அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Friday, August 28, 2009

இவ்வுலக வாழ்க்கைக்கு பகுத்தறிவு அவசியமா?


பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு! - அபூ பாத்திமா


தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள். மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே! அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே! ஓரிறைவன், மறு உலக வாழ்க்கை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளின் கற்பனை என்று கூறி வருகிறார்கள்.

அவர்களின் பிரதான அடிப்படைக் கொள்கை மனிதனும் எண்ணற்ற பிராணிகளைப் போல் ஒரு பிராணி என்பதேயாகும். மனிதப் பிராணி அல்லாத இதர அனைத்துப் பிராணிகளுக்கும் இருப்பது ஐயறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் விசேஷமாக ஆறாவது அறிவான பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஓரிறை மறுப்பாளர்களான பகுத்தறிவு நாத்திகர்களும் மறுக்க மாட்டார்கள்.

முதலில் இந்த பகுத்தறிவு என்றால் என்ன? என்பதை ஆய்வு செய்துவிட்டுப் பின்னர் விசயத்திற்கு வருவோம். இதர பிராணிகளுக்க இருப்பது போல் பார்த்து அறிவது, கேட்டு அறிவது, முகர்ந்து அறிவது, ருசித்து அறிவது, தொட்டு அறிவது என இந்த ஐயறிவுகளும் (ஐம்புலன்களும்) மனிதனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஐயறிவு துணையுடன் ஆய்ந்தறியும் திறனான பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இற்த பகுத்தறிவு மேலே குறிப்பிட்டுள்ள ஐயறிவுகளின் உதவி கொண்டு மட்டுமே செயல் படமுடியும். இந்த ஐயறிவுகள் வராத - கட்டுப்படாத பல பேருண்மைகளை மறுக்கும் நிலையில் பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் இருக்கின்றனர். அந்த பேருண்மைகளை பின்னர் ஆய்வுக்கு எடுப்போம்.

இப்போது நாம் எடுத்துக் கொண்ட விஷயம் பகுத்தறிவாளர்கள் சொல்வது போல் மனித வாழ்க்கை அற்பமான இவ்வுலகோடு முற்றுப் பெறுவதாக இருந்தால், அப்படிப்பட்ட மனிதப் பிராணிக்கு பகுத்தறிவு தேவையா? என்பது தான். இன்று உலகில் கோடானுகோடி ஐயறிவு பிராணிகளைப் பார்க்கிறோம். அவை ஆறறிவு மனிதனை விட மிகமிக மகிழ்ச்சியாக, சந்தோசமாக, களிப்புடன் வாழ்ந்து வருகின்றன. விரும்பியதை விரும்பிய அளவு உண்டு மகிழ்கின்றன. குடித்து மகிழ்கின்றன. தங்களின் ஜோடிகளோடு இணைந்து சந்ததிகளை தாராளமாகப் பல்கிப் பெருகச் செய்கின்றன. அவற்றிற்கு ஏதாவது இடையூறுகள் வருவதாக இருந்தால் அவை ஆறறிவு படைத்த மனிதனால் மட்டுமே ஏற்படுவதேயாகும். மற்றபடி அவற்றிற்கு கட்டுப்பாடோ விதிமுறைகளோ எதுவுமே இல்லை.

மானத்தை மறைப்பதற்கென்று அவற்றிற்கு விதவிதமான ஆடைகள் தேவையில்லை. ஒண்ட வீடுகள் தேவையில்லை. இன்ன ஆணுடன் தான் இணைய வேண்டும்; இன்ன பெண்ணுடன் தான் இணைய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை; அப்படி மாறி மாறி இணைவதால் எய்ட்ஸ் என்ற ஆட்கொல்லி நோயும் அவற்றிற்கு ஏற்படுவதில்லை. இன்னாருடைய மகன் இன்னார் என்ற வாரிசுப் பிரச்சினையும் இல்லை. உண்டு, பழித்து, ஜோடியுடன் கலந்து அனுபவித்து, மாண்டு மண்ணோடு மண்ணாகப் போகும் நிலை. நாளைக்கு நமது நிலை என்ன? சாப்பாட்டு பிரச்சினை என்ன? மனைவிப் பிரச்சினை என்ன? மக்கள் பிரச்சினை என்ன? அந்தப் பிரச்சினை என்ன? இந்தப் பிரச்சினை என்ன? என பல்வேறு பிரச்சினைகளால் அல்லும் பகலும் அவதியுற்று அல்லல்படும் நிலை ஐயறிவு பிராணிகளுக்கு இல்லை. ஆறறிவு மனிதப் பிராணியை விட ஐயறிவு பிராணிகள் மகிழ்ச்சிகரமாக, எவ்வித கெளரவ பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து மடிகின்றன என்பதை பகுத்தறிவாளார்கள் மறுக்க முடியுமா?

சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிராதயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைகள் , குண்டு கலாச்சாரம் இவற்றில் எதனையும் ஐயறிவு பிராணிகளிடையே பார்க்க முடிகிறதா? இல்லையே! நாளை நடப்பதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து மடிகின்றன. சொத்து, சுகங்களையோ, உணவு வகைகளையோ அவை சேர்த்து வைக்காவிட்டாலும் அதனால் அவை துன்பப்பட்டதுண்டா? உணவில்லாமல் பட்டினியால் மடிந்ததுண்டா?

