அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!
Showing posts with label கர்த்தர். Show all posts
Showing posts with label கர்த்தர். Show all posts

Monday, June 22, 2009

கர்த்தர் மனிதனைப் படைத்ததற்காக வருத்தப்பட்டாரா?


இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்


இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம் - பாகம் 3

பைபிளில் கர்த்தர் மனிதனைப் படைத்ததற்காக வருத்தப்பட்டதாகவும், அவரது இருதயத்திற்கு அது விசனமாக இருந்ததாகவும் - மனிதனை ஏன்டா படைத்தோம் என்று நொந்து நூலானதாகவும் கூறி - சர்வ வல்லமை பொருந்திய கர்த்தரை பலவீனப்படுத்தி - இழிவுபடுத்துகின்றது:

மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. - ஆதியாகமம் 6:5-6

இதை WBTC தமிழ் மொழிப்பெயர்ப்பில் பின்வருமாறு கூறப்படுகின்றது:

கர்த்தர் மனிதர்களைப் பூமியில் படைத்ததற்காக வருத்தப்பட்டார். எனவே கர்த்தர் பூமியில் நான் படைத்த அனைத்து மனிதர்களையும் மிருகங்களையும் ஊர்வனவற்றையும் வானத்தில் பறக்கும் பறவைகளையும் அழிக்கப்போகிறேன். ஏன் என்றால் இவற்றை எல்லாம் படைத்ததற்காக வருத்தப்படுகின்றறேன் என்றார். - ஆதியாகமம் 5:6-7

கர்த்தர் தான் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களையும் படைத்தார். மனிதன் என்னென்ன செய்வான் எப்படி எல்லாம் நடந்துக்கொள்வான் என்பதை எல்லாம் முற்றும் அறிந்த கர்த்தர் நாம் ஏன் மனிதனைப் படைத்தோம் என்று மனஸ்தாபப்படுவாரா? - வருத்தப்படுவாரா? கர்த்தர் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை எல்லாம் அறியாத பலவீனரா?

ஆனால் அப்படி பலவீனரைப்போன்று 'தெரியாமல் படைத்துவிட்டோமே' என்று வருத்தப்பட்டார் என்று பைபிள் கூறுகின்றது. இதே போன்று மற்றோர் இடத்தில் சவுலை ராஜாவாக்கியதற்காக வருத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது:

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார் அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். - 1 சாமுவேல் 15:10-11

சவுல் மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம், சாமுவேல் சவுலுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான். - 1 சாமுவேல் 15:10-11

ஒரு மனிதன் என்ன செய்வான் என்பதை முன்கூட்டியே அறியாத பலவீனராகத்தான் கர்த்தர் இருந்தார் - தான் செய்த செயல்களை நினைத்து வருத்தப்படும் அளவுக்கு மனிதனைப்போன்ற பலவீனராகத்தான் கர்த்தர் இருக்கின்றார் என்று இந்த பைபிள் வசனங்கள் நமக்கு உணர்த்துக்கின்றது. ஆரம்பத்தில் மனிதனைப் படைத்ததற்காக வருத்தப்பட்ட கர்த்தர் அதன் பிறகு பல நூற்றாண்டுகள் கழித்தும் இது போன்று மற்றொரு முறை தனது செயலுக்காக வருத்தப்பட்டதாக 1 சாமுவேல் 15:10-11 குறிப்பிடுகின்றது. இதன் மூலம் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறியாதவர் தான் சர்வ வல்லமைப் பொருந்திய கர்த்தர் என்ற ஒரு தவறான கருத்து இந்த பைபிள் வசனங்களின் மூலம் தினிக்கப்படுகின்றதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் - அனைத்தையும் அறிந்த கர்த்தருக்கு, தன்னால் படைக்கப்பட்ட மனிதன் என்ன செய்வான் - எப்படி நடந்துக்கொள்வான் - என்பது எப்படித் தெரியாமல் போகும்? சவுல் இராஜாவானதும் என்னென்ன செய்வான் என்று எப்படி தெரியாமல் போகும்? இப்படி குறிப்பிடுவது கர்த்தரின் கண்ணியத்திற்கும் அவரின் வல்லமைக்கும், இழுக்கு ஏற்படுத்தும் செயல் இல்லையா? பைபிள் சொல்வது போல் நம்புவது கர்த்தருடைய சக்தியை குறைத்து மதிப்பிடும் செயலாகாதா?

