அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!
Showing posts with label ஹிஜாப். Show all posts
Showing posts with label ஹிஜாப். Show all posts

Thursday, December 20, 2012

அநாகரிகம்....! தினமணி தலையங்கம் - 20-12-2012

புதுதில்லி புறநகர்ப் பகுதியில் ஓடும் பேருந்தில் ஒரு மாணவி ஒரு கும்பலால் தாக்கப்பட்டு, வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும், பாலியல் கொடுமை குற்றங்களுக்குத் தனியாக விரைவு நீதிமன்றம் தேவை என்றெல்லாம் ஒவ்வொருவரும் ஒரு கருத்தை முன்வைக்கின்றனர்.

இந்தியா முழுவதிலும் இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பல நகரங்களில் பொதுமக்களும் மாணவர்களும் போராட்டங்கள் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். புதுதில்லியில் ஒவ்வொரு நாளும் ஒரு பெண் வல்லுறவுக்கு இலக்காகிறார் என்று தில்லியின் ஒரு பத்திரிகை புள்ளிவிவரம் தருகிறது.

பெண்கள் மீதான பாலியல் வன்முறை அண்மைக்காலமாக அதிகரித்துவிட்டது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இத்தகைய பாலியல் கொடுமைகளில் மிகச் சிலவே வெளிச்சத்துக்கு வருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்தச் சம்பவம் தில்லியில் நடக்காமல், பிகாரின் ஏதாவது ஒரு பழங்குடிப் பெண்ணுக்கு நடந்திருக்குமேயானால், இது நாடு முழுவதும் இத்தகைய எதிர்வினையைச் சந்தித்திருக்குமா? சந்தேகம்தான்.

இதே தில்லி நகரில், ஒரு ஜெர்மனிப் பெண் கடந்த மாதம் 4 பேரால் வல்லுறவுக்கு இலக்கானார். ஆனால், அது பெரிதாகப் பேசப்படவே இல்லை. இந்தச் சம்பவம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்ததால் மட்டுமே இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

கேரளத்தில் ஒரு மாணவி தன் தந்தையாலும் சகோதரராலும் தன் வீட்டுக்குள்ளேயே தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம்கூட கடந்த வாரம் செய்தியாக வந்தது. இதுவும் மறுநாளே மறக்கப்பட்டது.

ஆனால், தில்லியில் நடந்த சம்பவம் அப்படியல்ல. பாதிக்கப்பட்ட துணை மருத்துவ மாணவி ஒரு வளர்இளம் பெண். ஆனால், தனது அறிவீனத்தால் இத்தகைய நேர்வில் சிக்கினார். தனது அறியாமையால் தனக்குத் துன்பத்தைத் தேடிக்கொண்டார். குற்றவாளிகளைத் தண்டிக்கச் சொல்லும் அதேவேளையில், இந்த மாணவியின் செயலை யாரும் பேசக்கூடவில்லை.

துணை மருத்துவப் படிப்பு தொடர்பான பயிற்சிக்காக தில்லி வந்துள்ள, டேராடூன் கல்லூரியின் மாணவி, கணினி நிறுவனத்தில் பணிபுரியும் தனது ஆண் நண்பரான பொறியியல் பட்டதாரியுடன் ஒரு ஞாயிற்றுக்கிழமையை இனிமையாகக் கழிப்பது அவரது விருப்பம். ஆண் நண்பர்களுடன் ஷாப்பிங் மால் செல்வதும், இரவு விருந்துக்குச் செல்வதும் அவரது உரிமை. ஆனால், இரவு 9.30 மணிக்கு, ஒரு தனியார் சொகுசுப் பேருந்தில், அதுவும் பெண்களே இல்லாமல் முரட்டு வாலிபர்கள் மட்டுமே இருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்யும் அளவுக்கு அறியாமையில் இருந்திருக்கிறார். அந்த இரவு வேளையில் அதைப்போன்ற ஆபத்தை அழைக்கும் செயல் வேறேதுமில்லை என்பதை அந்த மாணவியோ, அல்லது அவரது ஆண்-நண்பரோ ஏன் உணர்ந்திருக்கவில்லை?.