பகுத்தறிவாளர்களே! சிறிது உங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்திப் பாருங்கள். இவ்வுலகோடு மனித வாழ்க்கை முற்றுப் பெறுவதாக இருந்தால், மனிதனுக்கும் மற்ற ஐயறிவு பிராணிகள் போல் பகுத்தறிவு கொடுக்கப்படாமல் இருந்தால், மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக, மகிழ்ச்சிகரமாக, கவலையோ, துக்கமோ இல்லாமல், சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைச் செயல்கள், வெடிகுண்டு, அணுகுண்டு கலாச்சாரங்கள், தற்கொலைப்படைத் தாக்குதல்கள் இவை எவையுமே இல்லாமல் மிக, மிக நிம்மதியாக வாழ்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகலாம். அப்படியானால் ஐயறிவு மிருகங்களுக்குக் கொடுக்கப்படாத இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையே இல்லாத பிரத்தியேக பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும் ஏன் கொடுக்கப்ட்டுள்ளது? முறையாக நடுநிலையோடு உங்களின் பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்தினால், இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கை - பரீட்சை வாழ்க்கை என்பதை உங்களாலும் புரிந்து கொள்ள முடியும்.

இன்று அனைத்து நாடுகளிலும் நீக்கமறக் காணப்படும் இனவெறி, மதவெறி, மொழி வெறி, ஜாதி வெறி, நிறவெறி என பல்வேறு வெறிகளால் இந்த மனித இனம் கூறு போடப்பட்டு நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வதற்கு இந்த ஆறாவது அறிவான பகுத்தறிவுதான் காரணம் என்பதை பகுத்தறிவாளர்களால் மறுக்க முடியுமா? மதங்களின் பெயரால் கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து மதப்புரோகிதர்கள் செய்து வரும் அட்டூழியங்கள், ஈவிரகமற்ற கொடூர செயல்கள், கொலை பாதகச் செயல்கள், மதப்புரோகிதர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என மார்தட்டிக் கொண்டு, மதப்புரோகிதர்களின் அனைத்து வகை ஈனச்செயல்கள், அட்டூழியங்கள் , அக்கிரமங்கள், வன்முறைச் செயல்கள் அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து செய்து வரும் அரசியல்வாதிகள் என்ற அரசியல் புரோகிதர்கள் (தொண்டைத் தொழிலாக்கி தொப்பையை நிரப்புகிறவர்கள் அனைவரும் இடைத்தரகர்களே - புரோகிதர்களே), ஏழைகளின் வயிற்றில் அடித்து, அவர்களின் உரிமைகளைப் பறித்து, மதப்புரோகிதர்களையும், ஆட்சியாளர்களையும், அரசியல் வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு குறுக்கு வழிகளில் பல நூறு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துக் குவிக்கும் கோடீஸ்வரர்கள், இப்படி அனைவரின் மனச்சாட்சிக்கும் விரோதமான அநியாய, அக்கிரம, அட்டூழிய செயல்களுக்கு இந்தப் பாழும் பகுத்தறிவு தானே காரணம்? இவ்வுலக வாழ்க்கையில் மனிதனுக்கு பகுத்தறிவு மட்டும் இல்லாவிடில், மற்ற பிராணிகளைப் போல், ஐயறிவுடன் மட்டும் வாழ்ந்தால் இந்தப் படுபாதகச் செயல்கள், அட்டூழியங்கள், அநியாயங்கள் இடம் பெறுமா? மனித அமைதி கெடுமா?

கடவுள்களின் பெயரால் மதங்களை கற்பனை செய்து பலவித அநியாயங்கள் நடக்கின்றன என காரணம் கூறி, மனிதப் பகுத்தறிவைக் கொண்டு கற்பனை செய்யப்பட்ட பொய்க் கடவுள்களோடு, அகில உலகையும் மனிதனையும் படைத்து நிர்வகித்து வரும் ஒரே கடவுளை மறுக்கத் துணிந்த பகுத்தறிவாளர்கள், கடவுளின் பெயரால் வெறியூட்டும் மதங்கள், அரசியலின் பெயரால் அட்டூழியங்கள், கோடீஸ்வர குபேரர்களின் தில்லுமுல்லுகள் என அனைத்திற்கும் காரணமான இந்தப் பகுத்தறிவை அழித்தொழிக்க முற்படுவதில்லையே! ஏன்? மனித வாழ்க்கை இவ்வுலகுடன் முடிவுக்கு வருகிறதென்றால் இவ்வுலக வாழ்க்கைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத பகுத்தறிவு ஏன்? ஏன்?? ஏன்??? தாங்களும் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொள்வதாலா? தாங்களும் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருப்பதலா? பகுத்தறிவை நியாயப்படுத்துகிறீர்கள்? விடை தாருங்கள் பகுத்தறிவாளர்களே!

பகுத்தறிவு மனிதனுக்கு இயற்கையிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது; அதனை அழிக்க முடியாது என்பது பகுத்தறிவாளர்களின் பதிலாக இருந்தால், பகுத்தறிவில்லா ஐயறிவு பிராணிகள் போல் மனிதனும் ஒரு பிராணியே! இவ்வுலகில் வாழ்ந்து மடிவதோடு அவனது முடிவு ஏற்பட்டு விடுகிறது என்று எந்தப் பகுத்தறிவின் அடிப்படையில் கூறுகிறீர்கள்? பகுத்தறிவின் மூலம் மனிதப்படைப்பு ஐயறிவு மிருகப் படைப்பிலிருந்து வித்தியாசப்படுகிறது என்பதை உங்களால் பகுத்தறிய முடியவில்லையா?

இவ்வுலக வாழ்ககைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத, அதே சமயம் இவ்வுலக மனித மற்றும் படைப்புகளின் நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கைக்கு பல வகையிலும் இடையூறு விளைவிக்கும் இந்தப் பகுத்தறிவு ஓர் உன்னத நோக்கத்தோடுதான் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உங்களால் உய்த்துணர முடியவில்லையா?