இப்படிப்பட்ட கர்த்தரின் பெயராலேயே அவருக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பைபிளில் எழுதப்பட்ட இது போன்ற பொய்யான வசனங்களை இனம் காடடும் முகமாகத்தான் - கர்த்தர் என்ன நடக்கும் என்பதை அறியாத பலவீனராக இருந்தார் என்றக் கூற்றை முற்றாக மறுத்து, திருக்குர்ஆன் அவரின் வல்லமையை பின்வருமாறு பறைசாற்றுகின்றது:

இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும் உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான். (அல்குர்ஆன் 6:3)

அவனே மறைவனாதையும், வெளிப்படையானதையும் நன்கு அறிந்தவன் (அன்றியும் அவனே யாவற்றையும்) மிகைத்தவன் அன்புடையோன். - அல்குர்ஆன் 32 : 6.

மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் - நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன். - அல்குர்ஆன் 67 : 13.

மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான். இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன் மிக்க பொறுமையாளன். - அல்குர்ஆன் 33 : 51

இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான். மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன் விவேகம் மிக்கோன். - அல்குர்ஆன் 24 : 18.

இந்த வசனத்தில் சர்வ வல்லமையுள்ள கர்த்தர், வானங்களிலும் பூமியிலும் இந்த அகில உலகனைத்திலும் உள்ள எல்லாவற்றையும் அறிந்தவன், அவன் அறியாதது ஒன்றும் இல்லை - அவனுக்குத் தெரியாதது எதுவும் இருக்கமுடியாது - அவன் இறந்தகாலத்தையும் அறிந்தவன் - அவன் நிகழ்காலத்தையும் அறிந்தவன் - அவன் எதிர்காலத்தையும் அறிந்தவன் - அவன் யாவற்றையும் நன்கறிந்த மாக சர்வ வல்லமைப் பொருந்திய இறைவன் - அவன் மனிதருடைய இருதயத்தில் என்ன இருக்கின்றது என்பதையும் நன்கறிந்தவன் என்பதை எல்லாம் மிகத் தெளிவாக சொல்லியிருக்க - இந்த வசனங்களுக்கு மாற்றமாக பைபிளில் கர்த்தரை எப்படி குறிப்பிட்டு அவரை சிறுமைப்படுத்துகின்றது என்பதை நாம் உணரவேண்டும்

அடுத்து இன்னொன்றையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். அதாவது, முற்றும் அறிந்த - ஞானமிக்கவராகத்தான் நம்மை எல்லாம் படைத்து, பரிபாலித்து, இரட்சித்து வரும் சர்வ வல்லமைப் பொருந்திய கர்த்தர் இருப்பார் என்பது கடவுள் கோட்பாட்டின் அடிப்படையான ஒரு தத்துவம். இந்த உன்மையை யாரும் மறுக்கவும் மாட்டார்கள் - மறுக்கவும் முடியாது - குறிப்பாக கிறிஸ்தவர்களும் இதை மறுக்க மாட்டார்கள். அப்படி மறுப்பவன் கடவுளைப் பற்றி சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்பதில் யாருக்கும் எந்தவித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

நாம் இந்த பொதுவான அளவுகேலின் படி பர்த்தாலும் மேற்கூறப்பட்ட பைபிள் வசனங்கள் கர்த்தரின் பெயரால் - சாத்தானின் தூண்டுதலால் - அவரது கண்ணியத்திற்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சில விஷமிகளால்தான் எழுதப்பட்டிருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் யாருக்கும் இருக்க முடியாது.

இந்த பொதுவான விதி என்பது ஒரு புறமிருக்க, மேலே சொல்லப்பட்ட பைபிள் வசனங்கள் கண்டிப்பாக கர்த்தரின் வசனங்களாக இருக்க முடியாது என்பதை பைபிளின் வேறு சில வசனங்களும் உறுதிபடுத்துகின்றது:

இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை, தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை, மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான். - 1 சாமுவேல் 15:29

கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன் நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை உன் வழிகளுக்கும் உன் செய்கைகளுக்குந்தக்கதாக உன்னை நியாயந்தீர்ப்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். - எசேக்கியேல் 24:14

பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல, மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல, அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? - எண்ணாகமம் 23:19

இப்படி கர்த்தர் எந்த விதத்திலும் வருத்தப்படமாட்டார் - அப்படி வருத்தப்படுவதற்கு அவர் ஒன்றும் மனிதன் அல்ல என்று தெளிவாக கூறியிருக்க எப்படி கர்த்தர், தான் மனிதனைப்படைத்தற்காக மனஸ்தாபப்பட்டதாக சொல்லப்படுவதை ஏற்றுக்கொள் முடியும்? அப்படி மனஸ்தாபப்பட்டதாக சொல்லப்படும் பைபிள் வசனங்கள் எப்படி இறைவசனங்களாக இருக்க முடியும்?

