அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!
Showing posts with label கிறிஸ்துமஸ். Show all posts
Showing posts with label கிறிஸ்துமஸ். Show all posts

Monday, December 24, 2012

டிசம்பர் 25: கிறிஸ்துமஸ் - இயேசு பிறந்த தினமா?

வருடந்தோரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் - இயேசுவின் பிறந்த தினம் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. எனினும், கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியன் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐ குறிக்கும் நாளான ஜனவரி 7ம் நாளில் கொண்டாடுகின்றனர். எது எப்படி இருந்தாலும் இயேசு டிசம்பர் 25ம் தேதியே பிறந்தார் என்று முடிவு செய்து அதன் அடிப்படையில் இந்த நாட்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகின்றது.

உலகம் இந்த அண்ட சராசரங்களை படைத்த – பிறப்பும் இறப்பும் இல்லாத – ஆதியும் அந்தமும் இல்லாத கர்த்தருக்கே(?) பிறந்த நாளா? என்ற கேள்விகளெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். அந்த கர்த்தர்(?) பிறந்தது டிசம்பர் 25 தான் என்பதற்கு எந்த ஆதாரமாவது இருக்கின்றதா? அப்படி ஏதாவது ஒரு ஆதாரம், கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய பைபிளில் இருக்கின்றதா? அல்லது வேறு ஏதாவது வரலாற்றுரீதியான ஒரு ஆதாரம் இருக்கின்றதா? என்றால் எந்த ஒரு ஆதாரமும் எதிலும் கிடையாது. மாறாக இயேசு பிறந்தது டிசம்பர் மாதமாக இருக்காது என்பதற்கு வேண்டுமானால் மிகத் தெளிவான ஆதாரங்கள் பைபிளிலே இருக்கின்றது. அதை இனி பார்ப்போம்.

இயேசு பிறந்தது எப்போது?

இயேசு பிறந்த காலகட்டத்தையும், அவர் பிறக்கும் போது நடந்த சில நிகழ்வுகளையும் லூக்கா தனது சுவிஷேசத்தில பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: 

அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது அவர்கள் மிகவும் பயந்தார்கள். – லூக்கா 2:1-9

இந்த வசனங்களில், சொல்லப்பட்டுள்ள கருத்தை நாம் உற்று நோக்கினால், கண்டிப்பாக இயேசு டிசம்பர் மாதத்தில் பிறக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியும்.

ஏனெனில், இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள அத்தனை நிகழ்வுகளும் கண்டிப்பாக கடும் குளிர் நிறைந்த டிசம்பர் மாதத்தில் நடக்கும் சம்பவங்களே அல்ல என்பது தான் நாம் இங்கே கவணிக்கவேன்டிய மிக முக்கியமான கருத்து. காரணம், இந்த வசனங்களில் லூக்கா பின்வரும் சில நிகழ்வுகளை தனது சுவிஷேசத்தில் கோடிட்டுக்காட்டுகின்றார்:

•    அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. 

•    அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.

•    அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

இங்கே குறிப்பிடப்படும் முக்கியமான இந்த மூன்று நிகழ்வுகளில், எந்த ஒரு நிகழ்வும், கண்டிப்பாக குளிர் காலங்களில் - அதுவும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் கடும் குளிர் அடிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் - நடைபெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்துக்கொள்ளலாம்.

முதலாவதாக, எந்த ஒரு அரசனும், மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காக, குளிர்காலங்களைத் தேர்ந்தெடுக்க மாட்டார். காரணம், அப்படிப்பட்ட நாட்களில் பொது மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியாது. அதுவும் வாகன வசதியே இல்லாத இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்பது இது அறவே சாத்தியமில்லாதது. ஆனால் லூக்கா இயேசு பிறந்த போது அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள் என்று குறிப்பிடுகின்றார். இதன் அடிப்படையில் பார்த்தால், கண்டிப்பாக இயேசு கடும் குளிர் காலமான டிசம்பர் மாதத்தில் பிறந்திருக்க முடியாது.

அடுத்து, கர்ப்பவாதியான ஒரு பெண் சாதாரன நாட்களிலேயே கூட பல இடங்களுக்கும் அலைந்து திரியமுடியாத நிலையில், நிறைமாத கர்ப்பிணியான மரியாள், எந்த வாகன வசதியும் இல்லாத அன்றைய காலத்தில் பல மைல் தூரமுள்ள கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் செல்கின்றார் என்றால், குளிர் நிறைந்த காலங்களான டிசம்பர் மாதத்தில் சென்றிருப்பார்களா? அல்லது கோடையின் பிற்பகுதியாக ஜூன் - ஜூலை மாதங்களில் சென்றிருப்பார்களா? என்பதை சிந்தித்தாலே கண்டிப்பாக கோடையின் பிற்பகுதியில் தான் இயேசுவின் பிறப்பு நடந்திருக்க வேண்டும் என்பது தெளிவாக விளங்கும். எனவே இதைவைத்து பார்த்தாலும் இயேசு கண்டிப்பாக கடும் குளிர் காலமான டிசம்பர் மாதத்தில் பிறந்திருக்க முடியாது.

அதைவிட மிக முக்கியமாக அவர் பிறந்த போது, இரவு நேரத்தில், மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி இரத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள் என்று கூறப்படுகின்றது. மேய்பர்கள் வயல்வெளியில் தங்கி இரவுக் காலங்களில் மந்தைகளைக் காத்துக்கொண்டிருப்பது எந்த காலமாக இருக்கும்? குளிர் நிறைந்த நவம்பர் டிசம்பர் மாதங்களிலா? அல்லது கோடைகலாத்தின் பிற்பகுதிகளான, ஜூன் - ஜூலை மாதங்களிலா? என்பதை நாம் சிந்தித்தாலே இது கண்டிப்பாக கோடையில் பிற்பகுதிகளில் தான் நடைபெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவாக விளங்கும். ஏனெனில், எந்த ஒரு பகுதியிலும் கடும் குளிர் அடிக்கும் டிசம்பர் மாதங்களில் வயல்வெளிகளில் மேய்ப்பர்கள் தங்க மாட்டார்கள் - தங்கவும் முடியாது. அதுவும் கடும் குளிர் அடிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இது சாத்தியமா? என்பதை எல்லாம் கவனித்தால், இந்த சம்பவம் கண்டிப்பாக டிசம்பர் மாதத்தில் நடைபெறவில்லை என்பது தெளிவாகும்.

லூக்காவின் 2:1-9 வசனங்களின்படி இயேசுவின் பிறப்பு எப்போது நடைபெற்றிருக்கும் என்றால் கண்டிப்பாக கோடையின் பிற்பகுதியான ஜூன் - ஜூலை மாததங்களில் தான் என்பது தெளிவு. எனவே கண்டிப்பாக இயேசு பிறந்தது டிசம்பர் மாதத்தில் அல்ல.

இயேசுவின் பிறந்தநாளை அவரோ அல்லது அவரது சீடர்களோ கொண்டாடியாதாக எந்த ஒரு ஆதாரமும் பைபிளிலோ அல்லது வரலாற்று ஆதாரங்களிலோ இல்லாதபோது, அதற்கு மாற்றமாக அவரது பிறந்தநாளை கொண்டாடும் கிறிஸ்தவர்கள், தங்களது வேதத்திற்கு முரணில்லாத வகையில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்திருந்தால், எந்த ஒரு கேள்வியும் யாருக்கும் எழப்போவதில்லை. ஆனால், லூக்கா சுவிஷேசத்தின் படி மிக மிகத் தெளிவாக டிசம்பர் மாதத்தில் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றுத் தெரிந்தும் அந்த நாளை ஒரு பண்டிகைத் தினமாக கொண்டாடுகின்றார்கள் என்றால் அவர்கள எந்த அளவுக்க பைபிளை விட்டு இயேசுவின் போதனைகளை விட்டு வெளியேறி மனித கற்பனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பது நன்றாகப் புரியும்.

இதை பிஷப் பர்னஸ் என்பவர் தனது ‘Rise of Christianity’ எனும் நூலில் ஒப்புக்கொள்கின்றார்:

'மேலும் டிசம்பர் 25 ஏசுவின் பிறந்த நாள் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. லூக்காவில் சொல்லப்பட்டுள்ள இயேசுவின் பிறப்பு பற்றிய செய்தியான – பெத்லகேமுக்கு அருகில் உள்ள வயல்வெளிகளில் அப்போது இடையர்கள் தங்கள் மந்தைகளை இரவுக் காலங்களில் காத்துக்கொண்டிருந்தார்கள் என்பதற்கு நாம் ஏதும் மதிப்பு கொடுப்பதாயிருந்தால் நிச்சயமாக இயேசுவின் பிறப்பு குளிர்காலத்தில் நிகழவில்லை. குன்றுகள் நிறைந்த யூதேயா பகுதிகளில் குளிர்கால இரவுகளில் தட்பவெப்ப நிலை பனி உரைந்து மிகவும் தாழ்ந்து இருக்கும். பல கடுமையான வாதங்களுக்குப் பின்னரே நமது கிறிஸ்துமஸ் நாள் ஏறக்குறைய கி.பி 300 வாக்கில் ஒப்புக்கொள்ளப்பட்டது.'

இதைத்தான் 'தி ஆக்ஸ்போர்ட் டிஷ்னரி ஆஃப் கிறிஸ்டியன் சர்ச்' என்ற நூல் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நாளானது மரபு வழி வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று என்று (The Oxford Dictionary of Christian Church), Oxford University Press, London (1977), p. 280 

ஆக, இயேசுவின் பிறந்த தினம் என்பது எந்த ஒரு உறுதியான ஆதாரமும் இன்றி, இவர்களால் கற்பனையாக ஏற்படுத்த ஒன்று என்பதை இவர்களே ஒப்புக்கொள்கின்றார்கள்.

இவர்களைக் குறித்து தான் ஏசாயா 29:13ல் 'இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள். அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது' என்று கூறப்படுகின்றது.

எப்படி இயேசு கடவுள் இல்லை, அவரை வணங்கக்கூடாது என்பதற்கு பைபிளிலே தெளிவான ஆதாரங்கள் இருந்தும், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அவரை கடவுள் என்று கிறிஸ்தவர்கள் வணங்கிக்கொன்றார்களோ அது போல், இயேசு டிசம்பர் மாதத்தில் பிறக்கவில்லை என்று தெளிவான ஆதாரங்கள் இருந்தும், அதையும் மீறி அவர்கள் அந்த நாளை சிறப்பு தினமாக, பண்டிகை நாளாக கொண்டாடுகின்றார்கள் என்றால், அவர்கள் இயேசுவையோ அல்லது இயேசுவின் கொள்கைகளையோ ஒரு போதும் பின்பற்றவில்லை, மாறாக அவர்கள் புறமத கலாச்சாரங்களையும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட கற்பனைகளையுமே பின்பற்றுகின்றார்கள் என்பது தெளிவாக விளங்கும்.