பகுத்தறிவாளர்களே! நீங்கள் பகுத்தறிவு, பகுத்தறிவு என பீற்றிக் கொள்வது உங்களுக்கிருக்கும் ஐயறிவைக் கொண்டு, அவை கொடுக்கும் ஆதாரங்களை மட்டும் வைத்து விளங்கிக் கொள்ளும் அற்ப விஷயங்கள் மட்டுமே. மற்றபடி உங்களது ஐம்புலன்களுக்கு எட்டாத, கட்டுப்படாத நுட்பமான உண்மைகளை கண்டறியும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை; அதாவது மதப்புரோகிதர்கள் கற்பனையில் உருவான கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுக்கும், பகுத்தறிவாளர்களாகிய உங்களையும், என்னையும் அகில உலக மக்களையும், அகிலங்களையும் சோதனைக்காக - பரீட்சைக்காக படைத்து சுதந்திரமாக நம்மை செயல்படவிட்டிருக்கும் ஒரேயொரு உண்மைக் கடவுளுக்குமுள்ள வேறுபாட்டை உங்களால் பகுத்தறிய முடியவில்லை. உண்மைக் கடவுளை உய்த்துணரும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை, சாந்தி மார்க்கத்தின் உறுதி மொழியின் ஆரம்ப பாதியை மட்டும் கூறி, அரைக்கிணறு தாண்டி கிணற்றின் உள்ளே விழும் மிகமிக ஆபத்தான, அபாயகரமான நிலையில் நுண்ணறிவில்லா பகுத்தறிவாளர்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என குற்றப் படுத்துகிறோம்; முறையாக நுண்ணறிவுடன் பகுத்தறிய வேண்டுகிறோம்.

(நபியே?!) நீர் கூறுவீராக: இறைவன் அவன் ஒருவனே. இறைவன் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை, (எவராலும்)பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. - திருக்குர்ஆன் - 112:1-4


நன்றி: Readislam.net


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Wednesday, August 19, 2009

இயேசுவா? அல்லது இம்மானுவேலா?


இயேசுவின் வருகையும் - பொருத்தமற்ற முன்னறிவிப்புகளும்! (பாகம் 1)


இயேசுவின் வரலாற்றை விவரிப்பதாக சொல்லப்படும் புதிய ஏறபாட்டின் முதல் நான்கு சுவிசேஷங்களில் அவரைப் பற்றிய உன்மையான செய்திகளுக்கு பதிலாக, பல பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட, முரண்பாடான செய்திகளே அதிகமதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நாம் பல கட்டுரைகள் வாயிலாக அறிந்து வருகின்றோம்.

அதன் தொடர்ச்சியாக, இயேசுவின் பெயரால் இன்னும் என்னென்ன வகையிலான பொய்ச்செய்திகள் சுவிசேஷ எழுத்தாளர்கள் மூலம் பைபிளில் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கும் மற்றொரு ஆதாரமே இயேசுவின் பெயரால் கூறப்பட்டுள்ள பொருத்தமற்ற முன்னறிவிப்புகள்.

குறிப்பாக, புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு சுவிசேஷங்களில் இயேசுவின் வாழ்வில் நடந்ததாக சொல்லப்படும் பல சம்பவங்கள், முந்தைய தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்டு அது நிறைவேறும் வகையில் நடந்ததாகவும், அதன் மூலம் இயேசுவின் வருகை முழுமையாக நிறைவு செய்யப்பட்டுவிட்டது என்பது போன்ற ஒரு தோற்றம், சுவிசேஷ எழுத்தாளர்களால் ஏற்படுத்தப்படுகின்றது.

உண்மையிலேயே இயேசுவைப் பற்றித்தான் அந்த முன்னறிவிப்புகள் குறிப்பிடுகின்றது என்றால் அதை எடுத்துக்கூறுவதில் யாருக்கும் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இருக்கபோவதில்லை. ஆனால், இயேசுவுக்கு எந்தவகையிலும் சம்பந்தமில்லாத - அவரது காலத்தில் நடந்த நிக்ழ்சிகளுடன் எந்தவகையிலும் ஒத்துப்போகாத - இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால் முன்னறிவிப்பாவே சொல்லப்படாத பல வசனங்களை இயேசுவோடு சம்பந்தப்படுத்தி, 'அவரது வருகையின் மூலம் இது நிறைவேறியது' என்பது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை ஏன் ஏற்படுத்த வேண்டும்? அதன் மூலம் அவரின் வருகையையே பலர் சந்தேகிக்கும் அளவுக்கு ஒரு தவறான கண்னோட்டத்தை ஏன் உருவாக்க வேண்டும்? என்பது தான் பலராலும் எழுப்பப்பட்டு வரும் நியாயமான கேள்வி என்பதை கிறிஸ்தவ சகோதரர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

பைபிளில் எப்படிப்பட்ட பொய்யான, இயேசுவுக்கு சற்றும் சம்பந்தமில்லாத, தவறான முன்னறிவிப்புகளை இயேசுவின் பெயரால் இட்டுக்கட்டியுள்ளார்கள் என்பதையும், அதை எந்த அளவுக்கு கிறிஸ்தவர்கள் கண்மூடித்தனமாக பின்பற்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் இனி தொடராக பார்ப்போம்:

இயேசுவா? அல்லது இம்மானுவேலா?