அது மட்டுமல்ல அவர் மனிதன் என்ன நினைக்கின்றான் - என்ன நினைப்பான் என்பதை எல்லாம் அறிந்தவர் என்றும் ஒரிடத்தில் கூறப்படுகின்றது:

தேவரீர் ஒருவரே எல்லா மனுபுத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், - 1 இராஜாக்கள் 8:40

இப்படி எல்லா மனிதனின் செயல்பாடுகளையும் அறிந்தவராகத்தான் கர்த்தர் இருப்பார் என்று குர்ஆன் மட்டுமல்ல பைபிளின் சில வசனங்களும் உறுதிபடுத்தி இருக்க, எப்படி கர்த்தர் மனிதன் என்ன செய்வான் என்று அறியாதவர் போன்று வருத்தப்பட்டதாகவும் - சவுல் இராஜாவானதும் என்னென்ன அக்கிரமம் செய்வான் என்று அறியாவதவர் போன்று அவனை இராஜாவாக்கியதற்காக வருத்தப்பட்டதாகவும் - கர்த்தரை சிறுமைப்படுத்தி சொல்லப்படும் பைபிள் வசனங்களை இறைவசனங்களாக ஏற்க முடியும்? கிறிஸ்தவ நன்பர்கள் சற்று சிந்திக்க வேண்டாமா?

எனவே கர்த்தர் மனிதனைப் படைத்ததற்காக வருத்தப்பட்டார் என்பதெல்லாம் கண்டிப்பாக கர்த்தரின் பெயரால் சில விஷமிகளால் பைபிளில் தினிக்கப்பட்ட வசனங்கள் தான் என்பதில் யாருக்கும் எந்த வித மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதை நிரூபிக்கும் வகையில் பைபிள் வசனங்கள் உட்பட பல சாண்றுகள் இங்கே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

எனவே உன்மையையும் பொய்யையும் பிரித்தரிவிக்கும் முகமாக சர்வ வல்லமைப் பொருந்திய இறைவனால் அருளப்பட்ட இறுதித் திருமறையாம் திருக்குர்ஆனில் மட்டும் தான் கர்த்தரை உயர்வாக கூறப்பட்டிருக்கின்றது என்பதை உணர்ந்து, அதன் படி வாழ கிறிஸ்தவர்களாகிய உங்களுக்கு கர்த்தர் அருள் புரிவாராக.

இறைவன் நாடினால் தொடரும்...

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Monday, June 08, 2009

கர்த்தர் ஓய்வு எடுத்தாரா?

இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம் - பாகம் -2
.
.
கர்த்தருக்கு ஓய்வு தேவையா?

பலவீனமாகவே படைக்கப்பட்ட மனிதன் அளவுக்கு மீறிய வேலைகளை செய்வதால் அவனுக்கு கலைப்பு ஏற்படுவது இயல்பான ஒன்று. அதே போன்று அவனது பலவீனத்தின் காரணமாக அவனுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியமான ஒன்றாகிவிட்டது.

ஆனால், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்து, பரிபாலித்து, இரட்சித்து வரும் ஏக இறைவனாகிய கர்த்தருக்கு இது போன்று பலவீனங்கள் இருக்குமா என்றால் கண்டிப்பாக இருக்காது - இருக்கவும் முடியாது. காரணம் பலவீனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட மகா சக்தி பொருந்தியவராகத்தான் கர்த்தர் இருப்பார் - இருக்க முடியும். இதில் எவருக்கும் எந்தவிதத்திலும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்படியே எவரேனும் கர்த்தருக்கு கலைப்பு ஏற்படும் என்று கூறுவாரேயானால் அவர் சர்வ வல்லமைப் பொருந்திய கர்த்தரை குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்பது தான் அர்த்தமாக இருக்க முடியும்.

இதைத் தான் இறுதித் திருமறையாம் திருக்குர்ஆன் கூறும்போது:

நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை. (அல்-குர்ஆன் 50:38)

இந்த வசனத்தில், இவ்வுலகம் மற்றும் இந்த அண்ட சாராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனுக்கு அதனால் எந்தவித கலைப்பும் ஏற்படவில்லை என்றும் - அப்படி ஏற்படும் அளவுக்கு அவன் பலவீனமானவனாகவும் இருக்க மாட்டான் என்றும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கின்றது.

இறைவனின் வல்லமையை பறைசாற்றும் இந்த திருக்குர்ஆனின் வசனத்திற்கு மாற்றமாக, சர்வ வல்லமைப்படைத்த கர்த்தருக்கு, இந்த உலகம் மற்றும் இந்த அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்ததால், கலைப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவர் ஓய்வு எடுத்துக்கொண்டதாகவும், கார்த்தரின் மகத்துவத்திற்கும் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படுத்தும் வகையில் யூத எழுத்தாளர்களால் பைபிளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

...ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார்..' (யாத்திராகமம் 31:17)

தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். - ஆதியாகமம் 2:2

கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஒய்ந்திருந்தார் ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். - யாத்திராகமம் 20:11

கர்த்தர் உலகம் மற்றும் இந்த அண்டசாராசரங்கள் அனைத்தையும் படைத்துவிட்டு அதன் காரணமாக அவருக்கு களைப்பு ஏற்பட்டு பலவீனனான மனிதனைப் போன்று ஓய்வெடுத்ததாக இந்த வசனங்கள் குறிப்பிடுகின்றது.