எனவே, இயேசு டிசம்பர் 25 - பிறக்கவில்லை என்பது மேற்கூறப்பட்டுள்ள பைபிள் வசனங்களிலிருந்தே தெளிவாக தெரிகின்றது. இருந்தாலும் கிறஸ்துமஸ் கொண்டாட்டம் எப்படி கிறிஸ்தவமத்தில் நுழைந்து என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

இறைவன் நாடினால் தொடரும்...

Friday, December 21, 2012

இயேசு பிறந்த ஆண்டு எது?


புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 4

பைபிளின் சுவிஷேசங்களிடையே, இயேசு பிறந்தபோது போது நடந்த சம்பவங்களில் உள்ள முரண்பாடுகளை முன்பே நாம் விளக்கியிருந்தோம். அதை பார்க்க:






இயேசு பிறந்தபோது நடந்த சம்பவங்களில் உள்ள முரண்பாடுகளைப் போலவே, இயேசு எந்த ஆண்டில் பிறந்தார் என்பதிலும் சுவிஷேசங்களுக்கிடையே முரண்பாடுகள் காணப்படுகின்றது.

அவர் எப்போது பிறந்தார் என்பதை மத்தேயு பின்வருமாறு பதிவு செய்கின்றார்:

(Herod the Great) ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபொழுது,... - மத்தேயு 2:1

ஏரோது ராஜாவின் ஆட்சிகாலத்தில் தான் இயேசு பிறந்ததாக மத்தேயு இந்த வசனத்தின் மூலம் குறிப்பிடுகின்றார். இயேசு பிறக்கும் சமயத்தில், இந்த ஏரோது ஆட்சியில் இருந்த காரணத்தினால்தான், இயேசுவைப் பெற்றெடுப்பதற்காக அவரது தாயும் அவருக்கு புருஷனாக நியமிக்கப்பட்டிருந்த யோசேப்பும் பல்வேறு சிரமங்களை அனுபவித்தாகவும் - அதற்கு ஆதாரமாக பல்வேறு சம்பவங்களையும் மத்தேயு தனது சுவிஷேசத்தில் குறிப்பிடுகின்றார்.

இந்த ஏரோது வாழ்ந்த காலகட்டம் எது? என்பதை  Encyclopedia Wikipedia பின்வருமாறு தெரிவிக்கின்றது:

‘Herod also known as Herod the Great (born 73 or 74 BCE, died 4 BCE in Jericho[1]), was a Roman client king of Judea


அதாவது, ஏரோது ராஜா கி.மு 73 அல்லது 74ம் ஆண்டில் பிறந்ததாகவும், அவர் மரணமடைந்தது கி.பி 4ம் ஆண்டில் என்று குறிப்பிடுகின்றது. அதாவது அவர் மொத்தம் 70 வயது வரை வாழ்ந்ததாக குறிப்பிடுகின்றது. அதுபோல் அவரது ஆட்சிக்காலம் கி.மு 37 முதல் கி.பி. 4ம் ஆண்டுவரை, அதாவது அவர் மரணமடையும் வரை ஆட்சி செய்ததாகவும் அதே விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் தெரிவிக்கின்றது.  


மத்தேயு சுவிஷேசத்தின்படி பார்த்தால், இயேசு கண்டிப்பாக கி.பி 4ம் ஆண்டுக்கு முன், அதாவது ஏரோது மரணமடையும் முன்பே பிறந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது.

ஆனால் லூக்காவே இதற்கு நேர்முரணாக தனது சுவிஷேசத்தில் இயேசுவின் பிறந்த ஆண்டை வேறு விதமாக பதிவு செய்கின்றார்:


அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியாநாட்டிலே சிரேனியு (Cyrenius or Quirinius) என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. – லூக்கா – 2:1-2

அதாவது அவர் பிறக்கும் போது, மக்கள் தொகை கணக்கெடுக்கும் படி
Caesar Augustus - அகஸ்துராயனால் கட்டளை பிறந்தததாகவும், அப்போது சீரியா (Syria) நாட்டில் சிரேனியு என்கிற கிரேனியு (Cyrenius or Quirinius) என்பவன் Governor - தேசாதிபதாயாக இருந்ததாகவும், அந்த சமயமே, முதலாம் மக்கள் தொகை கணக்கெடுப்பு கொண்டுவரப்பட்டதாகவும் லூக்கா பதிவு செய்கின்றார்.

இதன் மூலம், இயேசு பிறக்கும் பொழுது Caesar Augustus – அகஸ்துராயன் ஆட்சிசெய்தான், அப்போது Syria - சீரியா நாட்டிற்கு சிரோனியு (Cyrenius or Quirinius) என்பவன்  Governor – தேசாதிபதியாக இருந்தான் என்று லூக்கா குறிப்பிடுகின்றார். இந்த சிரோனியு தேசாதிபதியாக பதவியேற்றது எப்போது? அதை Encyclopedia Wikipedia பின்வருமாறு குறிப்பிடுகின்றது: 

Publius Sulpicius Quirinius (Greek Κυρήνιος - Kyrenios or Cyrenius, c. 51 BC – AD 21) was a Roman aristocrat. After the banishment of the ethnarch Herod Archelaus from the tetrarchy of Judea in AD 6, Quirinius was appointed legate governor of Syria, to which the province of Iudaea had been added for the purpose of a census.[1]


அதாவது, இந்த சிரோனியு என்கிற கிரேனியு தேசாதிபதியாக பொறுப்பேற்றது கி.பி 6ம் ஆண்டு என்கிறது விக்கிபிடியா கலைக்களஞ்சியம்.

மேற்கூறப்பட்ட வரலாற்று ஆதாரங்களின் படி, சிரோனியு என்கிற கிரேனியு தேசாதிபதியாக பொருப்பேற்றது, ஏரோது ராஜா மரணித்து சில ஆண்டுகள் கழித்து தான் என்பது தெளிவாகத் தெரிகின்றது. அதாவது ஏரோது ராஜா மரணமடைந்தது கி.பி.4ம் ஆண்டு, ஆனால், சிரோனியு என்கிற கிரேனியு தேசாதிபதியாக பொருப்பேற்றதோ கி.பி 6 ம் ஆண்டு. இப்படி இருக்கும் பொழுது ஏரோதுவின் காலத்திலும், சிரேனியுவின் காலத்திலும் இயேசு எப்படி ஒருசேர பிறந்திருக்க முடியம்?

ஒன்று, மத்தேயுவின் கூற்றுப்படி இயேசு பிறந்தது ஏரோதுவின் ஆட்சிக் காலத்தில் என்றால், சிரோனியு தேசாதிபதியாக இருந்திருக்க முடியாது?  ஏனெனில், சிரோனியு தேசாதிபதியாக வரும் முன்பே ஏரோது இறந்துவிட்டதாக வரலாறுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இல்லை, கிரேனியுவின் ஆட்சிக்காலத்தில்தான் இயேசு பிறந்தார் என்றால், ஏரோதுவின் கொடுமைகளை இயேசுவின் பெற்றோர் சந்தித்திருக்க முடியாது. ஏனெனில், சிரோனியு ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஏரோது மரணித்து விட்டானே! பிறகு எப்படி அவன் இயேசுவின் பெற்றோரை கொடுமை செய்திருப்பான்? சிந்திக்க வேண்டாமா?

மத்தேயு தனது சுவிஷேசத்தில் இயேசு பிறக்கும் சமயம், ஏரோது ஆட்சியில் இருந்ததன் காரணத்தால், இயேசுவைப் பெற்றெடுப்பதற்காக அவரது தாயாரும், அவருக்கு நியமிக்கப்பட்டிருந்த யோசேப்பும் பல்வேறு சோதனைகளைச் சந்தித்ததாகவும், அதற்கு பயந்து பல ஊர்களில் மறைந்தும் ஒளிந்தும் வாழ்ந்ததாகவும் இதற்கெல்லாம் காரணம் ஏரோது ராஜா குழந்தை இயேசுவை கொலைசெய்யத் தேடியது தான் என்றும் கூறுகின்றார். அதற்காக பல்வேறு வகையான முன்னறிவிப்புகளையும்(?) கோடிட்டு காட்டுகின்றார். ஆனால் லூக்காவே, "ச்.சச்.. சே.. அப்படியெல்லாம் நடக்கவே இல்லை! சும்மா கதை விடக்கூடாது. இயேசு பிறந்ததோ ஏரோது ராஜா மரணித்து சில ஆண்டுகள் கழித்து, சிரோனியு சிரியாவில் தேசாதிபதியாக பெருப்பேற்றப் பிறகுதான். அப்படி இருக்கும் பொழுது, ஏரோது எப்படி குழந்தை இயேசுவை கொலைசெய்ய தேடியிருப்பார்? சும்மா சிறுபிள்ளைத் தனமாக வரலாற்றை மாற்றாதீர்கள்" என்கிறார்.

இதில் எது சரி கிறிஸ்தவர்களே!

பைபிள் உன்மையிலேயே கர்த்தருடைய வேதமாக இருந்தால் இந்த முரண்பாடு வந்திருக்குமா? கர்த்தருடைய குமாரன்(?) எப்பொழுது பிறந்தார் என்பதில் கர்த்தருக்கே குழப்பமா?  சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!

இயேசுவின் பிறந்த ஆண்டிலே இவ்வளவு முரண்பாடுகள் என்றால், அவர் பிறந்ததாகச் சொல்லப்படும் டிசம்பர் 25 எம்மாத்திரம்! அதையும் அடுத்த கட்டுரையில் இனஷா அல்லாஹ் அலசிவிடுவோம்.

நீங்கள் உன்மையான கிறிஸ்துவின் வரலாற்றை அறிய வேண்டுமானால் உடனே படிக்கவேண்டியது இறுதித் திருமறையான திருக்குர்ஆனைத் தான்.

திருக்குர்ஆனை திறந்த மனதுடன் படியுங்கள். சத்தியத்தை அறியுங்கள்! சத்தியம் உங்ளை விடுதலையாக்கும்!


Wednesday, August 19, 2009

இயேசுவா? அல்லது இம்மானுவேலா?


இயேசுவின் வருகையும் - பொருத்தமற்ற முன்னறிவிப்புகளும்! (பாகம் 1)


இயேசுவின் வரலாற்றை விவரிப்பதாக சொல்லப்படும் புதிய ஏறபாட்டின் முதல் நான்கு சுவிசேஷங்களில் அவரைப் பற்றிய உன்மையான செய்திகளுக்கு பதிலாக, பல பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட, முரண்பாடான செய்திகளே அதிகமதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நாம் பல கட்டுரைகள் வாயிலாக அறிந்து வருகின்றோம்.