இயேசுவின் தாய் மரியாள் இறை அதிசயத்தின் மூலம் இயேசுவைக் கருவுற்றிருக்கும் பொழுது, அவருக்கு கணவனாக நிச்சயிக்கப்பட்டிருந்த யோசேப்பு, மரியாளுடைய கர்ப்பத்தைக் குறித்து சந்தேகித்ததாகவும், அதன் காரணமாக, அவரை தள்ளிவிட யோசித்துக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் யோசேப்புக்கு கணவில் தோன்றி, நடந்த உன்மைகளைக் கூறியதுடன் அவரை தள்ளிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும், மத்தேயு தனது சுவிசேஷத்தில் குறிப்பிடுகின்றார். அப்போது கர்த்தருடைய தூதன் யோசேப்பினிடத்தில், பின்வரும் ஒரு செய்தியையும் கூறியதாக மத்தேயு பதிவு செய்கின்றார்:

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். - மத்தேயு 1:21

இத்துடன் கர்த்தருடைய தூதன் கணவின் மூலம் யோசேப்பிடம் கூறிய செய்தி முடிவடைந்து விடுகின்றது.

ஆனால், இந்த சுவிசேஷத்தை எழுதிய மத்தேயுவோ, இந்த சம்பவத்திற்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத ஒரு கருத்தை - அதுவும் மேலே நாம் எடுத்துக்காட்டிய மத்தேயு 1:21ம் வசனத்திற்கு மாற்றமான ஒரு கருத்தை, அதன் அடுத்தடுத்த வசனங்களிலேயே பதிவு செய்கின்றார்:

தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். - மத்தேயு 1:22-23

அதாவது முன்னர் வந்த தீர்க்கதரிசியால் முன்னறிவிக்கப்பட்ட செய்தி ஒன்று நிறைவேறும் வகையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக இந்த வசனத்தின் மூலம் மத்தேயு குறிப்பிடுகின்றார்.

ஆனால், இந்த சம்பவத்திற்கும், மத்தேயு எடுத்துக்காட்டும் இந்த முன்னறிவிப்பிற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கின்றதா? என்றால் ஒன்றும் கிடையாது.

ஏனெனில் கர்த்தருடைய தூதன் யோசேப்பிடம் கூறியதாக சொல்லப்படும் செய்தியில், 'மரியாள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு 'இயேசு' என்று பெயரிடுவாயாக' என்று கூறப்படுகின்றது. ஆனால் இந்த சம்பவத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக, மத்தேயுவால் எடுத்துக்காட்டப்படும் முன்னறிவிப்பிலோ, 'ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்' என்றிருக்கின்றது. இந்த வசனத்தின் படி பார்த்தால், இயேசு பிறந்ததும் அவருக்கு 'இம்மானுவேல்' என்று பெயரிட்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் இந்த முன்னறிவிப்பு அவருக்கு பொருந்துவதாக அமையும். அதைத்தான் இந்த வசனமும் குறிப்பிடுகின்றது. ஆனால், அவ்வாறு அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிட்டார்களா? என்றால் கிடையாது.

மத்தேயுவால் முன்னறிவிப்பாக எடுத்துக் காட்டப்படும் இந்த வசனத்தில் மிகத் தெளிவாக, 'கன்னிகை கர்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்' என்று கூறப்படுகின்றது. ஆனால் இயேசுவுக்கு 'இம்மானுவேல்' என்று பெயர் சூட்டப்பட்டாக பைபிளில் எந்த ஒரு வசனமும் கிடையாது. இதை எடுத்துக்கூறும் மத்தேயு தனது சுவிசேஷத்தில் கூட, அப்படி ஒரு பெயர் சூட்டப்பட்டதாக எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடவும் இல்லை. அப்படி பெயர் சூட்டப்பட்டதாக முழு பைபிளிலிருந்து ஒரு வசனத்தையும் யாராலும் காட்ட முடியாது. இயேசுவுக்கு இம்மானுவேல் என்ற பெயரை அவரது தாயார் சூட்டவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவரது காலத்தில் - அந்தப் பெயரை வைத்து வேறு யாராவது அவரை 'இம்மானுவேல்' என்று அழைத்துள்ளார்களா? என்றால் அதுவும் கிடையாது. மொத்த பைபிளிலும் அப்படி அழைத்ததாக எந்த ஒரு குறிப்பும் கிடையாது. அப்படி இருக்க இந்த இம்மானுவேல் என்ற முன்னறிவிப்பு, இயேசுவுவைப் பற்றி சொல்லப்பட்டதாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? இதை முதலில் கிறிஸ்தவ சகோதரர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.

அடுத்து, மத்தேயுவால் சுட்டிக்காட்டப்படும் இந்த 'இம்மானுவேல்' என்ற முன்னறிவிப்பு, பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் ஒன்றான ஏசாயாவின் 7:14ம் வசனத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த வசனம் இதோ:

அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள் நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ? ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார். இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். - ஏசாயா 7:13-14