மாட்சிமையும் வல்லமையும் பொருந்தியவனான இறைவனுக்கு களைப்பு ஏற்படுமா? அவனுக்கு ஓய்வு தேவையா? நிச்சயமாக இல்லை! இத்தகைய பலவீனங்கள் எல்லாம் இறைவனின் படைப்பினங்களுக்கு மட்டுமே உரியதாகும். இறைவனை அரி, துயில் எதுவும் கொள்ளாது. அவன் மனிதர்களின் இத்தகைய கற்பனைகளை விட்டும் அப்பாற்பட்டவன். எனவே கர்த்தருடைய கண்ணியத்திற்கு கலங்கம் ஏற்படுத்தும் இத்தகைய பைபிள் வசனங்கள் கண்டிப்பாக கர்த்தரால் சொல்லப்பட்டிருக்காது, மாறாக கர்த்தருடைய எதிரியான சாத்தானின் தூண்டுதலால் தான் எழுதப்பட்டிருக்கும் என்பதை கிறிஸ்தவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இதைத்தான் திருமறைக்குர்ஆனில் சர்வ வல்லமை பொருந்திய இறைவன் கூறுகின்றான்:

அவர்கள் இறைவனை கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை. நிச்சயமாக இறைவன் வல்லமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன். (அல்-குர்ஆன் 22:74)

ஓய்வு நாள் ஏன்?

இது ஒருபுறமிருக்க, இப்படி கர்த்தரால் ஓய்வெடுக்கப்பட்ட அந்த நாளைத்தான் யூதர்களும் - பைபிளை ஏற்றுக்கொள்ளக்கூடிய கிறிஸ்தவர்களும் - ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஓய்வு நாளாக அனுசரிக்க வேண்டும் என்றும் பைபிள் கூறுகின்றது:

ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக. ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள் அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். - யாத்திராகமம் 20:9-10

கர்த்தரே ஓய்ந்திருந்த அந்த நாளை ஓய்வு நாளாக அனுசரிக்காமல் எவரேனும் கர்த்தரின் கட்டளைக்கு மாற்றமாக நடந்தால், அவர்கள் கொல்லப்படவேண்டும் என்றும் பைபிள் கூறுகின்றது:

ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக அது உங்களுக்குப் பரிசுத்தமானது அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன் அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். - யாத்திராகமம் 31:14

கர்த்தரின் கண்ணியத்திற்கும் அவரின் மகத்துவத்திற்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில், கர்த்தர் ஒய்வு எடுத்ததாகவும், அந்த நாளைத்தான் யூதர்களுக்கு ஓய்வு நாளாக அனுசரிக்கும் படி கட்டடையிடப்பட்டதாகவும் இந்த வசனங்கள் குறிப்பிடுகின்றது. அப்படிப்பட்ட ஓய்வு நாளில் எவரேனும் வேலை செய்தால் அவன் கொல்லப்படவேண்டும் என்றும் பைபிள் குறிப்பிடுகின்றது.

யூதர்கள் ஆசாரிக்கும் 'ஓய்வு நாள்' ஏற்படுத்தப்பட்டதற்கு காரணம் 'கர்த்தர் ஓய்ந்திருந்தது' தான் என்பது போன்ற ஒரு பொய்யான தோற்றம் பைபிளின் இந்த வசனங்களின் மூலம் ஏற்படுத்தப்படுன்றது.

ஓய்வு நாள் ஏற்படுத்தப்பட்டதற்கு இது தான் காரணமாக இருந்தால் முதல் மனிதன் ஆதாம் காலம் தொட்டே 'ஓய்வு நாள்' என்னும் அந்த கட்டளையை கர்த்தர் கொடுத்திருப்பாரே? அல்லது அவருக்கு உண்மையான விசுவாசியாக இருந்த ஆபிரகாமின் காலத்திலிருந்தாவது கர்த்தர் அந்த கட்டளையை கொடுத்திருப்பாரே? ஏன் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து மோசேயின் காலத்தில் இப்படிப்பட்ட ஓய்வு நாள் சட்டம் கொடுக்கப்படவேண்டும்? காரணம் இஸ்ரவேவலர்கள் செய்த செயல்களின் காரணமாக - அவர்களை சோதிக்கும் பொருட்டு - இறைவன் இந்த ஓய்வு நாள் சட்டத்தை யூதர்களுக்கு கொடுத்தானே அல்லாமல், கர்த்தர் ஓய்திருந்தார் என்பதற்காக அல்ல. அப்படி சொல்வது கர்த்தரை இழிவு படுத்துவதற்கு சமமானது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஓய்வு நாள் யூதர்களுக்கு ஏன் கொடுக்கப்பட்டது என்ற உன்மையைத் திருக்குர்ஆன் மிகத் தெளிவாக உலகுக்கு உணர்த்துகின்றது:

(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள் ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக் குள்ளாக்கினோம். (அல்குர்ஆன் 7 : 163.)