அதன் தொடர்ச்சியாக, இயேசுவின் பெயரால் இன்னும் என்னென்ன வகையிலான பொய்ச்செய்திகள் சுவிசேஷ எழுத்தாளர்கள் மூலம் பைபிளில் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கும் மற்றொரு ஆதாரமே இயேசுவின் பெயரால் கூறப்பட்டுள்ள பொருத்தமற்ற முன்னறிவிப்புகள்.

குறிப்பாக, புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு சுவிசேஷங்களில் இயேசுவின் வாழ்வில் நடந்ததாக சொல்லப்படும் பல சம்பவங்கள், முந்தைய தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்டு அது நிறைவேறும் வகையில் நடந்ததாகவும், அதன் மூலம் இயேசுவின் வருகை முழுமையாக நிறைவு செய்யப்பட்டுவிட்டது என்பது போன்ற ஒரு தோற்றம், சுவிசேஷ எழுத்தாளர்களால் ஏற்படுத்தப்படுகின்றது.

உண்மையிலேயே இயேசுவைப் பற்றித்தான் அந்த முன்னறிவிப்புகள் குறிப்பிடுகின்றது என்றால் அதை எடுத்துக்கூறுவதில் யாருக்கும் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இருக்கபோவதில்லை. ஆனால், இயேசுவுக்கு எந்தவகையிலும் சம்பந்தமில்லாத - அவரது காலத்தில் நடந்த நிக்ழ்சிகளுடன் எந்தவகையிலும் ஒத்துப்போகாத - இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால் முன்னறிவிப்பாவே சொல்லப்படாத பல வசனங்களை இயேசுவோடு சம்பந்தப்படுத்தி, 'அவரது வருகையின் மூலம் இது நிறைவேறியது' என்பது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை ஏன் ஏற்படுத்த வேண்டும்? அதன் மூலம் அவரின் வருகையையே பலர் சந்தேகிக்கும் அளவுக்கு ஒரு தவறான கண்னோட்டத்தை ஏன் உருவாக்க வேண்டும்? என்பது தான் பலராலும் எழுப்பப்பட்டு வரும் நியாயமான கேள்வி என்பதை கிறிஸ்தவ சகோதரர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

பைபிளில் எப்படிப்பட்ட பொய்யான, இயேசுவுக்கு சற்றும் சம்பந்தமில்லாத, தவறான முன்னறிவிப்புகளை இயேசுவின் பெயரால் இட்டுக்கட்டியுள்ளார்கள் என்பதையும், அதை எந்த அளவுக்கு கிறிஸ்தவர்கள் கண்மூடித்தனமாக பின்பற்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் இனி தொடராக பார்ப்போம்:

இயேசுவா? அல்லது இம்மானுவேலா?

இயேசுவின் தாய் மரியாள் இறை அதிசயத்தின் மூலம் இயேசுவைக் கருவுற்றிருக்கும் பொழுது, அவருக்கு கணவனாக நிச்சயிக்கப்பட்டிருந்த யோசேப்பு, மரியாளுடைய கர்ப்பத்தைக் குறித்து சந்தேகித்ததாகவும், அதன் காரணமாக, அவரை தள்ளிவிட யோசித்துக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் யோசேப்புக்கு கணவில் தோன்றி, நடந்த உன்மைகளைக் கூறியதுடன் அவரை தள்ளிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும், மத்தேயு தனது சுவிசேஷத்தில் குறிப்பிடுகின்றார். அப்போது கர்த்தருடைய தூதன் யோசேப்பினிடத்தில், பின்வரும் ஒரு செய்தியையும் கூறியதாக மத்தேயு பதிவு செய்கின்றார்:

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். - மத்தேயு 1:21

இத்துடன் கர்த்தருடைய தூதன் கணவின் மூலம் யோசேப்பிடம் கூறிய செய்தி முடிவடைந்து விடுகின்றது.

ஆனால், இந்த சுவிசேஷத்தை எழுதிய மத்தேயுவோ, இந்த சம்பவத்திற்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத ஒரு கருத்தை - அதுவும் மேலே நாம் எடுத்துக்காட்டிய மத்தேயு 1:21ம் வசனத்திற்கு மாற்றமான ஒரு கருத்தை, அதன் அடுத்தடுத்த வசனங்களிலேயே பதிவு செய்கின்றார்:

தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். - மத்தேயு 1:22-23

அதாவது முன்னர் வந்த தீர்க்கதரிசியால் முன்னறிவிக்கப்பட்ட செய்தி ஒன்று நிறைவேறும் வகையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக இந்த வசனத்தின் மூலம் மத்தேயு குறிப்பிடுகின்றார்.

ஆனால், இந்த சம்பவத்திற்கும், மத்தேயு எடுத்துக்காட்டும் இந்த முன்னறிவிப்பிற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கின்றதா? என்றால் ஒன்றும் கிடையாது.

ஏனெனில் கர்த்தருடைய தூதன் யோசேப்பிடம் கூறியதாக சொல்லப்படும் செய்தியில், 'மரியாள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு 'இயேசு' என்று பெயரிடுவாயாக' என்று கூறப்படுகின்றது. ஆனால் இந்த சம்பவத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக, மத்தேயுவால் எடுத்துக்காட்டப்படும் முன்னறிவிப்பிலோ, 'ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்' என்றிருக்கின்றது. இந்த வசனத்தின் படி பார்த்தால், இயேசு பிறந்ததும் அவருக்கு 'இம்மானுவேல்' என்று பெயரிட்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் இந்த முன்னறிவிப்பு அவருக்கு பொருந்துவதாக அமையும். அதைத்தான் இந்த வசனமும் குறிப்பிடுகின்றது. ஆனால், அவ்வாறு அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிட்டார்களா? என்றால் கிடையாது.

மத்தேயுவால் முன்னறிவிப்பாக எடுத்துக் காட்டப்படும் இந்த வசனத்தில் மிகத் தெளிவாக, 'கன்னிகை கர்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்' என்று கூறப்படுகின்றது. ஆனால் இயேசுவுக்கு 'இம்மானுவேல்' என்று பெயர் சூட்டப்பட்டாக பைபிளில் எந்த ஒரு வசனமும் கிடையாது. இதை எடுத்துக்கூறும் மத்தேயு தனது சுவிசேஷத்தில் கூட, அப்படி ஒரு பெயர் சூட்டப்பட்டதாக எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடவும் இல்லை. அப்படி பெயர் சூட்டப்பட்டதாக முழு பைபிளிலிருந்து ஒரு வசனத்தையும் யாராலும் காட்ட முடியாது. இயேசுவுக்கு இம்மானுவேல் என்ற பெயரை அவரது தாயார் சூட்டவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவரது காலத்தில் - அந்தப் பெயரை வைத்து வேறு யாராவது அவரை 'இம்மானுவேல்' என்று அழைத்துள்ளார்களா? என்றால் அதுவும் கிடையாது. மொத்த பைபிளிலும் அப்படி அழைத்ததாக எந்த ஒரு குறிப்பும் கிடையாது. அப்படி இருக்க இந்த இம்மானுவேல் என்ற முன்னறிவிப்பு, இயேசுவுவைப் பற்றி சொல்லப்பட்டதாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? இதை முதலில் கிறிஸ்தவ சகோதரர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.

அடுத்து, மத்தேயுவால் சுட்டிக்காட்டப்படும் இந்த 'இம்மானுவேல்' என்ற முன்னறிவிப்பு, பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் ஒன்றான ஏசாயாவின் 7:14ம் வசனத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த வசனம் இதோ:

அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள் நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ? ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார். இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். - ஏசாயா 7:13-14

இந்த வசனத்தைத் தான் மத்தேயு தனது சுவிசேஷத்தில் குறிப்பிட்டுவிட்டு, இயேசுவின் மூலமாக இந்த முன்னறிவிப்பு நிறைவேறியதாக எழுதுகின்றார். இவர் குறிப்பிடுவது போன்று இந்த முன்னறிவிப்பு இயேசுவைத்தான் குறிக்குமா என்றால் கண்டிப்பாக குறிக்காது. ஏனெனில், இங்கே முன்னறிவிக்கப்படும் 'இம்மானுவேல்' என்பவரை எப்படி அடையாளம் கண்டுக்கொள்வது? அவர் என்னென்ன செய்வார்? அவர் எப்படி எல்லாம் நடந்துக்கொள்வார்? அவரது காலத்தில் என்னென்ன அiடாயளங்கள் நடக்கும்? என்பதை இதே ஏசாயா 7 ம் அதிகாரத்தின் 15-25ம் வசனங்களில் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றது. அந்த அடையாளங்களில் ஒன்று கூட இயேசுவுக்குப் பொருந்திப்போகவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயது மட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார். அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும். எப்பிராயீம் யூதாவைவிட்டுப்பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் கர்த்தர் உன்மேலும், உன் ஜனத்தின்மேலும், உன் பிதாவுடைய வம்சத்தின்மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரப்பண்ணுவார். அந்நாட்களிலே, கர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியாதேசத்திலிருக்கும் தேனீயையும் பயில்காட்டி அழைப்பார். அவைகள் வந்து ஏகமாய் வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முட்காடுகளிலும், மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும். அக்காலத்திலே ஆண்டவர் கூலிக்குவாங்கின சவரன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால், தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து, தாடியையும் வாங்கிப்போடுவிப்பார். அக்காலத்தில் ஒருவன் ஒரு இளம்பசுவையும், இரண்டு ஆடுகளையும் வளர்த்தால், அவைகள் பூரணமாய்ப் பால் கறக்கிறபடியினால் வெண்ணெயைச் சாப்பிடுவான். தேசத்தின் நடுவில் மீதியாயிருப்பவனெவனும் வெண்ணெயையும் தேனையுமே சாப்பிடுவான். அந்நாளிலே, ஆயிரம் வெள்ளிக்காசு பெறும் ஆயிரம் திராட்சச்செடியிருந்த நிலமெல்லாம் முட்செடியும் நெரிஞ்சிலுமாகும். தேசமெங்கும் முட்செடியும் நெரிஞ்சிலும் உண்டாயிருப்பதினால், அம்புகளையும் வில்லையும் பிடித்து அங்கே போகவேண்டியதாயிருக்கும். மண்வெட்டியால் கொத்தப்படுகிற மலைகள் உண்டே முட்செடிகளுக்கும் நெரிஞ்சில்களுக்கும் பயப்படுவதினால் அவைகளில் ஒன்றிற்கும் போகக்கூடாமையினால், அவைகள் மாடுகளை ஓட்டிவிடுவதற்கும், ஆடுகள் மிதிப்பதற்குமான இடமாயிருக்கும் என்றான். - ஏசாயா 7:15-25

