித்து இயேசுவையும் அவரது தாயாரையும் பணிந்துக்கொண்டார்கள் என்றும் குறிப்பிடுகின்றார்.

அது மட்டுமல்ல, இந்த சம்பவத்தின் மூலம் மற்றொரு பாரதூரமான கருத்தையும் மத்தேயு பதிவு செய்கின்றார். அதாவது, 'Magi' என்னும் சாஸ்திரிகளின் இந்த தவறான செயலை கர்த்தர் அங்கீகரித்தது போன்ற ஒரு மாயத்தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றார். எப்படியெனில், இயேசு பிறந்தபோது மரியாளின் புருசனாகிய யோசேப்புக்கு கர்த்தருடைய தூதன் கணவில் தோன்றி ஏரோது ராஜாவிடமிருந்து குழந்தை இயேசுவைக் காப்பாற்றும் முகமாக, எகிப்துக்கு ஓடிப்போய்விடும்படி எச்சரித்தது போன்று, இந்த 'Magi' என்னும் சாஸ்திரிகளையும் கர்த்தர் எச்சரித்ததாக எழுதுகின்றார்:

பின்பு, அவர்கள் (சாஸ்திரிகள்) ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். - மத்தேயு 2:12

அதாவது இந்த சாஸ்திரிகள் நட்சத்திரத்தைப் பார்த்து இயேசுவின் பிறப்பை அறிந்துக்கொண்டதன் பின் கர்த்தர் அவர்களுக்கு சொப்பனத்தில் தோன்றி, நீங்கள் கண்டவைகளை குறித்து ஏரோது ராஜவிடம் தெரிவித்து விடாத வண்ணம் வேறு வழியில் சென்று விடுமாறு கூறியதாக எழுதுகின்றார். இதன் மூலம் அவர்களின் செயலுக்கு கர்த்தரின் அங்கீகாரம் கிடைத்தது என்பது போன்ற ஒரு தோற்றம் இங்கே ஏற்படுத்தப்படுகின்றது. ஆனால் இது உன்மையா? இப்படி கர்த்தர் அவர்களிடம் சொப்பனத்தில் தோன்றி பேசியிருப்பாரா? என்றால் கண்டிப்பாக நடந்திருக்காது.

ஏனெனில் நாம் முன்பு ஏடுத்துக்காட்டிய பைபிள் வசனங்களிலோ இப்படி நட்சத்திரங்களின் மூலம் கணிப்பவர்கள் அஞ்ஞானிகள் - அவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் - அவர்கள் செயல்கள் கர்த்தரின் கட்டளைக்கு எதிரானது - கர்த்தர் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார் என்பதை தெளிவாக கூறியிருக்க, பின்னர் எப்படி இந்த சாஸ்திரிகளிடம் கர்த்தர் கணவின் மூலம் பேசி, அவர்களை எச்சரித்திருப்பார்? இது இவர்களின் செயல்களை நியாயப்படுத்தியது போன்று ஆகிவிடாதா?

இயேசுவின் பிறப்பின் போது இது போன்ற ஒரு நட்சத்திரம் தோன்றும் - அதன் மூலம் இயேசுவின் பிறப்பை அறிந்துக்கொள்ளலாம் என்று எந்த ஒரு வசனமும் பைபிளில் முன்னறிவிக்கப்படாததுடன், நட்சத்திரங்களைப் பார்த்து கணிப்பவர்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் என்றும் அப்படிப்பட்டவர்களின் செயல்களை நீங்களும் கற்றுக்கொள்ளாதீர்கள் என்றும் கர்த்தரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டிருக்க, எப்படி இந்த சம்பவம் நடைபெற்றிருக்கும்? அதுவும் சத்தியத்தை மக்களுக்கு போதிக்க வந்த இயேசுவின் வாழ்வில் நடைபெற்றிருக்குமா? இதை கிறிஸ்தவ சகோதரர்கள் நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.

இயேசுவைப் பற்றிய உன்மையான வரலாற்றை சுருக்கமாகவும், தெளிவாகவும், உள்ளதை உள்ளபடி எடுத்துக்கூறக்கூடியது ஒரே ஒரு இறைவேதம் திருக்குர்ஆன் மட்டுமே என்ற உன்மையை கிறிஸ்தவ சகோதரர்கள் புரிந்துக்கொள்ளவேண்டும். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு சத்தியத்தை விளங்கும் பாக்கியத்தை தந்தருள்வாராக!

இறைவன் நாடினால் முரண்பாடுகள் தொடரும்....


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click heree

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.