மேலும், அவர்களிடம் (இஸ்ரவேலர்களிடம்) வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம். இன்னும் 'இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்' என்று சொன்னோம். மேலும் ''(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்'' என்றும் அவர்களுக்கு கூறினோம். இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம். (அல்குர்ஆன் 4 : 154)

இப்படி எல்லாம் அவர்களை சோதனைக்கு உள்ளாக்கும் பொருட்டே யூதர்களுக்கு சனிக்கிழமையை ஓய்வு நாளாக ஆக்கப்பட்டதே அல்லாமல், பைபிளில் சொல்லப்படுவது போன்று கர்த்தர் ஓய்ந்திருந்தார், அதன் காரணமாகவே அந்த நாளை பரிசுத்தமாக்கும் பொருட்டு ஓய்வு நாள் அனுசரிக்கப்படுகின்றது என்று கூறுவது கர்த்தரின் கண்ணியத்தையும் - அவரின் மகத்துவத்தையும் - அவரின் வல்லமையையும் - குறைத்து மதிப்பிடும் செயல் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். உன்மையில் கர்த்தருக்கு, இது போன்ற கலைப்போ, அதன் காரணமாக ஓய்வோ தேவைப்படாது என்று குர்ஆன் மட்டுமல்ல பைபிளிலும் ஓரிடத்தில் சொல்லப்படுகின்றது:

பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை. இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது. -ஏசாயா 40:28

இதை WBTC மொழிப்பெயர்ப்பு பின்வருமாறு கூறுகின்றது :

கர்த்தர் சோர்வடையமாட்டார். அவருக்கு ஓய்வு தேவையில்லை. கர்த்தர் தொலைதூர இடங்களை பூமியில் படைத்தார். கர்த்தர் என்றென்றும் ஜீவித்திருக்கின்றார். – ஏசாயா 40:28

இந்த வசனத்தில் மிகத் தெளிவாக கர்த்தரின் வல்லமை பறைசாற்றப்பட்டிருக்க, அவர் ஓய்வு எடுக்க மாட்டார் - அவர் எத்தகையை பெரிய காரியங்களை செய்தாலும் அதனால் அவருக்கு எந்த வித கலைப்பு ஏற்படாது என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்க - எப்படி கர்த்தர் ஓய்வு எடுத்தார் என்றும் அதன் காரணமாகவே ஓய்வு நாள் யூதர்களுக்கு கடமையாக்கப்பட்டது என்றும் ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த கூற்று பைபிளுக்கே எதிரான கருத்தில்லையா? யூத எழுத்தாளர்கள் தங்கள் மணம்போன போக்கில் பைபிளின் மற்ற வசனங்ளே முரண்படும் வகையில் தங்கள் வேதத்தில் தங்களுக்கு சாதகமாக விளையாடிவிட்டார்கள் என்பது விளங்குகின்றதா இல்லையா? தங்களுக்கு சோதனையாக கொடுக்கப்பட்ட அந்த ஓய்வு நாள் சட்டத்தின் நோக்கத்தையே திரித்து - அதை மாற்றி, கர்த்தர் ஓய்திருந்தால் தான் தங்களுக்கு அந்த ஓய்வு நாள் சட்டம் கொடுக்கப்பட்டது என்று ஒரு தவறான கருத்துத் திணிப்பு வேலை பைபிளில் நடைபெற்றுள்ளது என்பது விளங்குகின்றதா இல்லையா?

எனவே கிறிஸ்தவர்களே நீங்கள் உன்மையை உணரவேண்டும். சத்தியத்தை அறியவேண்டும். இப்படிப்பட்ட பொய்யான செய்திகளை - பைபிளில் இட்டுக்கட்டி எழுதப்பட்ட செய்திகளை - பிரித்து, உன்மை எது பொய் எது என்று பிரித்தறிவிக்கும் முகமாகத்தான் சர்வ வல்லமைப் பொருந்திய கர்த்தராகிய அல்லாஹ் தனது இறுதித் திருமறையாம் திருக்குர்ஆனின் மூலம் சத்தியத்தை வெளிப்படுத்துகின்றான். அதைத்தான் தனது இறுதித் திருமறைக் குர்ஆனில் கூறும் போது:

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் (முஹம்மதின்) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். (அல்குர்ஆன் - 25 : 1)

எனவே சகோதரர்களே அசத்தியத்தை விட்டு வெளியே வாருங்கள்! சத்தியத்தை அறியுங்கள். ஏக இறைவனாகிய கர்த்தர் உங்களுக்கு நேர்வழி காட்டுவாராக.