இந்த வசனங்களில் சொல்லப்படக்கூடிய எந்த அடையாளமாவது இயேசுவிற்கு பொருந்துகின்றதா? இங்கே குறிப்பிடப்படும் அடையாளங்களில் எந்த ஒரு அடையாளமாவது அவரது காலத்தில நடந்ததாக ஒரு பைபிள் வசனமாவது இருக்கின்றதா? என்றால் முழு பைபிளிலும் - ஒரு இடத்திலும் கிடையாது. இப்படி எந்த வகையிலும் இம்மானுவேலைக் குறித்த இந்த அடையாளங்கள் இயேசுவுக்குப் பொருந்திப்போகாமல் இருக்கும் நிலையில், எப்படி இந்த முன்னறிவிப்பு அவரைக் குறித்து சொல்லப்பட்டதாக இருக்க முடியும்? எனவே இம்மானுவேல் என்ற இந்த முன்னறிவிப்பை பொறுத்தவரை, மத்தேயு போதிய ஞானமின்றி - தவறாக குறிப்பிட்டிருக்க வேண்டும். அல்லது அவரது சுவிசேஷத்தில் இயேசுவின் பெயரால் வேறு யாராவது இந்த வசனத்தை திணித்திருக்கவேண்டும். எது எப்படி இருந்தாலும் இந்த முன்னறிவிப்பு இயேசுவுக்கு எந்த வகையிலும் பொருந்தாது என்பது மட்டும் நிச்சயம்.

அடுத்து, மத்தேயு சுவிசேஷத்தில் தவறாக கோடிட்டுக்காட்டப்படும் 'இம்மானுவேல்' என்ற இந்த முன்னறிவிப்பு இயேசுவிற்கு எந்த வகையிலும் பொருந்தாது என்பதுடன், அப்படிப்பட்ட பெயர் அவருக்கு சூட்டப்பட்டதாகவோ அல்லது அந்தப் பெயரில் அவரை யாரும் அழைத்ததாகவோ பைபிளில் எந்த ஒரு சான்றுகளும் இல்லை என்பதையும், போதுமான ஆதாரங்களுடன் மேலே நாம் பார்த்தோம். இது ஒரு புறமிருக்க, இந்த ஏசாயா 7:14ம் வசனத்தில் கூறப்படும் 'கன்னிகை' என்ற வார்த்தை இயேசுவின் தாய் மரியாளையே குறிக்கும் என்ற ஒரு வாதத்தையும் கிறிஸ்தவர்கள் முன்வைக்கின்றனர்.

இதுவும் சரியான வாதமன்று. ஏனெனில், 'இம்மானுவேல்' பற்றி முன்னறிவிக்கப்படும் ஏசாயா 7:14ம் வசனத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:

ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார் இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.- ஏசாயா 7:14

Therefore the Lord himself shall give you a sign; Behold, a virgin shall conceive, and bear a son, and shall call his name Immanuel.
இந்த வசனத்தில் இடம் பெரும் 'கன்னிகை' (virgin) என்ற சொல்லிற்கு, பழைய ஏற்பாட்டின் மூலமொழியாகக் கருதப்படும் எபிரேயு பைபிளில் இடம்பெற்றுள்ள வார்த்தை Almah (עלמה) என்பதாகும். இந்த Almah (עלמה) என்ற வார்த்தைக்கு Young Woman - இளம் பெண்' என்ற பொருள்தானே தவிர, கிறிஸ்தவ பைபிள்களில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது போல் 'virgin - கன்னிகை' என்ற பொருள் வராது. அப்படியே இந்த இடத்தில் 'virgin - கன்னிகை' என்று மொழிப்பெயர்ப்பதாக இருந்தால், உன்மையில் மூலமொழியில் இடம்பெற்றிருக்க வேண்டிய எபிரேயுச் சொல் Bethulah ("בתולה"), என்பதாகும்.

ஆனால், அவ்வாறு Bethulah ("בתולה") என்ற வார்த்தை இடம்பெறாமல், 'Young woman - இளம் பெண்' என்ற பொருள் தரும் Almah (עלמה) என்ற சொல்லே எபிரேயு பைபிளில் இடம்பெற்றுள்ளதால், இந்த வார்த்தை மரியாளை மட்டும் பிரத்யோகமாக குறிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், இந்த Almah (עלמה) என்ற Young woman - இளம் பெண் என்பவள் திருமணம் முடித்து உடலுறவுக் கொள்ளப்பட்ட பெண்ணாகவும் இருக்கலாம் அல்லது திருமணம் முடிக்காத இளம் பெண்ணாகவும் இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் இது ஒரு பொதுவான பருவ வயதை அடைந்த பெண்ணைதான் குறிக்குமே தவிர, பிரத்யோகமாக கண்ணிப்பெண்ணை மட்டும் குறிக்காது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதை ஏன் இங்கே தெரியப்படுத்துகின்றோம் என்றால், மத்தேயு சுவிசேஷத்தில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ள இம்மானுவேல் என்ற முன்னறிவிப்பு இயேசுவுக்கு அறவே பொருந்தாது என்பதால், அதை வேறு எந்த வகையிலாவது இயேசுவோடு சம்பந்தப்படுத்திவிட வேண்டும் என்பதற்காக, Almah (עלמה) என்ற வார்த்தையை 'கன்னிகை - Virgin' என்று (கிறிஸ்தவ பைபிள்களில்) மொழிப்பெயர்த்து - அது இயேசுவின் தாய் மரியாளையே குறிக்கும் என்று வாதிடுகின்றனர். காரணம், அன்றைய காலத்தில் எந்த ஒரு பெண்ணும் ஆண் துணையின்றி கர்ப்பமடைய முடியாது. இறைவனின் அற்புதம் நிகழ்ந்தாலே தவிர. ஆனால், அன்றைய காலத்தில் ஒரு பெண் - ஒரே ஒரு பெண் - கன்னி கழியாமல் - உடளுறவுக் கொள்ளப்படாமல் (இறை அதிசயத்துடன்) கர்ப்பமடைந்தார் என்றால் அவர் மரியாள் மட்டுமே. எனவே இந்த இடத்தில் Virgin - கன்னிகை என்று மொழிப்பெயர்த்து விட்டால், அது இயேசுவின் தாய் மரியாளையே குறிக்கும் என்ற கருத்தைத் தினிப்பதற்காக இங்கே இவ்வாறு மொழிப்பெயர்த்துள்ளனர். ஆனால் அதற்கும் இங்கே வழி இல்லை என்பது தான் மூல மொழியாகக் நம்பப்படும் எபிரேயு பைபிளிலிருந்து நமக்கு கிடைக்கும் சான்றுகள் என்பதை சகோதரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல, ஏசாயா 7:14ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்க்கதரிசனம் மரியாளை பற்றியதாக இருக்குமானால், அந்த அடையாளத்தைக் கொடுத்த கர்த்தர் அதில் 'கன்னிகை - Virgin' என்பதை மட்டும் பிரத்யோகமாகக் குறிக்கும் Bethulah ("בתולה") என்ற சொல்லை உபயோகிக்காமல் பொதுவான இளம் பெண்களைக் குறிப்பிடும் Almah (עלמה) என்ற சொல்லை உபயோகித்திருப்பாரா என்பதை சிந்தித்துப் பார்த்தாலே, இந்த முன்னறிவிப்பு இயேசுவின் தாயை எந்த வகையிலும் குறிக்காது என்பதை தெளிவாக உணரலாம்.

இன்னும் சொல்லப்போனால், கிறிஸ்தவர்களிடத்தில் பிரபலமாக விளங்கும் ஆங்கில மொழிப்பெயர்ப்பான Revised Standard Version (RSV, NRSV) போன்ற பைபிள்களிலும், யூதர்களால் வெளியிடப்பட்ட Jewish Publication Society of America Version (JPS) மொழிப்பெயர்ப்புகளிலும், இன்னும் வேறு சில பைபிள் மொழிப்பெயர்ப்புகளிலும் இந்த Almah (עלמה) என்ற சொல்லிற்கு 'Young woman - இளம் பெண்' என்றே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, இந்த ஏசாயா 7:14ம் வசனம் இயேசுவை எந்தவகையிலும் குறிக்காது என்பதுடன், மத்தேயு போன்றவர்கள் போதிய ஞானமின்றி தவறாக எழுதிய புத்தகங்களையே கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகங்கள் என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர் என்ற உன்மையை புரிந்துக்கொள்ள வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் கிறிஸ்தவர்களுக்கு சத்தியத்தை அறியும் நல்லதொரு பாக்கியத்தை தந்தருள்வாராக!

குறிப்பு: மத்தேயு சுவிசேஷத்தில் தவறாக கோடிட்டுக்காட்டப்பட்டுள்ள 'இம்மானுவேல்' என்ற இந்த முன்னறிவிப்பில் இன்னும் பல குளறுபடிகளும் இருக்கின்றது என்பதை இங்கே நினைவூட்ட விரும்புகின்றோம். கட்டுரை நீண்டக்கொண்டே செல்வதால் பல விளக்கங்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் அந்த குளறுபடிகளும் விளக்கப்படும்.


இறைவன் நாடினால், பைபிளின் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் தொடரும்...


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Friday, August 07, 2009

இயேசுவின் பிறப்பும் - நட்சத்திரக் கணிப்பும்!


புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்
புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்



புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 3

முரண்பாடு 3:

இயேசுவின் பிறப்பு சம்பந்தப்பட்ட வரலாற்றை பைபிளில் குறிப்பிடும் பொழுது - அவருக்கு புகழ் சேர்க்கின்றோம் என்றப் பெயரில் பல பொய்யான - இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும் சுவிசேஷங்களில் எழுதிவைத்துள்ளனர். குறிப்பாக இந்துமதத்தில் புறையோடிப்போயிருக்கும் போலி கலாச்சாரமான சோதிடம் மற்றும் நாள் நட்சத்திரக் கலாச்சாரத்தையும் மிஞ்சும் வகையில் கதை கட்டியுள்ளது தான் இங்கே கவனிக்கப்படவேண்டிய 'ஹைலைட்' சமாச்சாரம். குறிப்பாக பழைய ஏற்பாட்டு வசனங்களில் கூறப்பட்டதற்கு மாற்றமான ஒரு கருத்தை - தனது சுயக்கருத்தை இயேசுவின் பெயரால் அரங்கேற்றியுள்ளார் சுவிசேஷ எழுத்தாளரான மத்தேயு:

ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து (Magi) சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். - மத்தேயு 2:1-2

அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து: நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள் நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான். ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குள்பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். - மத்தேயு 2:7-11

இந்த வசனங்களின் மூலம், இயேசு என்னும் ஒரு குழந்தை பிறந்திருக்கின்றது என்பதை 'Magi' என்னும் சாஸ்திரிகள் வானத்தில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தின் மூலம் அறிந்துக்கொண்டதாகவும், அந்த நட்சத்திரம் எங்கே சென்று நின்றதோ அதை வைத்து அவர்கள் இயேசுவின் வீட்டை கண்டடைந்ததாகவும் மத்தேயு குறிப்பிடுகின்றார். இந்த கதையின் காரணமாகவே 'கிறிஸ்துமஸ்' கொண்டாட்டங்களில் நட்சத்திர அடையாளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மத்தேயு குறிப்பிடுவது போன்று, இந்த சம்பவம் உன்மையிலேயே நடந்திருக்குமா? என்றால் கண்டிப்பாக நடந்திருக்காது - நடந்திருக்கவும் வாய்ப்பில்லை.