Labels: , , , , , ,

Friday, July 31, 2009

இயேசுவின் பிறப்பு : முரண்படும் சுவிசேஷங்கள்


புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்


புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 2


இயேசுவின் வரலாற்றை விவரிப்பதாகச் சொல்லப்படும் புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு சுவிசேஷங்களுக்கிடையே பல்வேறு முரண்பட்ட தகவல்கள் காணப்படுகின்றது. குறிப்பாக இயேசு பிறந்தபோது நடைபெற்றதாகச் சொல்லப்படும் செய்திகளை ஒருவன் ஆழ்ந்து படிப்பாரேயானால் இறுதியில் குழப்பம் தான் மிஞ்சும் என்கிற அளவுக்கு சுவிசேஷங்களுக்கிடையே முரண்பாடுகளும் குழப்பங்களும் மலிந்து காணப்படுகின்றது.

இயேசுவினுடைய பிறப்பு ஒரு அதிசயம் என்றாலும், அவற்றைப் பற்றி பைபிளில் சொல்லப்படும் செய்திகளில் பல குழப்பமான செய்திகள் காணப்படுவதால், பைபிளில் கூறப்படும் 'இயேசுவின் வரலாறு' என்பது, இராமாயணம் மகாபாரதம் போன்று, 'இதுவும் ஒரு கற்பனைக் கதாபாத்திரமாக இருக்குமோ' என்று படிப்படிவர்களுக்கு ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் அதிகமதிகம் இருப்பதை நாம் மறுப்பதற்கு இல்லை - மறுக்கவும் முடியாது. அந்த அளவுக்கு அவரை பற்றி சொல்லப்படும் பல செய்திகளில் ஏராளமான முரண்பாடுகள் காணப்படுகின்றது. அதன் வெளிப்பாடாகத்தான் தற்போது மேலைநாடுகளில் கூட்டம் கூட்டமாக தங்களது பூர்வீக மதமான கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறி நாத்திகத்தின் பால் சென்றுக்கொண்டிருக்கின்றனர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் இயேசுவின் வரலாற்றில் சொல்லப்பட வேண்டிய மிக முக்கியமான செய்திகள் பதிவு செய்யப்படாமல், இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதுடன், அதற்கு மாற்றமாக பல பொய்யான இட்டுக்கட்டப்பட்ட - முரண்பாடான செய்திகளே பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதே இந்த நிலை ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களாக அமைந்துள்ளது.

பைபிளில் இயேசுவின் பிறப்பின் போது நடைபெற்றதாக சொல்லப்படும் செய்திகளில் உள்ள முரண்பாடுகளை இனி தொடர்ந்து பார்ப்போம்.

முரண்பாடு 2:

இயேசு பிறக்கும் போது நிலவிய சூழ்நிலை என்ன?

அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான். ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,.... - மத்தேயு 2:13-14

இயேசு பிறந்த போது ஏரோது என்னும் கொடிய அரசன் ஆட்சி புரிந்ததாகவும், அவன் குழந்தை இயேசுவைக் கொல்லத் திட்டமிட்டதாகவும், அதற்குப் பயந்து இயேசுவின் தாய் மரியாளும், அவருக்கு கணவனாக நியமிக்கப்பட்டிருந்த யோசேப்பும், இயேசுவை தூக்கிக்கொண்டு எகிப்துக்குச் சென்றதாகவும் மேற்கண்ட வசனத்தில் மத்தேயு கூறுகின்றார். ஏரோது இறந்த பிறகும் கூட அவனது மகன் அர்கெலாவு என்பவன் ஆட்சிக்கு வந்ததால் அதற்கும் பயந்து கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்கு வராமல் நாசரேத்து எனும் ஊருக்குச் சென்றதாகவும் மத்தேயு 2:19-23ம் வசனங்களில் கூறுகின்றார்.

ஆனால் லூக்காவோ இயேசு பிறந்தபோது சர்வ சாதாரண நிலைதான் நிலவியதாகவும் மத்தேயு கூறுவது போல் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்பது போன்று மறுத்து எழுதுகின்றார்.

இயேசுவின் தாய் மரியாளும் அவருக்கு நியமிக்கப்பட்டிருந்த யோசேப்பும் இயேசு பிறந்தபோது பெத்லகேமில் இருந்ததாகவும் அங்கிருந்து எருசலேமுக்கு வந்து போனதாகவும், அவரது பெற்றோர் வருடம் தோறும் பஸ்கா பண்டிகைக்கு எருசலேமுக்குப் போவார்கள் என்றும் லூக்கா தனது நூலில் குறிப்பிடுகின்றார். பார்க்க லூக்கா 2:1-52

ஏரோது அரசன் இயேசுவைக் கொலை செய்யத் தேடியதையும், அதைத் தொடர்ந்து இயேசுவின் பெற்றோர் எகிப்துக்கு ஓடிப்போனதையும், அதன் பின் ஏரோதுவின் மகன் ஆட்சிக்கு வந்ததையும், எருசலேமுக்குப் போகாமல் அவர்கள் மறைந்து வாழ்ந்ததையும் லூக்கா கூறவில்லை. மாறாக அந்த சமயத்தில் சர்வ சாதாரண நிலை தான் நிலவியதாகவும், ஆண்டு தோரும் எருசலேமுக்கு அவர்கள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள் என்றும் சர்வ சாதாரணமாக அவர்கள் அந்த நாட்டில் நடமாடியதாகவும் கூறுகின்றார்.