தொடரும்!

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.

Friday, May 29, 2009

இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம்?! (பாகம் - 1)

கிறிஸ்தவர்களால் புனிதமாக மதிக்கப்படும் பைபிள் மனித்தக்கரங்களால் மாசுபடுத்தப்பட்டுள்ளது என்பது பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் ஒரு பொதுவான குற்றச்சாட்டு. குறிப்பாக அதில் இருக்கக்கூடிய முரண்பாடான, ஆபாசமான, நகைச்சுவையான, விஞ்ஞானத்திற்கு முரனான, வர்னாசிரமக் கொள்கைகளை வலியுறுத்தக்கூடிய, இறைத்தூதர்களை இழிவுபடுத்தக்கூடிய குறிப்பாக இயேசுவையே தரம் தாழ்த்தக்கூடிய, இப்படி எண்ணற்ற இறைவசனங்களாக இருக்க அறவே தகுதியற்ற வசனங்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்படுகின்றன.

குறிப்பாக மனிதர்களை நேர்வழிப்படுத்தும் முகமாக இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களை சகட்டுமேனிக்கு அவர்கள் மீது அபான்டமான எந்த வித ஆதாரமுமற்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுவது ஒருபுறமிருக்க, ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக எந்த இறைவன் இந்த வேதத்தை அருளினான் என்று சொல்லப்படுகின்றதோ அதே இறைவேதத்தில் - அந்த இறைவனின் மகத்துவத்திற்கும் அவனது கண்ணியத்திற்கும் கலங்கம் ஏற்படுத்தும் வகையில் - அந்த இறைவனையே இழிவுபடுத்தியும் வசனங்கள் எழுதப்படிருக்கின்தே என்று பார்க்கும்போது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கின்றது. இப்படிப்பட்ட வசனங்களை எப்படி இறைவசனங்களாக இன்றைய கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்? அல்லது அவர்களுக்கு இப்படிப்பட்ட வசனங்கள் இருப்பது தெரியவில்லையா? அல்லது அவர்களுக்குத் தெரியாத அளவுக்கு மறைக்கப்படுகின்றதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் கண்ணிருந்தும் குருடர்களாயும் காதிருந்தும் செவிடர்களாயும் இருக்கின்றார்களா?

கர்த்தரையே இழிவுபடுத்தக்கூடிய வகையில் எப்படிப்பட்ட வசனங்கள் கிறிஸ்தவர்களின் புனிதவேதமான பைபிளில் இடம் பெற்றுள்ளது என்பதை இனி காண்போம்.

கர்த்தரின் குற்றவியல் சட்டங்கள் கேளிக்கூத்தானவையா?
தாவீது தீர்க்கதரிசி, உரியா என்ற போர்வீரனின் மனைவியுடன் கள்ள உறவின் மூலம் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் தனது போர்வீரனான உரியாவையே நயவஞ்சகமாக கொண்றுவிட்டு, அவனின் மனைவியை பலவந்தமாக மணமுடித்துக்கொண்டதாகவும் பைபிளில் இறைவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசியான தாவீதை இழிவுபடுத்தி எழுதப்பட்டுள்ளது. இது உன்மையாக நடந்த சம்பவமா? அல்லது தாவீதின் பெயரால் அவருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் யூத எழுத்தாளர்களால் இட்டுக்கட்டி எழுதப்பட்ட பொய்யான கதையா? என்பதை பைபிள் ஆதாரங்களுடன் ஏற்கனவே விளக்கியுள்ளோம்.
தாவீதின் இந்த அநாகரீகமான (?) செயலுக்கு கர்த்தர் ஒரு தண்டனை கொடுப்பதாக சொன்னாராம். அந்த தண்டனை என்ன? இதோ பைபிள் கூறுகின்றது:

'கர்த்தர் சொல்கிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன், அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான். நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய், நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்' (2 சாமுவேல் 12: 11 - 12)

அதாவது தாவீது செய்ததாகச் சொல்லப்படும் அந்த ஈனச்செயலுக்கு (?) கர்த்தர் கொடுப்பதாக சொல்லப்பட்ட தண்டனை, அவருடைய பெண்மக்களை மற்றவர்கள் மூலம் அவர்களை கற்பழிக்க வைப்பாராம். அதுவும், தாவீதோ உரியாவின் மனைவியுடன் ரகசியமாகதான் விபச்சாரம் செய்தாராம். ஆனால் கர்த்தர் தாவீதுக்கு தண்டனையாக ஊரார் முன்பாக பட்டப்பகலிலே நடுரோட்டிலேயே வைத்து அவருடைய பெண்மக்களை அடுத்தவனை வைத்து கற்பழிக்கச் செய்வாராம். இந்த கற்பழிப்புச் சம்பவத்தை இஸ்ரவேலர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் செய்வாராம்.