இந்த வசனத்தைத் தான் மத்தேயு தனது சுவிசேஷத்தில் குறிப்பிட்டுவிட்டு, இயேசுவின் மூலமாக இந்த முன்னறிவிப்பு நிறைவேறியதாக எழுதுகின்றார். இவர் குறிப்பிடுவது போன்று இந்த முன்னறிவிப்பு இயேசுவைத்தான் குறிக்குமா என்றால் கண்டிப்பாக குறிக்காது. ஏனெனில், இங்கே முன்னறிவிக்கப்படும் 'இம்மானுவேல்' என்பவரை எப்படி அடையாளம் கண்டுக்கொள்வது? அவர் என்னென்ன செய்வார்? அவர் எப்படி எல்லாம் நடந்துக்கொள்வார்? அவரது காலத்தில் என்னென்ன அiடாயளங்கள் நடக்கும்? என்பதை இதே ஏசாயா 7 ம் அதிகாரத்தின் 15-25ம் வசனங்களில் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றது. அந்த அடையாளங்களில் ஒன்று கூட இயேசுவுக்குப் பொருந்திப்போகவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயது மட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார். அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும். எப்பிராயீம் யூதாவைவிட்டுப்பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் கர்த்தர் உன்மேலும், உன் ஜனத்தின்மேலும், உன் பிதாவுடைய வம்சத்தின்மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரப்பண்ணுவார். அந்நாட்களிலே, கர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியாதேசத்திலிருக்கும் தேனீயையும் பயில்காட்டி அழைப்பார். அவைகள் வந்து ஏகமாய் வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முட்காடுகளிலும், மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும். அக்காலத்திலே ஆண்டவர் கூலிக்குவாங்கின சவரன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால், தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து, தாடியையும் வாங்கிப்போடுவிப்பார். அக்காலத்தில் ஒருவன் ஒரு இளம்பசுவையும், இரண்டு ஆடுகளையும் வளர்த்தால், அவைகள் பூரணமாய்ப் பால் கறக்கிறபடியினால் வெண்ணெயைச் சாப்பிடுவான். தேசத்தின் நடுவில் மீதியாயிருப்பவனெவனும் வெண்ணெயையும் தேனையுமே சாப்பிடுவான். அந்நாளிலே, ஆயிரம் வெள்ளிக்காசு பெறும் ஆயிரம் திராட்சச்செடியிருந்த நிலமெல்லாம் முட்செடியும் நெரிஞ்சிலுமாகும். தேசமெங்கும் முட்செடியும் நெரிஞ்சிலும் உண்டாயிருப்பதினால், அம்புகளையும் வில்லையும் பிடித்து அங்கே போகவேண்டியதாயிருக்கும். மண்வெட்டியால் கொத்தப்படுகிற மலைகள் உண்டே முட்செடிகளுக்கும் நெரிஞ்சில்களுக்கும் பயப்படுவதினால் அவைகளில் ஒன்றிற்கும் போகக்கூடாமையினால், அவைகள் மாடுகளை ஓட்டிவிடுவதற்கும், ஆடுகள் மிதிப்பதற்குமான இடமாயிருக்கும் என்றான். - ஏசாயா 7:15-25

இந்த வசனங்களில் சொல்லப்படக்கூடிய எந்த அடையாளமாவது இயேசுவிற்கு பொருந்துகின்றதா? இங்கே குறிப்பிடப்படும் அடையாளங்களில் எந்த ஒரு அடையாளமாவது அவரது காலத்தில நடந்ததாக ஒரு பைபிள் வசனமாவது இருக்கின்றதா? என்றால் முழு பைபிளிலும் - ஒரு இடத்திலும் கிடையாது. இப்படி எந்த வகையிலும் இம்மானுவேலைக் குறித்த இந்த அடையாளங்கள் இயேசுவுக்குப் பொருந்திப்போகாமல் இருக்கும் நிலையில், எப்படி இந்த முன்னறிவிப்பு அவரைக் குறித்து சொல்லப்பட்டதாக இருக்க முடியும்? எனவே இம்மானுவேல் என்ற இந்த முன்னறிவிப்பை பொறுத்தவரை, மத்தேயு போதிய ஞானமின்றி - தவறாக குறிப்பிட்டிருக்க வேண்டும். அல்லது அவரது சுவிசேஷத்தில் இயேசுவின் பெயரால் வேறு யாராவது இந்த வசனத்தை திணித்திருக்கவேண்டும். எது எப்படி இருந்தாலும் இந்த முன்னறிவிப்பு இயேசுவுக்கு எந்த வகையிலும் பொருந்தாது என்பது மட்டும் நிச்சயம்.

அடுத்து, மத்தேயு சுவிசேஷத்தில் தவறாக கோடிட்டுக்காட்டப்படும் 'இம்மானுவேல்' என்ற இந்த முன்னறிவிப்பு இயேசுவிற்கு எந்த வகையிலும் பொருந்தாது என்பதுடன், அப்படிப்பட்ட பெயர் அவருக்கு சூட்டப்பட்டதாகவோ அல்லது அந்தப் பெயரில் அவரை யாரும் அழைத்ததாகவோ பைபிளில் எந்த ஒரு சான்றுகளும் இல்லை என்பதையும், போதுமான ஆதாரங்களுடன் மேலே நாம் பார்த்தோம். இது ஒரு புறமிருக்க, இந்த ஏசாயா 7:14ம் வசனத்தில் கூறப்படும் 'கன்னிகை' என்ற வார்த்தை இயேசுவின் தாய் மரியாளையே குறிக்கும் என்ற ஒரு வாதத்தையும் கிறிஸ்தவர்கள் முன்வைக்கின்றனர்.

இதுவும் சரியான வாதமன்று. ஏனெனில், 'இம்மானுவேல்' பற்றி முன்னறிவிக்கப்படும் ஏசாயா 7:14ம் வசனத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:

ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார் இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.- ஏசாயா 7:14

Therefore the Lord himself shall give you a sign; Behold, a virgin shall conceive, and bear a son, and shall call his name Immanuel.
இந்த வசனத்தில் இடம் பெரும் 'கன்னிகை' (virgin) என்ற சொல்லிற்கு, பழைய ஏற்பாட்டின் மூலமொழியாகக் கருதப்படும் எபிரேயு பைபிளில் இடம்பெற்றுள்ள வார்த்தை Almah (עלמה) என்பதாகும். இந்த Almah (עלמה) என்ற வார்த்தைக்கு Young Woman - இளம் பெண்' என்ற பொருள்தானே தவிர, கிறிஸ்தவ பைபிள்களில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது போல் 'virgin - கன்னிகை' என்ற பொருள் வராது. அப்படியே இந்த இடத்தில் 'virgin - கன்னிகை' என்று மொழிப்பெயர்ப்பதாக இருந்தால், உன்மையில் மூலமொழியில் இடம்பெற்றிருக்க வேண்டிய எபிரேயுச் சொல் Bethulah ("בתולה"), என்பதாகும்.