பரிசுத்த ஆவியால் தூண்டுதலால் தான் இந்த பைபிள் எழுதப்பட்டிருந்தால் எப்படி இப்படிப்பட்ட முரண் வரும். அதுவும் இரட்சகராக வந்த இயேசு பிறக்கும் போது நடைபெற்ற சம்பவங்களில் இப்படிப்பட்ட ஒரு முரண் வரலாமா? மத்தேயு கூறுவது போல் இயேசு பிறந்த போது பயங்கரமான சூழ்நிலை நிலவியதா? அல்லது லூக்கா கூறுவது போல் சர்வ சாதாரண நிலை நிலவியதா? ஆண்டு தோறும் எருசலேமுக்கு வந்து போவார்கள் என்பது உன்மையா? அல்லது கர்த்தரின் கனவுக் கட்டளைப்படி எகிப்திலேயே இருந்து பின்னர் நாசரேத்துக்குச் சென்றது உன்மையா?

முரண்பாடு : 3

இயேசு பிறக்கும் முன் மரியாளும் யோசேப்பும் எங்கே வசித்தார்கள்? நாசரேத்துக்கு எப்போது சென்றார்கள்?

இயேசு பிறக்கும் வரை யோசேப்பும் மரியாளும் கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில் வசித்ததாகவும் அவர்கள் குடிமதிப்பு எழுதும் வகைலேயே அங்கிருந்து பெத்லகேமிற்குப் போனதாகவும் அங்கேயே மரியாளுக்கு பிரசவகாலம் ஏற்பட்டு, இயேசு பிறந்ததும் குழந்தைக்கு நியாயப்பிரமாணத்தின் படி செய்யப்பட வேண்டிய சடங்குகளை செய்து விட்டு மீண்டும் தங்கள் ஊரான நரசேத்துக்கு திரும்பிச் சென்றதாகவும் லூக்கா கூறுகின்றார்:

ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான். அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். - லூக்கா 1:26-27

அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். - லூக்கா 2:1-7

கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்து முடித்தபின்பு, கலிலேயாநாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள். - லூக்கா 2:39

ஆனால் மத்தேயுவோ இதற்கு நேர் முரணாக, யோசேப்பும் மரியாளும் பெத்லகேமிலேயே வாழ்ந்ததாகவும், அப்போது கர்த்தருடைய தூதன் சொன்னதினிமித்தம் ஏரோதுக்கு பயந்து எகிப்துக்குப் போனதாகவும், ஏரோது மரணமடையும் வரை எகிப்திலேயே தங்கி இருந்ததாகவும், ஏரோதின் மரணத்திற்குப் பின்னர் அவனது மகன் அர்கெலாவு ஆட்சி செய்கிறான் என்று கேள்விப்பட்டு எகிப்திலிருந்து நாசரேத்துக்குப் போய் தங்கியதாகவும் கூறுகின்றார்:

ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடேகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். - மத்தேயு 2:1-3

அவர்கள் அந்த வீட்டுக்குள்பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். - மத்தேயு 2:11

அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான் ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய், ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். - மத்தேயு 2:13-15

ஏரோது இறந்தபின்பு, கர்த்தனுடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு: நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ பிள்ளையின் பிராணணை வாங்கத்தேடினவர்கள் இறந்து போனார்கள் என்றான். அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான். ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய், நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. - மத்தேயு 2:19-23

இங்கே மத்தேயு சொல்லுவது போல் இயேசு பிறக்கும் முன்பு யோசேப்பும் மரியாளும், பெத்லகேமிலேயே வாழ்ந்து வந்தார்களா? அல்லது நாசரேத் என்னும் ஊரில் வாழ்ந்தவர்கள் குடிமதிப்பு எழுதும் வகையிலேயே பெத்லகேமிற்கு சென்றார்களா?

அதன் பிறகு எருசலேமிலிருந்து ஏரேதுக்கு பயந்துக்கொண்டு எகிப்துக்குப் போய் பின்னர் ஏரேதின் மகனுக்கு பயந்து அதன் காரணமாக நாசரேத்துக்கு போனார்களா? அல்லது லூக்கா சொல்வது போல், தங்கள் சொந்த ஊர் என்ற காரணத்திற்காக பெத்லகேமிலிருந்து நேரடியாக நாசரேத்துக்கு போனார்களா? யார் சொல்வது உன்மை? கிறிஸ்தவ மதத்தின் முக்கிய கதாபாத்திரமான இயேசுவின் பிறப்பில் ஏன் இந்த முரண்பாடு? இயேசுவின் வரலாறு ஒரு கட்டுக்கதை என்ற ஒரு தவறான கருத்தை இந்த பைபிள் வசனங்கள் ஏற்படுத்தி விடாதா?


இறைவன் நாடினால் முரண்பாடுகள் தொடரும்...


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

.

Labels: , , , , , ,