இது உன்மையா? இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க அசிங்கமான ஒரு தண்டனையை கர்த்தர் கொடுப்பதாக சொல்லியிருப்பாரா? இப்படி பலருக்கு அடுத்தவனுடைய பெண்களை ஏற்படுத்திக் கொடுப்பது தான் கர்த்தரின் வேலையா? அப்படி பலர் பட்டப்பகலில் செய்யும் கற்பழிப்புக் காட்சிகளை இஸ்ரவேலர்களைப் பார்க்க வைப்பது தான் அவர் கற்றுத்தரும் நல்லொழுக்கமா? ஒருவனுடைய விபச்சாரத்திற்கான தண்டனையாக பல விபச்சாரகர்களை உருவாக்குவது தான் கார்த்தரின் நீதியா?

இப்படிப்பட்ட கேலிக்கூத்தான - அருவருக்கத்தக்க - ஒரு சட்டத்தை கடவுள் சொல்லியிருப்பாரா? என்றால் கண்டிப்பாக சொல்லியிருக்க மாட்டார் - சொல்லியிருக்கவும் முடியாது. மாறாக, கர்த்தரின் பெயரால் கர்த்தரின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் சில விஷமிகளால் இது போன்ற வசனங்கள் பைபிளில் தினிக்கப்பட்டிருக்கும் - திணிக்கப்பட்டிருக்க வேண்டும். இதை நாம் சுயமாக ஒன்றும் சொல்லவில்லை பைபிளின் மற்ற வசனங்களை ஒப்பிட்டுத்தான் இதை கூறுகின்றோம்.

காரணம், மோசேயின் காலம் தொட்டு, தாவீதின் காலத்திலும், இன்னும் இயேசுவின் கலத்திலும் கூட 'ஒருவன் அன்னியப்பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் அவன் கல்லால் அடித்துக்கொள்ளப்படி வேண்டும் (பார்க்க லேவியராகமம் 20:10) என்ற சட்டமே நடைமுறையில் இருந்தது என்று பைபிள் கூறுகின்றது.

அப்படிப்பட்ட சட்டம் - நீதி பரிபாலன் மிக்க கர்த்தரால் வழங்கப்பட்ட சட்டம் - நடைமுறையில் இருக்க, எப்படி தாவீது மட்டும் அந்த சட்டத்திலிருந்து தப்பிக்கும் வகையில் அவருடைய செலுக்காக கொடுக்கப்படவேண்டிய தண்டனையான, மரணத்தண்டனைக்கு மாற்றமாக வேறு ஒரு சட்டத்தை சொல்லியிருப்பார்? அதுவும் குறிப்பாக அவர் செய்த அந்த அநாகரீக செயலுக்குரிய தண்டணையை அவரை அனுபவிக்கவிடாமல், அவருடைய பெண்மக்களை அடுத்தவனுக்கு ஏற்படுத்திகொடுக்கும் இந்த அசிங்கமான தண்டனையை கொடுப்பதாக எப்படி கூறியிருப்பார்?

சாதாரண அப்பாவி ஒருவன் விபச்சாரம் செய்தால் அவனுக்கு மரணதண்டனையும், அதே ஒரு அரசன் செய்தால் அவனுக்கு அதிலிருந்து விதிவிலக்கும் என்கிற அளவுக்கு பாரபட்சம் காட்டுபவரா கர்த்தர்? இப்படித்தான் கர்த்தரின் நியாங்கள் இருக்குமா? என்றால் கண்டிப்பாக இருக்காது என்றே பைபிள் சொல்கின்றது. ஏனெனில் உன்மையிலேயே தாவீது விபச்சாரம் செய்திருந்தால் அவருக்கு அன்றை காலத்தில் இருந்த மரணதண்டனைத்தான் கிடைத்திருக்க வேண்டும். அதிலிருந்து யாரும் தப்ப முடியாது. கர்த்தரும் அதிலிருந்து யாருக்கும் விதிவிலக்கு அளிக்கமாட்டார், ஏனெனில் அவர் நீதியுள்ளவர் என்று பைபிள் கூறுகின்றது:

அவர் கன்மலை அவர் கிரியை உத்தமமானது அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன் அவர் நீதியும் செம்மையுமானவர். - உபாகமம் 32:4

மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப் பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ? - யோபு 4:17

தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ? - யோபு 8:3

கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கைகளெல்லாம் சத்தியமுமாயிருக்கின்றது - (சங்கீதம் 33:4)

இப்படி பைபிளில் கர்த்தருடைய சட்டங்களைப்பற்றியும் அவரது நீதியின் செம்மையைப் பற்றியும் தெளிவாக சொல்லியிருக்க, எப்படி தாவீதுக்கு மட்டும் அதிலிருந்து விதிவிலக்கு அளித்து, அவருக்கு பதிலாக அவரது பெண்மக்களை - ஒரு அசிங்கமான சட்டத்தின் மூலம் - தண்டிப்பதாக சொல்லியிருப்பார்? கிறிஸ்தவர்கள் சற்று சிந்திக்க வேண்டாமா?