ஆனால், அவ்வாறு Bethulah ("בתולה") என்ற வார்த்தை இடம்பெறாமல், 'Young woman - இளம் பெண்' என்ற பொருள் தரும் Almah (עלמה) என்ற சொல்லே எபிரேயு பைபிளில் இடம்பெற்றுள்ளதால், இந்த வார்த்தை மரியாளை மட்டும் பிரத்யோகமாக குறிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், இந்த Almah (עלמה) என்ற Young woman - இளம் பெண் என்பவள் திருமணம் முடித்து உடலுறவுக் கொள்ளப்பட்ட பெண்ணாகவும் இருக்கலாம் அல்லது திருமணம் முடிக்காத இளம் பெண்ணாகவும் இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் இது ஒரு பொதுவான பருவ வயதை அடைந்த பெண்ணைதான் குறிக்குமே தவிர, பிரத்யோகமாக கண்ணிப்பெண்ணை மட்டும் குறிக்காது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதை ஏன் இங்கே தெரியப்படுத்துகின்றோம் என்றால், மத்தேயு சுவிசேஷத்தில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ள இம்மானுவேல் என்ற முன்னறிவிப்பு இயேசுவுக்கு அறவே பொருந்தாது என்பதால், அதை வேறு எந்த வகையிலாவது இயேசுவோடு சம்பந்தப்படுத்திவிட வேண்டும் என்பதற்காக, Almah (עלמה) என்ற வார்த்தையை 'கன்னிகை - Virgin' என்று (கிறிஸ்தவ பைபிள்களில்) மொழிப்பெயர்த்து - அது இயேசுவின் தாய் மரியாளையே குறிக்கும் என்று வாதிடுகின்றனர். காரணம், அன்றைய காலத்தில் எந்த ஒரு பெண்ணும் ஆண் துணையின்றி கர்ப்பமடைய முடியாது. இறைவனின் அற்புதம் நிகழ்ந்தாலே தவிர. ஆனால், அன்றைய காலத்தில் ஒரு பெண் - ஒரே ஒரு பெண் - கன்னி கழியாமல் - உடளுறவுக் கொள்ளப்படாமல் (இறை அதிசயத்துடன்) கர்ப்பமடைந்தார் என்றால் அவர் மரியாள் மட்டுமே. எனவே இந்த இடத்தில் Virgin - கன்னிகை என்று மொழிப்பெயர்த்து விட்டால், அது இயேசுவின் தாய் மரியாளையே குறிக்கும் என்ற கருத்தைத் தினிப்பதற்காக இங்கே இவ்வாறு மொழிப்பெயர்த்துள்ளனர். ஆனால் அதற்கும் இங்கே வழி இல்லை என்பது தான் மூல மொழியாகக் நம்பப்படும் எபிரேயு பைபிளிலிருந்து நமக்கு கிடைக்கும் சான்றுகள் என்பதை சகோதரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல, ஏசாயா 7:14ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்க்கதரிசனம் மரியாளை பற்றியதாக இருக்குமானால், அந்த அடையாளத்தைக் கொடுத்த கர்த்தர் அதில் 'கன்னிகை - Virgin' என்பதை மட்டும் பிரத்யோகமாகக் குறிக்கும் Bethulah ("בתולה") என்ற சொல்லை உபயோகிக்காமல் பொதுவான இளம் பெண்களைக் குறிப்பிடும் Almah (עלמה) என்ற சொல்லை உபயோகித்திருப்பாரா என்பதை சிந்தித்துப் பார்த்தாலே, இந்த முன்னறிவிப்பு இயேசுவின் தாயை எந்த வகையிலும் குறிக்காது என்பதை தெளிவாக உணரலாம்.

இன்னும் சொல்லப்போனால், கிறிஸ்தவர்களிடத்தில் பிரபலமாக விளங்கும் ஆங்கில மொழிப்பெயர்ப்பான Revised Standard Version (RSV, NRSV) போன்ற பைபிள்களிலும், யூதர்களால் வெளியிடப்பட்ட Jewish Publication Society of America Version (JPS) மொழிப்பெயர்ப்புகளிலும், இன்னும் வேறு சில பைபிள் மொழிப்பெயர்ப்புகளிலும் இந்த Almah (עלמה) என்ற சொல்லிற்கு 'Young woman - இளம் பெண்' என்றே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, இந்த ஏசாயா 7:14ம் வசனம் இயேசுவை எந்தவகையிலும் குறிக்காது என்பதுடன், மத்தேயு போன்றவர்கள் போதிய ஞானமின்றி தவறாக எழுதிய புத்தகங்களையே கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகங்கள் என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர் என்ற உன்மையை புரிந்துக்கொள்ள வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் கிறிஸ்தவர்களுக்கு சத்தியத்தை அறியும் நல்லதொரு பாக்கியத்தை தந்தருள்வாராக!

குறிப்பு: மத்தேயு சுவிசேஷத்தில் தவறாக கோடிட்டுக்காட்டப்பட்டுள்ள 'இம்மானுவேல்' என்ற இந்த முன்னறிவிப்பில் இன்னும் பல குளறுபடிகளும் இருக்கின்றது என்பதை இங்கே நினைவூட்ட விரும்புகின்றோம். கட்டுரை நீண்டக்கொண்டே செல்வதால் பல விளக்கங்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் அந்த குளறுபடிகளும் விளக்கப்படும்.


இறைவன் நாடினால், பைபிளின் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் தொடரும்...


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Friday, August 07, 2009

இயேசுவின் பிறப்பும் - நட்சத்திரக் கணிப்பும்!


புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்
புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்



புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 3

முரண்பாடு 3:

இயேசுவின் பிறப்பு சம்பந்தப்பட்ட வரலாற்றை பைபிளில் குறிப்பிடும் பொழுது - அவருக்கு புகழ் சேர்க்கின்றோம் என்றப் பெயரில் பல பொய்யான - இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும் சுவிசேஷங்களில் எழுதிவைத்துள்ளனர். குறிப்பாக இந்துமதத்தில் புறையோடிப்போயிருக்கும் போலி கலாச்சாரமான சோதிடம் மற்றும் நாள் நட்சத்திரக் கலாச்சாரத்தையும் மிஞ்சும் வகையில் கதை கட்டியுள்ளது தான் இங்கே கவனிக்கப்படவேண்டிய 'ஹைலைட்' சமாச்சாரம். குறிப்பாக பழைய ஏற்பாட்டு வசனங்களில் கூறப்பட்டதற்கு மாற்றமான ஒரு கருத்தை - தனது சுயக்கருத்தை இயேசுவின் பெயரால் அரங்கேற்றியுள்ளார் சுவிசேஷ எழுத்தாளரான மத்தேயு:

ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து (Magi) சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். - மத்தேயு 2:1-2

அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து: நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள் நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான். ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குள்பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். - மத்தேயு 2:7-11

இந்த வசனங்களின் மூலம், இயேசு என்னும் ஒரு குழந்தை பிறந்திருக்கின்றது என்பதை 'Magi' என்னும் சாஸ்திரிகள் வானத்தில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தின் மூலம் அறிந்துக்கொண்டதாகவும், அந்த நட்சத்திரம் எங்கே சென்று நின்றதோ அதை வைத்து அவர்கள் இயேசுவின் வீட்டை கண்டடைந்ததாகவும் மத்தேயு குறிப்பிடுகின்றார். இந்த கதையின் காரணமாகவே 'கிறிஸ்துமஸ்' கொண்டாட்டங்களில் நட்சத்திர அடையாளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மத்தேயு குறிப்பிடுவது போன்று, இந்த சம்பவம் உன்மையிலேயே நடந்திருக்குமா? என்றால் கண்டிப்பாக நடந்திருக்காது - நடந்திருக்கவும் வாய்ப்பில்லை.

ஏனெனில், இந்த சம்பவத்தைப் பற்றி மத்தேயு குறிப்பிடும் போது 'கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று கேட்டதாகவும், 'கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்' என்று கூறியதாகவும் குறிப்பிடுகின்றார்.

இது உன்மையாக இருந்தால், இந்த சாஸ்திரிகள் நட்சத்திரம் தோன்றிய அடையாளத்தை வைத்து இயேசு பிறந்திருக்கின்றார் என்பதை எப்படி கண்டுபிடித்தனர்? குறிப்பாக யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவரின் அடையாளமான நட்சத்திரம் இது தான் என்பது எப்படி இவர்களுக்குத் தெரிந்தது? இதற்கு ஏதாவது பழைய ஏற்பாட்டு வசனங்களில் ஆதாரம் இருக்கின்றதா? அல்லது இயேசுவின் பிறப்பின் போது இப்படிப்பட்ட ஒரு நட்சத்திரம் வானில் தோன்றும் என்ற முன்னறிவிப்பு ஏதாவது பழைய ஏற்பாட்டில் இருக்கின்றதா? என்றால் ஒரு இடத்திலும் கிடையாது. பழைய ஏற்பாட்டில், இயேசுவின் பிறப்பின் போது, இப்படிப்பட்ட ஒரு அடையாளம் தோன்றும் என்று எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவும் இல்லை. அப்படி இருக்க சாஸ்திரிகளுக்கு நட்சத்திரம் உதயமாவதின் மூலம் இயேசு பிறப்பார் என்பது எப்படித் தெரிந்தது? இதை முதலாவதாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்து, இப்படி எந்த வகையிலும் இதற்கு ஆதாரமான வசனங்கள் பழைய ஏற்பாட்டில் இல்லாதது மட்டுமல்லாமல், இதற்கு எதிரான கருத்தே அதிகமதிகம் காணப்படுகின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். குறிப்பாக நட்சத்திரத்தை வைத்து ஒருவன் எதையேனும் கணித்தானேயானால் அவன் கர்த்தரால் சபிக்கப்பட்டவன் என்றும் இப்படிப்பட்ட செயல்களைச் செய்வது கர்த்தருக்கு அருவருப்பானது என்றும் பைபிள் வசனங்கள் குறிப்பிடுகின்றது. இன்னும் தெளிவாக கூறுவது என்றால், மத்தேயு குறிப்பிடும் இந்த 'Magi' என்னும் சாஸ்திரிகளால் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் கர்த்தரால் முற்றிலும் தடுக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. ஏனெனில் இந்த 'Magi' என்னும் சாஸ்திரிகளின் பிரதான வேலையோ, ஜோதிடம் சொல்வது, நட்சத்திரத்தின் மூலம் நல்லது கெட்டதைக் கணிப்பது, நாள் நட்சத்திரம் பார்ப்பது போன்ற கர்த்தரால் தடை செய்யப்ப்டட செயல்களைச் செய்பவர்கள் என்று பைபிள் அறிஞர்களே குறிப்பிடுகின்றனர்.