காதலுக்குத் தனிமை எத்தனை இனிமை சேர்க்குமோ அதே அளவுக்குத் துன்பத்தையும் கொண்டுவந்து சேர்க்கும் என்ற எச்சரிக்கை உணர்வு இருந்திருந்தால், இந்த ஜோடிகள் இந்த சொகுசு தனியார் பேருந்தைத் தவிர்த்திருப்பார்கள். இதை இந்த சந்தர்பத்தில் 'அசட்டு தைரியம்' என்று நாம் குறிப்பிட்டால், அதை நாம் சம்பவத்தை நியாயப்படுத்துவதாகக் கருதலாகாது. குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக விரைவு நீதிமன்றங்கள் தேவை. இருப்பினும், இத்தகைய நேர்வுகள் பலவற்றைப் பெண்கள் தமது உள்ளுணர்வு மற்றும் விழிப்பினால் தவிர்த்துவிட முடியும்.

ஆண்-நண்பர் தன்னுடன் இருக்கும் தைரியத்தில், பயணிகள் குறைவாக இருக்கும் ரயில்பெட்டியைத் தேடி ஏறுவதையும், பேருந்தில் பின்இருக்கையைத் தேடிப்பிடித்து சிரித்துக் கொஞ்சிப்பேசுவதையும் பெருநகரங்களில் காண முடிகிறது. இது அவர்களது தனிப்பட்ட விருப்பம். ஆனால், அச்செயல் சகபயணிகளின் கவனத்தை மட்டுமின்றி சமூகவிரோதிகளின் கவனத்தையும் ஈர்க்கின்றது. தேவையற்ற ஆபத்துக்கு ரகசிய அழைப்பாக அமைந்துவிடுகிறது. ஆண்கள் கண்மூடிகளாக இருந்தாலும் பெண்கள் விழிப்பாக இருந்தால் ஆபத்துகள் பலவற்றிலிருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட முடியும்.

உடலை அதிகம் வெளிப்படுத்தும் ஆடைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், பெண்கள் மதுக்கூடங்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், நேரத்தோடு வீடு திரும்ப வேண்டும் என்பதும் ஆணாதிக்க உலகத்தால் பெண்களுக்கு விதிக்கப்படும் தடைகள், கட்டுப்பாடுகள் என்று பெண்ணியவாதிகள் விமர்சனம் செய்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்துகொண்டிருக்கும்போது வெளியுலகில் எத்தனை எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும்? என்ற அறிவுறுத்தல் என்பதைப் புரிந்துகொள்வதில்லை.

'எங்கள் உடல் எங்கள் சுதந்திரம்' என்று பதாகையுடன் ஊர்வலம் வருகிறார்கள். 'நாங்கள் ஒழுங்காக ஆடை உடுத்தினால் பாலியல் வன்முறை நின்றுவிடுமா?' என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

'புகைப் பிடிக்காதீர், புற்றுநோய்க்கு ஆளாகாதீர்' என்பது நோய்த்தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மட்டுமே. சிகரெட் பிடிக்காதவருக்கும் நுரையீரல் புற்றுநோய் வருகிறது என்பதால் புகைப்பிடிப்பது ஆரோக்கியமானதாக ஆகிவிடுமா?

'முள் பட்டாலும் முள்ளில் இட்டாலும் முதலில் கிழிவது துணிதான். துணியாய் இருந்து கிழிவதை விடவும் முள்ளாய் இருப்பேன் இனிநான்! கல் பட்டாலும் கல்லில் இட்டாலும் சிதைந்துபோவது கனிதான். கனியாய் இருந்து சிதைவதை விடவும் கல்லாய் இருப்பேன் இனிநான்!' (கவிஞர் வைரமுத்துவின் கவிதை) என்ற மனத்துணிவு கொண்ட பெண்கள் மிகச் சிலர்தான்.

சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லாதது. ஆனால், பெண்கள் சில சுயக்கட்டுப்பாடுகளால் பெறும் விழிப்பு நிலையும், உள்ளுணர்வும் அவர்களைப் பல்வேறு பாலியல் வன்முறைச் சூழலில் சிக்காதபடி பாதுகாக்கும். தீதும் நன்றும் பிறர்தர வாரா.

நன்றி: தினமணி - 20-12-2012

**************

இறைவன் தனது இறுதித் திருமறைக் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:

"இன்னும் இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும் தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். மேலும், (இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம் மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் இறைவனின் பக்கம் திரும்புங்கள்.  அல்குர்ஆன் -  24 : 31.