விபச்சாரம் என்பது மிகவும் இழிவான செயல் என்று பைபிளின் பல இடங்களில் சொல்லப்படுகின்றது. அப்படி எவரேனும் விபச்சாரம் செய்தால் அவனுக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் பைபிள் வலியுறுத்துகின்றது. அந்த சட்டம் மோசேயின் காலத்திலிருந்து, தாவீதின் காலம் தொட்டு இயேசுவின் காலத்திலும் நடைமுறையில் இருக்க, அப்படிப்பட்ட இழிவான கேவலமான விபச்சாரத்தை கர்த்தரே மற்றவர்கள் செய்வதற்கு வழிவகுத்துக் கொடுத்தார் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதே விபச்சாரத்தை பற்றி பைபிள் கூறுவதை பாருங்கள்:

தேசம் விபசாரக்காரரால் நிறைந்திருக்கிறது, தேசம் சாபத்தினால் துக்கிக்கிறது, வனாந்தரத்தின் மேய்ச்சல்கள் வாடிப்போகிறது அவர்கள் ஓட்டம் பொல்லாதது. அவர்கள் பெலன் அநியாயமாயிருக்கிறது. - எரேமியா 23:10

விபச்சாரம் செய்பவன் கல்லால் அடித்துக்கொள்ளப்படவேண்டும் என்றும் பைபிள் கூறுவதைப்ப பாருங்கள்:

ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள். - லேவியராகமம் 20:10, உபாகமம் 22:22

இப்படி விபச்சாரத்தை பொல்லாதது - கொடியது என்று சொன்ன கர்த்தர் - ஒருவன் விபச்சாரம் செய்தால் அவனுக்கு மரணதண்டனை கொடுக்கவேண்டும் என்று சட்டம் போட்ட - கர்த்தரா ஒரு விபச்சாரத்திற்கான தண்டனையாக பலரை விபச்சாரத்திற்கு அழைத்துச்செல்லும் ஒரு சட்டததை சொல்லியிருப்பார்?

அதுமட்டுமல்ல, இந்த வசனம் கர்த்தரின் மீது கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சில யூத எழுத்தாளர்களால் வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்பதை பைபிளின் இன்னும் சில வசனங்களும் தெளிவு படுத்துகின்றது. அதாவது, ஒருவன் பாவம் செய்தால் அதற்கான தண்டனையை அவன் தான் அனுபவிக்க வேண்டுமே யொழிய அவனது மகனோ அல்லது அவனைச்சார்ந்தவர்களோ அனுபவிக்க கூடாது என்றும் கர்த்தர் கூறியதாக பைபிளில் கூறப்படுகின்றது.

பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள்.அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான் எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும். - எரேமியா 31:29-30

இதெப்படி, குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான். பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும் குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும். - எசேக்கியேல் 18:19-20

இப்படி தெளிவாக எவன் குற்றம் செய்தானோ அவன் தான் அதற்கான தண்டனையை அனுபவிக்கவேண்டுமே தவிர அதற்கு பகரமாக வேறு எவறும் அவனது பாவத்திற்காக தண்டனையை அனுபவிக்க முடியாது என்று பைபிளில் சொல்லியிருக்க, கர்த்தர் எப்படி தாவீது செய்த அந்த ஈனச்செயலுக்காக அவனது பெண்மக்களை அடுத்தவனுக்கு ஏற்படுத்திகொடுப்பதாக கூறியிருப்பார். எனவே மேலே எடுத்துக்காட்டப்பட்ட 2 சாமுவேல் 12: 11 - 12 ம் வசனங்கள் கண்டிப்பாக யூத எழுத்தாளர்களால் கர்த்தருக்கு கலங்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் - தாவீதை இழிவு படுத்தும் தீய எண்ணத்துடன் - பைபிளில் தினிக்கப்பட்ட வசனங்களே என்பதை நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.

இதனால் தான் வல்ல இறைவன் தனது இறுதித் திருமறையாம் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட - அல்லது தன்னிடம் சத்தியம் வந்த போது அதைப் பொய்ப்பிப்பவனைவிட அநியாயம் செய்பவன் யார்? (இத்தகைய) காஃபிர்களுக்கு ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது, - அல்குர்ஆன் 29 : 68

சிந்தியுங்கள் எனதருமை கிறிஸ்தவர்களே!




கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.