தமிழ் பைபிளில் 'சாஸ்திரிகள்' என்று குறிப்பிடப்படும் சொல்லிற்கு கிரேக்க பைபிளில் உபயோகப்படுத்தப்படும் வார்த்தை μαγοι (magos) என்பதாகும். இதற்கு மந்திரவாதிகள், சூனியம் செய்பவர்கள், நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களை வைத்து ஜோதிடம் கூறுபவர்கள் என்று பொருள்படும். இப்படிப்பட்டர்களின் செயல்கள் எந்த அளவுக்குத் கர்த்தரால் தடுக்கப்பட்டது என்பதை பின்வரும் பைபிள் வசனங்கள் குறிப்பிடுகின்றது:

உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய் இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும். இதோ, அவர்கள் தாளடியைப்போல இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும் அவர்கள் தங்கள் பிராணனை அக்கினிஜுவாலையினின்று விடுவிப்பதில்லை அது குளிர்காயத்தக்க தழலுமல்ல எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல. - ஏசாயா 47:13-14

புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள். - எரேமியா 10:2

தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன். இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார். - உபாகமம் 18:10-13

யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக - லேவியராகமம் 19:26

இந்த வசனங்களில் மிகத் தெளிவாக நட்சத்திரங்களின் மூலம் கணிப்பது மிக மிகத் தவறு என்பதுடன், அப்படி செய்பவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் - என்றும் அது கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு செயல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. ஆனால், இதற்கு மாற்றமாக மத்தேயுவோ, நட்சத்திரங்களைப் பார்த்து கணிப்பவர்கள் சாஸ்திரிகள் - ஞானிகள் என்றும், அவர்கள் இயேசுவின் பிறப்பை நட்சத்திரத்தின் மூலம் அறிந்து, அதை வைத்து பிறந்த இடத்தைக் கண்டுபிடித்து இயேசுவையும் அவரது தாயாரையும் பணிந்துக்கொண்டார்கள் என்றும் குறிப்பிடுகின்றார்.

அது மட்டுமல்ல, இந்த சம்பவத்தின் மூலம் மற்றொரு பாரதூரமான கருத்தையும் மத்தேயு பதிவு செய்கின்றார். அதாவது, 'Magi' என்னும் சாஸ்திரிகளின் இந்த தவறான செயலை கர்த்தர் அங்கீகரித்தது போன்ற ஒரு மாயத்தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றார். எப்படியெனில், இயேசு பிறந்தபோது மரியாளின் புருசனாகிய யோசேப்புக்கு கர்த்தருடைய தூதன் கணவில் தோன்றி ஏரோது ராஜாவிடமிருந்து குழந்தை இயேசுவைக் காப்பாற்றும் முகமாக, எகிப்துக்கு ஓடிப்போய்விடும்படி எச்சரித்தது போன்று, இந்த 'Magi' என்னும் சாஸ்திரிகளையும் கர்த்தர் எச்சரித்ததாக எழுதுகின்றார்:

பின்பு, அவர்கள் (சாஸ்திரிகள்) ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். - மத்தேயு 2:12

அதாவது இந்த சாஸ்திரிகள் நட்சத்திரத்தைப் பார்த்து இயேசுவின் பிறப்பை அறிந்துக்கொண்டதன் பின் கர்த்தர் அவர்களுக்கு சொப்பனத்தில் தோன்றி, நீங்கள் கண்டவைகளை குறித்து ஏரோது ராஜவிடம் தெரிவித்து விடாத வண்ணம் வேறு வழியில் சென்று விடுமாறு கூறியதாக எழுதுகின்றார். இதன் மூலம் அவர்களின் செயலுக்கு கர்த்தரின் அங்கீகாரம் கிடைத்தது என்பது போன்ற ஒரு தோற்றம் இங்கே ஏற்படுத்தப்படுகின்றது. ஆனால் இது உன்மையா? இப்படி கர்த்தர் அவர்களிடம் சொப்பனத்தில் தோன்றி பேசியிருப்பாரா? என்றால் கண்டிப்பாக நடந்திருக்காது.

ஏனெனில் நாம் முன்பு ஏடுத்துக்காட்டிய பைபிள் வசனங்களிலோ இப்படி நட்சத்திரங்களின் மூலம் கணிப்பவர்கள் அஞ்ஞானிகள் - அவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் - அவர்கள் செயல்கள் கர்த்தரின் கட்டளைக்கு எதிரானது - கர்த்தர் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார் என்பதை தெளிவாக கூறியிருக்க, பின்னர் எப்படி இந்த சாஸ்திரிகளிடம் கர்த்தர் கணவின் மூலம் பேசி, அவர்களை எச்சரித்திருப்பார்? இது இவர்களின் செயல்களை நியாயப்படுத்தியது போன்று ஆகிவிடாதா?

இயேசுவின் பிறப்பின் போது இது போன்ற ஒரு நட்சத்திரம் தோன்றும் - அதன் மூலம் இயேசுவின் பிறப்பை அறிந்துக்கொள்ளலாம் என்று எந்த ஒரு வசனமும் பைபிளில் முன்னறிவிக்கப்படாததுடன், நட்சத்திரங்களைப் பார்த்து கணிப்பவர்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் என்றும் அப்படிப்பட்டவர்களின் செயல்களை நீங்களும் கற்றுக்கொள்ளாதீர்கள் என்றும் கர்த்தரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டிருக்க, எப்படி இந்த சம்பவம் நடைபெற்றிருக்கும்? அதுவும் சத்தியத்தை மக்களுக்கு போதிக்க வந்த இயேசுவின் வாழ்வில் நடைபெற்றிருக்குமா? இதை கிறிஸ்தவ சகோதரர்கள் நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.

இயேசுவைப் பற்றிய உன்மையான வரலாற்றை சுருக்கமாகவும், தெளிவாகவும், உள்ளதை உள்ளபடி எடுத்துக்கூறக்கூடியது ஒரே ஒரு இறைவேதம் திருக்குர்ஆன் மட்டுமே என்ற உன்மையை கிறிஸ்தவ சகோதரர்கள் புரிந்துக்கொள்ளவேண்டும். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு சத்தியத்தை விளங்கும் பாக்கியத்தை தந்தருள்வாராக!

இறைவன் நாடினால் முரண்பாடுகள் தொடரும்....


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click heree

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.