ஏனெனில், இந்த சம்பவத்தைப் பற்றி மத்தேயு குறிப்பிடும் போது 'கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று கேட்டதாகவும், 'கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்' என்று கூறியதாகவும் குறிப்பிடுகின்றார்.

இது உன்மையாக இருந்தால், இந்த சாஸ்திரிகள் நட்சத்திரம் தோன்றிய அடையாளத்தை வைத்து இயேசு பிறந்திருக்கின்றார் என்பதை எப்படி கண்டுபிடித்தனர்? குறிப்பாக யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவரின் அடையாளமான நட்சத்திரம் இது தான் என்பது எப்படி இவர்களுக்குத் தெரிந்தது? இதற்கு ஏதாவது பழைய ஏற்பாட்டு வசனங்களில் ஆதாரம் இருக்கின்றதா? அல்லது இயேசுவின் பிறப்பின் போது இப்படிப்பட்ட ஒரு நட்சத்திரம் வானில் தோன்றும் என்ற முன்னறிவிப்பு ஏதாவது பழைய ஏற்பாட்டில் இருக்கின்றதா? என்றால் ஒரு இடத்திலும் கிடையாது. பழைய ஏற்பாட்டில், இயேசுவின் பிறப்பின் போது, இப்படிப்பட்ட ஒரு அடையாளம் தோன்றும் என்று எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவும் இல்லை. அப்படி இருக்க சாஸ்திரிகளுக்கு நட்சத்திரம் உதயமாவதின் மூலம் இயேசு பிறப்பார் என்பது எப்படித் தெரிந்தது? இதை முதலாவதாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்து, இப்படி எந்த வகையிலும் இதற்கு ஆதாரமான வசனங்கள் பழைய ஏற்பாட்டில் இல்லாதது மட்டுமல்லாமல், இதற்கு எதிரான கருத்தே அதிகமதிகம் காணப்படுகின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். குறிப்பாக நட்சத்திரத்தை வைத்து ஒருவன் எதையேனும் கணித்தானேயானால் அவன் கர்த்தரால் சபிக்கப்பட்டவன் என்றும் இப்படிப்பட்ட செயல்களைச் செய்வது கர்த்தருக்கு அருவருப்பானது என்றும் பைபிள் வசனங்கள் குறிப்பிடுகின்றது. இன்னும் தெளிவாக கூறுவது என்றால், மத்தேயு குறிப்பிடும் இந்த 'Magi' என்னும் சாஸ்திரிகளால் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் கர்த்தரால் முற்றிலும் தடுக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. ஏனெனில் இந்த 'Magi' என்னும் சாஸ்திரிகளின் பிரதான வேலையோ, ஜோதிடம் சொல்வது, நட்சத்திரத்தின் மூலம் நல்லது கெட்டதைக் கணிப்பது, நாள் நட்சத்திரம் பார்ப்பது போன்ற கர்த்தரால் தடை செய்யப்ப்டட செயல்களைச் செய்பவர்கள் என்று பைபிள் அறிஞர்களே குறிப்பிடுகின்றனர்.

தமிழ் பைபிளில் 'சாஸ்திரிகள்' என்று குறிப்பிடப்படும் சொல்லிற்கு கிரேக்க பைபிளில் உபயோகப்படுத்தப்படும் வார்த்தை μαγοι (magos) என்பதாகும். இதற்கு மந்திரவாதிகள், சூனியம் செய்பவர்கள், நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களை வைத்து ஜோதிடம் கூறுபவர்கள் என்று பொருள்படும். இப்படிப்பட்டர்களின் செயல்கள் எந்த அளவுக்குத் கர்த்தரால் தடுக்கப்பட்டது என்பதை பின்வரும் பைபிள் வசனங்கள் குறிப்பிடுகின்றது:

உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய் இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும். இதோ, அவர்கள் தாளடியைப்போல இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும் அவர்கள் தங்கள் பிராணனை அக்கினிஜுவாலையினின்று விடுவிப்பதில்லை அது குளிர்காயத்தக்க தழலுமல்ல எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல. - ஏசாயா 47:13-14

புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள். - எரேமியா 10:2

தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன். இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார். - உபாகமம் 18:10-13

யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக - லேவியராகமம் 19:26

இந்த வசனங்களில் மிகத் தெளிவாக நட்சத்திரங்களின் மூலம் கணிப்பது மிக மிகத் தவறு என்பதுடன், அப்படி செய்பவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் - என்றும் அது கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு செயல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. ஆனால், இதற்கு மாற்றமாக மத்தேயுவோ, நட்சத்திரங்களைப் பார்த்து கணிப்பவர்கள் சாஸ்திரிகள் - ஞானிகள் என்றும், அவர்கள் இயேசுவின் பிறப்பை நட்சத்திரத்தின் மூலம் அறிந்து, அதை வைத்து பிறந்த இடத்தைக் கண்டுபிடித்து இயேசுவையும் அவரது தாயாரையும் பணிந்துக்கொண்டார்கள் என்றும் குறிப்பிடுகின்றார்.

அது மட்டுமல்ல, இந்த சம்பவத்தின் மூலம் மற்றொரு பாரதூரமான கருத்தையும் மத்தேயு பதிவு செய்கின்றார். அதாவது, 'Magi' என்னும் சாஸ்திரிகளின் இந்த தவறான செயலை கர்த்தர் அங்கீகரித்தது போன்ற ஒரு மாயத்தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றார். எப்படியெனில், இயேசு பிறந்தபோது மரியாளின் புருசனாகிய யோசேப்புக்கு கர்த்தருடைய தூதன் கணவில் தோன்றி ஏரோது ராஜாவிடமிருந்து குழந்தை இயேசுவைக் காப்பாற்றும் முகமாக, எகிப்துக்கு ஓடிப்போய்விடும்படி எச்சரித்தது போன்று, இந்த 'Magi' என்னும் சாஸ்திரிகளையும் கர்த்தர் எச்சரித்ததாக எழுதுகின்றார்:

பின்பு, அவர்கள் (சாஸ்திரிகள்) ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். - மத்தேயு 2:12

அதாவது இந்த சாஸ்திரிகள் நட்சத்திரத்தைப் பார்த்து இயேசுவின் பிறப்பை அறிந்துக்கொண்டதன் பின் கர்த்தர் அவர்களுக்கு சொப்பனத்தில் தோன்றி, நீங்கள் கண்டவைகளை குறித்து ஏரோது ராஜவிடம் தெரிவித்து விடாத வண்ணம் வேறு வழியில் சென்று விடுமாறு கூறியதாக எழுதுகின்றார். இதன் மூலம் அவர்களின் செயலுக்கு கர்த்தரின் அங்கீகாரம் கிடைத்தது என்பது போன்ற ஒரு தோற்றம் இங்கே ஏற்படுத்தப்படுகின்றது. ஆனால் இது உன்மையா? இப்படி கர்த்தர் அவர்களிடம் சொப்பனத்தில் தோன்றி பேசியிருப்பாரா? என்றால் கண்டிப்பாக நடந்திருக்காது.

ஏனெனில் நாம் முன்பு ஏடுத்துக்காட்டிய பைபிள் வசனங்களிலோ இப்படி நட்சத்திரங்களின் மூலம் கணிப்பவர்கள் அஞ்ஞானிகள் - அவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் - அவர்கள் செயல்கள் கர்த்தரின் கட்டளைக்கு எதிரானது - கர்த்தர் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார் என்பதை தெளிவாக கூறியிருக்க, பின்னர் எப்படி இந்த சாஸ்திரிகளிடம் கர்த்தர் கணவின் மூலம் பேசி, அவர்களை எச்சரித்திருப்பார்? இது இவர்களின் செயல்களை நியாயப்படுத்தியது போன்று ஆகிவிடாதா?

இயேசுவின் பிறப்பின் போது இது போன்ற ஒரு நட்சத்திரம் தோன்றும் - அதன் மூலம் இயேசுவின் பிறப்பை அறிந்துக்கொள்ளலாம் என்று எந்த ஒரு வசனமும் பைபிளில் முன்னறிவிக்கப்படாததுடன், நட்சத்திரங்களைப் பார்த்து கணிப்பவர்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் என்றும் அப்படிப்பட்டவர்களின் செயல்களை நீங்களும் கற்றுக்கொள்ளாதீர்கள் என்றும் கர்த்தரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டிருக்க, எப்படி இந்த சம்பவம் நடைபெற்றிருக்கும்? அதுவும் சத்தியத்தை மக்களுக்கு போதிக்க வந்த இயேசுவின் வாழ்வில் நடைபெற்றிருக்குமா? இதை கிறிஸ்தவ சகோதரர்கள் நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.

இயேசுவைப் பற்றிய உன்மையான வரலாற்றை சுருக்கமாகவும், தெளிவாகவும், உள்ளதை உள்ளபடி எடுத்துக்கூறக்கூடியது ஒரே ஒரு இறைவேதம் திருக்குர்ஆன் மட்டுமே என்ற உன்மையை கிறிஸ்தவ சகோதரர்கள் புரிந்துக்கொள்ளவேண்டும். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு சத்தியத்தை விளங்கும் பாக்கியத்தை தந்தருள்வாராக!

இறைவன் நாடினால் முரண்பாடுகள் தொடரும்....


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click heree

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.

Friday, July 31, 2009

இயேசுவின் பிறப்பு : முரண்படும் சுவிசேஷங்கள்


புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்


புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 2


இயேசுவின் வரலாற்றை விவரிப்பதாகச் சொல்லப்படும் புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு சுவிசேஷங்களுக்கிடையே பல்வேறு முரண்பட்ட தகவல்கள் காணப்படுகின்றது. குறிப்பாக இயேசு பிறந்தபோது நடைபெற்றதாகச் சொல்லப்படும் செய்திகளை ஒருவன் ஆழ்ந்து படிப்பாரேயானால் இறுதியில் குழப்பம் தான் மிஞ்சும் என்கிற அளவுக்கு சுவிசேஷங்களுக்கிடையே முரண்பாடுகளும் குழப்பங்களும் மலிந்து காணப்படுகின்றது.

இயேசுவினுடைய பிறப்பு ஒரு அதிசயம் என்றாலும், அவற்றைப் பற்றி பைபிளில் சொல்லப்படும் செய்திகளில் பல குழப்பமான செய்திகள் காணப்படுவதால், பைபிளில் கூறப்படும் 'இயேசுவின் வரலாறு' என்பது, இராமாயணம் மகாபாரதம் போன்று, 'இதுவும் ஒரு கற்பனைக் கதாபாத்திரமாக இருக்குமோ' என்று படிப்படிவர்களுக்கு ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் அதிகமதிகம் இருப்பதை நாம் மறுப்பதற்கு இல்லை - மறுக்கவும் முடியாது. அந்த அளவுக்கு அவரை பற்றி சொல்லப்படும் பல செய்திகளில் ஏராளமான முரண்பாடுகள் காணப்படுகின்றது. அதன் வெளிப்பாடாகத்தான் தற்போது மேலைநாடுகளில் கூட்டம் கூட்டமாக தங்களது பூர்வீக மதமான கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறி நாத்திகத்தின் பால் சென்றுக்கொண்டிருக்கின்றனர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் இயேசுவின் வரலாற்றில் சொல்லப்பட வேண்டிய மிக முக்கியமான செய்திகள் பதிவு செய்யப்படாமல், இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதுடன், அதற்கு மாற்றமாக பல பொய்யான இட்டுக்கட்டப்பட்ட - முரண்பாடான செய்திகளே பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதே இந்த நிலை ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களாக அமைந்துள்ளது.

பைபிளில் இயேசுவின் பிறப்பின் போது நடைபெற்றதாக சொல்லப்படும் செய்திகளில் உள்ள முரண்பாடுகளை இனி தொடர்ந்து பார்ப்போம்.

முரண்பாடு 2:

இயேசு பிறக்கும் போது நிலவிய சூழ்நிலை என்ன?

அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான். ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,.... - மத்தேயு 2:13-14

இயேசு பிறந்த போது ஏரோது என்னும் கொடிய அரசன் ஆட்சி புரிந்ததாகவும், அவன் குழந்தை இயேசுவைக் கொல்லத் திட்டமிட்டதாகவும், அதற்குப் பயந்து இயேசுவின் தாய் மரியாளும், அவருக்கு கணவனாக நியமிக்கப்பட்டிருந்த யோசேப்பும், இயேசுவை தூக்கிக்கொண்டு எகிப்துக்குச் சென்றதாகவும் மேற்கண்ட வசனத்தில் மத்தேயு கூறுகின்றார். ஏரோது இறந்த பிறகும் கூட அவனது மகன் அர்கெலாவு என்பவன் ஆட்சிக்கு வந்ததால் அதற்கும் பயந்து கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்கு வராமல் நாசரேத்து எனும் ஊருக்குச் சென்றதாகவும் மத்தேயு 2:19-23ம் வசனங்களில் கூறுகின்றார்.

ஆனால் லூக்காவோ இயேசு பிறந்தபோது சர்வ சாதாரண நிலைதான் நிலவியதாகவும் மத்தேயு கூறுவது போல் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்பது போன்று மறுத்து எழுதுகின்றார்.

இயேசுவின் தாய் மரியாளும் அவருக்கு நியமிக்கப்பட்டிருந்த யோசேப்பும் இயேசு பிறந்தபோது பெத்லகேமில் இருந்ததாகவும் அங்கிருந்து எருசலேமுக்கு வந்து போனதாகவும், அவரது பெற்றோர் வருடம் தோறும் பஸ்கா பண்டிகைக்கு எருசலேமுக்குப் போவார்கள் என்றும் லூக்கா தனது நூலில் குறிப்பிடுகின்றார். பார்க்க லூக்கா 2:1-52

ஏரோது அரசன் இயேசுவைக் கொலை செய்யத் தேடியதையும், அதைத் தொடர்ந்து இயேசுவின் பெற்றோர் எகிப்துக்கு ஓடிப்போனதையும், அதன் பின் ஏரோதுவின் மகன் ஆட்சிக்கு வந்ததையும், எருசலேமுக்குப் போகாமல் அவர்கள் மறைந்து வாழ்ந்ததையும் லூக்கா கூறவில்லை. மாறாக அந்த சமயத்தில் சர்வ சாதாரண நிலை தான் நிலவியதாகவும், ஆண்டு தோரும் எருசலேமுக்கு அவர்கள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள் என்றும் சர்வ சாதாரணமாக அவர்கள் அந்த நாட்டில் நடமாடியதாகவும் கூறுகின்றார்.

பரிசுத்த ஆவியால் தூண்டுதலால் தான் இந்த பைபிள் எழுதப்பட்டிருந்தால் எப்படி இப்படிப்பட்ட முரண் வரும். அதுவும் இரட்சகராக வந்த இயேசு பிறக்கும் போது நடைபெற்ற சம்பவங்களில் இப்படிப்பட்ட ஒரு முரண் வரலாமா? மத்தேயு கூறுவது போல் இயேசு பிறந்த போது பயங்கரமான சூழ்நிலை நிலவியதா? அல்லது லூக்கா கூறுவது போல் சர்வ சாதாரண நிலை நிலவியதா? ஆண்டு தோறும் எருசலேமுக்கு வந்து போவார்கள் என்பது உன்மையா? அல்லது கர்த்தரின் கனவுக் கட்டளைப்படி எகிப்திலேயே இருந்து பின்னர் நாசரேத்துக்குச் சென்றது உன்மையா?

முரண்பாடு : 3

இயேசு பிறக்கும் முன் மரியாளும் யோசேப்பும் எங்கே வசித்தார்கள்? நாசரேத்துக்கு எப்போது சென்றார்கள்?

இயேசு பிறக்கும் வரை யோசேப்பும் மரியாளும் கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில் வசித்ததாகவும் அவர்கள் குடிமதிப்பு எழுதும் வகைலேயே அங்கிருந்து பெத்லகேமிற்குப் போனதாகவும் அங்கேயே மரியாளுக்கு பிரசவகாலம் ஏற்பட்டு, இயேசு பிறந்ததும் குழந்தைக்கு நியாயப்பிரமாணத்தின் படி செய்யப்பட வேண்டிய சடங்குகளை செய்து விட்டு மீண்டும் தங்கள் ஊரான நரசேத்துக்கு திரும்பிச் சென்றதாகவும் லூக்கா கூறுகின்றார்:

ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான். அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். - லூக்கா 1:26-27

அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். - லூக்கா 2:1-7

கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்து முடித்தபின்பு, கலிலேயாநாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள். - லூக்கா 2:39

ஆனால் மத்தேயுவோ இதற்கு நேர் முரணாக, யோசேப்பும் மரியாளும் பெத்லகேமிலேயே வாழ்ந்ததாகவும், அப்போது கர்த்தருடைய தூதன் சொன்னதினிமித்தம் ஏரோதுக்கு பயந்து எகிப்துக்குப் போனதாகவும், ஏரோது மரணமடையும் வரை எகிப்திலேயே தங்கி இருந்ததாகவும், ஏரோதின் மரணத்திற்குப் பின்னர் அவனது மகன் அர்கெலாவு ஆட்சி செய்கிறான் என்று கேள்விப்பட்டு எகிப்திலிருந்து நாசரேத்துக்குப் போய் தங்கியதாகவும் கூறுகின்றார்:

ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடேகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். - மத்தேயு 2:1-3

அவர்கள் அந்த வீட்டுக்குள்பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். - மத்தேயு 2:11

அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான் ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய், ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். - மத்தேயு 2:13-15

ஏரோது இறந்தபின்பு, கர்த்தனுடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு: நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ பிள்ளையின் பிராணணை வாங்கத்தேடினவர்கள் இறந்து போனார்கள் என்றான். அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான். ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய், நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. - மத்தேயு 2:19-23

இங்கே மத்தேயு சொல்லுவது போல் இயேசு பிறக்கும் முன்பு யோசேப்பும் மரியாளும், பெத்லகேமிலேயே வாழ்ந்து வந்தார்களா? அல்லது நாசரேத் என்னும் ஊரில் வாழ்ந்தவர்கள் குடிமதிப்பு எழுதும் வகையிலேயே பெத்லகேமிற்கு சென்றார்களா?

அதன் பிறகு எருசலேமிலிருந்து ஏரேதுக்கு பயந்துக்கொண்டு எகிப்துக்குப் போய் பின்னர் ஏரேதின் மகனுக்கு பயந்து அதன் காரணமாக நாசரேத்துக்கு போனார்களா? அல்லது லூக்கா சொல்வது போல், தங்கள் சொந்த ஊர் என்ற காரணத்திற்காக பெத்லகேமிலிருந்து நேரடியாக நாசரேத்துக்கு போனார்களா? யார் சொல்வது உன்மை? கிறிஸ்தவ மதத்தின் முக்கிய கதாபாத்திரமான இயேசுவின் பிறப்பில் ஏன் இந்த முரண்பாடு? இயேசுவின் வரலாறு ஒரு கட்டுக்கதை என்ற ஒரு தவறான கருத்தை இந்த பைபிள் வசனங்கள் ஏற்படுத்தி விடாதா?


இறைவன் நாடினால் முரண்பாடுகள் தொடரும்...


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

.

Monday, July 14, 2008

பைபிளில் மறைக்கப்பட்ட இயேசுவின் குழந்தை அற்புதம்

மறுப்பும்... விளக்கமும்...

இயேசுவின் வரலாற்றை நான்கு நபர்களால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் பைபிளில் அவரைப்பற்றிய உண்மையான சில செய்திகளுடன், பல பொய்யான தகவல்களும், அவரது புனிதத்தன்மைக்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல இட்டுக்கட்டப்பட்ட செய்திகளும் நிறைந்து காணப்படுவதோடு அவரது வாழ்வில் நடந்த பல முக்கியமான சம்பவங்கள் மறைக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன என்ற உன்மையை நாம் கவனித்தாக வேண்டும். குறிப்பாக,


இவை போன்ற எண்ணற்ற தவறான - இட்டுக்கட்டப்பட்ட செய்திகளின் உன்மைகளை தெரியப்படுத்தும் முகமாகத்தான் வல்ல இறைவன் தனது இறுதி வேதமான திருக்குர்ஆனை இறுதி நபி மூலம் இறக்கி வைத்து சத்தியத்தை வெளிப்படுத்தினான்.

இப்படிப்பட்ட மறைக்கப்பட்ட உன்மைகளில் ஒன்றுதான் பைபிளில் சொல்லப்படாத இயேசுவின் குழந்தை அற்புதம். அதை திருக்குர்ஆன் அதன் பல்வேறு வசனங்களின் மூலம் தெளிவுபடுத்துகின்றது.

இயேசுவின் வாழ்வில் நடந்த மிக முக்கியமான ஒரு சம்பவம். அதுவும் இயேசுவின் பரிசுத்த தாயான கன்னிப்பெண் மரியாள், தான் திருமணம் முடிக்காத நிலையில் - அவரை எந்த ஒரு ஆணும் தீண்டாதிருக்கும் பொழுது இறை அதிசயத்தின் மூலம் இயேசுவை பெற்றெடுக்கின்றார். அதுவரை இந்த உன்மை இறைவனையும் (அவனால் அறிவிக்கப்பட்டவர்களைத்) தவிர வேறு யாருக்கும் தெரியாதிருக்கும் நிலையில், அன்றைய கால மக்கள் முன் திடீரென திருமணமாகாத ஒரு கண்ணிப்பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வரும் பொழுது என்ன நினைப்பர்? அதுவும் பெண் மக்களையே இழிபிறவிகளாக எண்ணிக்கொண்டிருந்த யூத சமூகத்திற்கு முன்னால் ஒரு பெண் திருமணம் முடிக்காத நிலையில் ஒரு குழந்தையுடன் வந்தால் எந்த நிலைக்கு ஆளாகி இருப்பார்? சிந்தித்துப் பாருங்கள்!

விபச்சாரத்தின் மூலம் பெற்றெடுத்தாயா? என்றிருப்பார்கள். அதற்கான தண்டனை வழங்கியே ஆகவேண்டும் என்று கூக்குரலிட்டிருப்பார்கள். காரணம் இயேசுவின் காலத்தில் ஒரு பெண் விபச்சார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவளைக் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது. (பார்க்க யோவான் 8:3-5) அவ்வளவு ஏன்? விஞ்ஞானம் வளர்ந்த இன்றை காலத்தில் கூட ஒரு பெண்ணிற்கு இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டாலும் இது தான் நடக்கும். இந்த சந்தேகம் தான் வரும். இது இயல்பான ஒன்று. ஆனால் மரியாள் அவர்கள் அது போன்ற தண்டனையிலிருந்தும், இப்படிப்பட்ட அவதூறு பேச்சுகளிலிருந்தும் தப்பித்துள்ளார் என்றால் அது எப்படி சாத்தியமானது?

பைபிளில் இயேசுவைப் பெற்றெடுத்த பிறகு மேற்கூறப்பட்ட எந்தப் பிரச்சனையையும் மரியாள் சந்திக்கவில்லை என்று ஒத்துக்கொள்கின்றது. அவர் மேறகூறப்பட்ட பிரச்சனைகள் எதையும் சந்தித்ததாக பைபிளில் எந்த ஒரு குறிப்பும் இல்லை. ஆனால், திருமணம் முடிக்கப்படாத - கண்ணிப்பெண்ணான அவர் இப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலிருந்து தப்பித்த வரலாற்றை பைபிளில் சொல்லப்படவில்லையே அது ஏன்? அது திட்டமிட்டு மறைக்கப்பட்ட மர்மம் என்ன? இயேசுவின் வரலாற்றை பைபிள் முழுமையாக சொல்கின்றதென்றால் அவரது வாழ்வில் நடந்த மிக முக்கியமான சம்பவமான இதுவும் சொல்லப்பட்டிருக்க வேண்டுமே! அது சொல்லப்படவில்லையே! அது ஏன்? இது தான் நியாய சிந்தனையுடைய எல்லோருக்கும் ஏற்படும் கேள்வி.

அப்படிப்பட்ட மிக முக்கியமான - பைபிளில் சொல்லப்படாத இந்த வரலாற்று உன்மையை -நமக்கெல்லாம் ஏற்படும் அந்த நியாயமான கேள்விக்கான விடையை திருக்குர்ஆனின் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். இது தான் திருக்குர்ஆனுக்கும் பைபிளுக்கும் உள்ள வித்தியாசம். விளக்கத்திற்கு வருவோம்:

அல்லாஹ் கூறுகின்றான் :

வானவர்கள் மரியமிடம் கூறினார்கள்: நிச்சயமாக இறைவன் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகன் பிறக்கப்போவது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அவர் பெயர் மஸீஹ், மர்யமின் மகன் ஈஸா (மரியாளின் மகன் இயேசு) என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார். (அல்குர்ஆன் 3:45)

அதாவது திருமணம் முடிக்காத கண்ணிப்பெண்ணான மரியாளிடம் இறைவன் புறத்திலிருந்து இந்த சுபச் செய்தி சொல்லப்படுகின்றது. இந்த செய்திகுறித்து அதிர்ச்சியுற்ற பரிசுத்த மரியாள் 'இது எப்படி சாத்தியமாகும் என்று கேள்வி எழுப்புகின்றார். அதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு தெரிவிக்கின்றது :

(மர்யம் இறைவனிடம்) கூறினார்: 'என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?' (அதற்கு) அவன் கூறினான்: 'அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் 'ஆகுக' எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.' (அல் குர்ஆன் 3:47)

இந்த உறையாடல் நடந்தப் பிறகு மரியாள் கர்ப்பம் அடைகின்றார். இறைவனின் வல்லமையை அவரது கருவறை உணர்கிறது. அதை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது :

அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார். பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார். -அல்குர்ஆன் 19:22

பின்னர் மரியாள் குறிப்பிட்ட காலத்தில் இயேசு அவர்களைப் பெற்றெடுக்கின்றார்.

அதன் பிறகு குழந்தையுடன் தன் சமூகத்து மக்களிடத்தில் வருகின்றார். அதன் பிறகு நடந்தது பற்றி குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.


'ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை' (என்று பழித்துக் கூறினார்கள்).

(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார். 'நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?' என்று கூறினார்கள்.
'நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான். இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.

'இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான். மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.

'என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.

'இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்' என்று (அக்குழந்தை) கூறியது.
- அல்குர்ஆன் 19:28-33

அவரது சமூகத்துமக்களுக்கு ஏற்பட்ட இயல்பான அந்த சந்தேகத்தை, குழந்தையாக இருந்த இயேசுவைப் பேச வைத்ததன் மூலம் அவர்களுக்கு உன்மையை உணர்த்தினான் இறைவன். ஆதனால் தான் மரியாளையும் அந்தக் குழந்தையையும் அந்த சமூகம் அங்கீகரிக்கின்றது.

குர்ஆன் சொல்லக்கூடிய இந்த சம்பவம் பைபிளில் சொல்லப்படவில்லையானாலும் நியாயமாக சிந்தித்தால் குர்ஆனில் சொல்லப்பட்ட இந்த சம்பவம் கண்டிப்பாக நடந்திருக்கும் - நடந்திருக்க வேண்டும் என்பதை நியாய சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது. காரணம், ஒரு கண்ணிப்பெண், அதுவும் திருமணமாகாதவர் ஒரு குழந்தையுடன் வந்தால் எந்த சமூகம்தான் சந்தேகக்கண் கொண்டு பார்க்காது? கண்டிப்பாக குர்ஆன் சொல்வது போல் இந்த சம்பவம் நடந்தே இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அது போன்ற இக்கட்டான நிலையிலிருந்த மரியாள் தப்பித்திருக்கின்றார். அது எப்படி?

இதற்கு பைபிளில் விடையிருக்கின்றதா என்றால் கண்டிப்பாக இல்லை என்பது தான் பதில்.

பைபிளில் சொல்லப்படாத - மறைக்கப்பட்ட இந்த உண்மைகளையெல்லாம் விளக்கிவிட்டு இறைவன் சொல்கின்றான்:

இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்). எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்). - அல்குர்ஆன் 19:34
இது போண்ற இயேசுவின் உன்மைநிலை பற்றிய எண்ணற்ற கேள்விகளுக்கான விடை திருக்குர்ஆனில் மட்டும் தான் இருக்கின்றது சகோதரர்களே.


இது ஒருபுறமிருக்க இந்த சத்தியமான வரலாற்று உன்மை பைபிளில் சொல்லப்படவில்லை என்பதையும் திருக்குர்ஆன் இதற்கு மிகத் தெளிவாக விளக்கமளித்து உள்ளதையும் ஏற்க மறுக்கும் சில கூலிக்கு மாறடிக்கும் கும்பல் தங்களைச் சார்ந்தவர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக - தங்களைத் தாங்களே திருப்திப்படுத்திக் கொள்வதற்காக மறுப்பு என்றப் பெயரால் சில மடத்தனங்களை எழுதி வெளியிட்டுள்ளனர். அதற்கான மறுப்பையும் தெளிவான விளக்கத்தையும் இங்கு பார்ப்போம்.

கிறிஸ்தவர் எழுதுகிறார்:

// 1. ஒரு நாள் குழந்தை அல்லது சில நாள் குழந்தை பேசுவது என்பது, உலக அதிசயம்: குர்-ஆன் சொல்வது போல, மரியாள், குழந்தையை கொண்டுவருகிறார்கள், யூத ஜனங்கள் கேள்விகள் கேட்கிறார்கள், உடனே குழந்தை பேசுகிறது. என்னவாகியிருக்கும், இதை பார்க்கும் ஜனங்கள் தலை தெரிக்க ஓடியிருப்பார்கள், ஏதோ விபரீதம் நடக்கிறது என்றுச் சொல்லி ஓடி ஒளிந்துயிருப்பார்கள். சிலருக்கோ இதயமே நின்றுயிருக்கும். எல்லாரும் பயந்து போய், நடுங்கியிருப்பார்கள். //

நமது பதில்:
ஒரு அதிசயம் நடக்கும் போது அதை ஆச்சரியத்தோடு பார்ப்பார்களா அல்லது இவர் சொல்வது போல் பயந்து ஓடிப்போய் ஒளிவார்களா? இவர் வாதப்படி பார்ப்போமேயானால், இயேசு எத்தனையோ அதிசயங்களை செய்தாக பைபிள் சொல்கின்றது. அதைப் பார்த்து எல்லா மக்களும் ஓடிப்போய் ஒளிந்தார்கள் என்று சொல்ல வருகின்றாரா? குழந்தை அதிசயம் என்ன! இயேசு மரணித்தவரையே இறைவனின் உதவி கொண்டு உயிர்பித்ததாக பைபிள் சொல்கின்றதே. அப்பொழுது எல்லா மக்களும் ஆ! பேய்! பேய்! என்றல்லவா ஓடி இருக்க வேண்டும். அப்படி ஓடினார்களா? ஒடிப்போய் ஒளிந்து கொண்டார்களா? அல்லது யாரும் இதயம் நின்றநிலையில் இருந்தார்களா? இது போன்று மக்களை ஓடிப்போய் ஒளிய வைப்பதற்காகவா கடவுள் அதிசயத்தைக் தனது தூதர்கள் மூலம் நிகழ்த்துகின்றார்? சிந்திக்க வேண்டாமா? எதையாவது எழுதவேண்டும் என்பதற்காக உளறி வைக்கக்கூடாது நண்பர்களே!

கிறிஸ்தவர்:

//2. இயேசுவை சிறுவயதிலிருந்தே ஒரு தெய்வீக புருஷராக மதித்துயிருப்பார்கள், அவரை எதிர்த்து, சிலுவையில் அறைந்து (குர்-ஆன் படி சிலுவையில் அறைய பிடிக்க சென்று) இருக்க மாட்டார்கள். பிறந்த குழந்தை இப்படிப்பட்ட அற்புதம் செய்யுமானால், அந்த குழந்தையை ஒரு சாதாரண குழந்தையாக பார்க்கமுடியாது. இயேசுவிற்கு சிறுவயதிலிருந்தே ஒரு தனி மதிப்பு, மரியாதை, புகழ் எல்லாம் கிடைத்துயிருக்கும். காணிக்கைகள், பணம் என்று பரிசுகளைக் கொண்டுவந்து பலவாறு தங்கள் நம்பிக்கையை அக்குழந்தை மீது காட்டியிருப்பார்கள். //

நமது பதில்:

என்ன மடத்தனமான கேள்வி இது. பைபிளைபற்றி தெரியாதவர் கேட்பது போல் கேள்வி கேட்டுள்ளார். இயேசு சிறுவயதில் செய்த அற்புதத்தை விட்டுவிடுவோம். அவரது 30 வயதிற்குப் பிறகு இறந்தவனையே உயிரோடு எழுப்பினாரே! அதற்கு மேலும் எத்தனையோ அதிசயங்களை மக்கள் முன் செய்துக் காட்டினாரே. அப்படி நடந்தும் தானே அவரை பைபிளின் படி துன்புறுத்தினார்கள், சிலுவையில் அறைந்தார்கள்.

'காணிக்கை, பணம், மதிப்பு மரியாதைஎல்லாம் வந்திருக்கவேண்டுமே' என்று கேட்கின்றார். அவர் செய்த அதிசயங்களை நேரடியாக பார்த்தவர்களான இயேசு வோடிருந்த சீடர்களே சரியான முறையில் விசுவாசிக்காமல் இருந்ததாக பைபிளே சொல்லும் பொழுது, இந்த அதிசயத்தை எல்லாம் நேராக பார்த்தவர்களில் ஒருவரான யூதாசே நன்றி இன்றி அவரைக் காட்டிக்கொடுத்ததாக பைபிளே ஒத்துக்கொள்ளும்பொழுது இந்தக் கேள்வி கேட்க எப்படி மனம் வருகின்றது உங்களுக்கு? அப்படியானால் இயேசுவிற்கு காணிக்கை, மரியாதை எதுவும் வரவில்லை என்பதற்காக அவர் அதிசயமே செய்யவில்லை என்று சொல்லவருகின்றீர்களா? உங்கள் நம்பிக்கைக்கு உட்பட்டு மறுப்பெழுதுங்கள். எதிர்த்து எழுத வேண்டும் என்பதற்காக எதையாவது எழுதி மாட்டிக்கொள்ளாதீர்கள்!

கிறிஸ்தவர்:

//நீங்கள் சொல்வது போல, பெரியவராக ஆனபிறகு செய்த அற்புதங்களுக்கு வேறு அர்த்தங்கள் சொன்னாலும், இந்த அற்புதம் வைத்துக்கொண்டு எல்லாம் சாதித்துவிடலாம். ஆனால் நடந்தது என்ன? ஒரு சாதாரண தச்சனின் மகனாக நடுத்தர வாழ்வை வாழ்ந்தார் இயேசு. எந்த வசதியில்லாமல் வாழ்ந்தார். இயேசு செய்த அற்புதங்களைப் பார்த்த ஆசாரியர்கள், யூத மக்கள், இவனுக்கு எப்படி இந்த வல்லமை கிடைத்தது, இவன் தச்சனின் குமாரன் அல்லவா? என்று ஆச்சரியப்பட்டார்கள்(மாற்கு: 6: 1-3). இன்னும் குர்-ஆன் சொல்வது போல, குழந்தை அற்புதம் நடந்து இருக்குமானால், இவ்விதம் அவர்கள் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. இவன் தான் குழந்தையாக இருக்கும் போதே அற்புதம் செய்தவன் ஆயிற்றெ, இந்த அற்புதங்கள் என்ன புதுசா? என்றுச் சொல்லியிருப்பார்கள். எனவே, குழந்தை இயேசு அற்புதம் என்பது ஒரு கற்பனைக் கதையே தவிர வேறில்லை. //
நமது பதில்:

அதாவது குழந்தை அற்புதத்தை மறுப்பதற்காக என்ன மாதிரியெல்லாம் சிந்திக்கின்றார்கள் என்று புரிகின்றதா சகோதரர்களே! இயேசு பெரியவரான போதும் அதிசயம் செய்தார். அப்பொழுது மட்டும் அவர் வசதியுடன் வாழ்ந்து விட்டாரா? அவர் வசதியாக வாழவில்லை என்பதற்காக அவர் அதிசயம் செய்யவே இல்லை என்று சொல்ல வருகின்றீர்களா?

ஒரு வாதத்திற்காக மாற்கு 6:1-3 ல் சொல்லப்பட்ட வசனத்தை ஆதாரமாக எடுத்துக்கொண்டாலும் அதுவும் இவரது கருத்துக்கு ஒத்துப் போகாது. ஏனெனில், இந்த மாற்கு வசனத்தின் படி எவர்கள் ஆச்சரியப்பட்டதாக இவர் எடுத்துக்காட்டுகின்றாரோ அவர்கள் தான் அவரை கொலைசெய்ய துடித்தார்கள். காரணம் அவர்கள் இயேசு செய்த எந்த அதிசயத்தையும் இறைவன் புறத்திலிருந்து வந்த அதிசயமாகவே எடுத்துக் கொள்ள வில்லை. அவரை இறைவன் புறத்திலிருந்து வந்தவராகவும் நம்பத் தயாராக இல்லை. நம்பத் தயாராகாதவர்களிடம் புதுசு பழசு என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்களுக்கு எத்தனை அதிசயம் செய்து காட்டினாலும் அவர்கள் நம்பப்போதில்லை. இவ்வளவு அதிசயங்களை செய்தப் பிறகுத்தான் இயேசு கொல்லப்பட்டதாக பைபிள் கூறுகின்றது.

கிறிஸ்தவர்:

//இதற்கு பதில் சொல்லுங்கள், சுவிசேஷங்கள் எழுதிய சீடர்கள் இயேசுவின் எதிரிகளா? இல்லையே, தங்கள் தலைகளை இயேசுவிற்காக வெட்டித்தள்ள நீட்டியவர்கள். ஒருவேளை இந்த அற்புதம் நடந்துயிருக்குமானால், அதை எழுதுவதினால், தங்கள் மதிப்பு கூடுமே தவிர குறையாது. ஏன் ஒருவரும் சொல்லவில்லை, இயேசுவின் மீது கோபமா அல்லது இது ஒரு சாதாரண அற்புதமா? பின் ஏன் யாரும் எழுதவில்லை. காரணம் அது நடக்கவில்லை//

நமது பதில்:

பைபிளில் சொல்லப்பட்ட சுவிஷேங்களை எழுதியது இயேசுவின் சீடர்கள் என்று யார் சொன்னது? சுவிஷேஷ எழுத்தாளர்கள் இயேசுவின் சீடர்கள் அல்ல என்பதை பைபிள் ஆதரத்துடன் எத்தனையோ பைபிள் அறிஞர்களே ஒத்துக்கொண்ட உன்மையை நீங்கள் அறியாமல் இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. காரணம் மடமை உங்கள் அறிவை மறைக்கின்றது. மத்தேயு என்ற சுவிஷேஷத்தை எழுதியவர் இயேசுவின் சீடரான மத்தேயுவா? அல்லது யோவான் சுவிஷேஷத்தை எழுதியவர் இயேசுவின் சீடரான யோவானா? பைபில் ஆதாரத்துடன் உங்களால் நிரூபிக்க முடியுமா? மாற்கும் லுக்காவும் பவுலுக்கு வேண்டப்பட்டவர்களா அல்லது இயேசுவின் நேரடி சீடர்களா? பவுலும் பலுலைச் சார்ந்தவர்களும் இட்டுக்கட்டி எழுதியதே இன்றைய புதிய ஏற்பாடு என்பதை மறந்துவிடாதீர்கள். அவரின் உன்மையான வரலாற்றை மறைத்து விட்டு அவர் மீது இட்டுக்கட்டிய பொய்யான பல தகவல்களைக் கொண்டது தான் இன்றைய பைபிள் என்பதையும் மறந்துவிடாதீர்கள். இன்ஷா அல்லாஹ் அது பற்றிய விளக்கக்கட்டுரை விரைவில் நமது தளத்தில்...

அடுத்து சகோதரர் தேங்கை முனீப் அவர்கள் மொழிபெயர்த்து இஸ்லாம் கல்வியில் வெளியிட்ட கட்டுரையில் கிறிஸ்தவர்களில் ஒரு சிலர் செல்லிவரும் பொய்களில் ஒன்றான பைபிளிலிருந்து குர்ஆன் காப்பியடிக்கபட்டது என்பதற்கு பல ஆதரங்களை முன்வைத்து மறுப்பெழுதியிருந்தார். (இன்ஷா அல்லாஹ் குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதா என்பதற்கான மிகத் தெளிவான விளக்கம் விரைவில் நமது தளத்திலும் வர இருக்கின்றது) அவர் கொடுத்திருந்த எத்தனையோ ஆதரங்களில் இந்த 'குழந்தை அதிசயம்' என்ற ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு குர்ஆன் காப்பி அடிக்கப்பட்டதே என்று மறுப்பெழுதி இருந்தனர். அது எந்த அளவுக்கு மடத்தனமானது என்பதை சற்று அலசுவோம்:

குர்ஆனில் சொல்லப்பட்ட குழந்தை அற்புதம் என்பது நபி (ஸல்) அவர்களுக்கு முன்பே பைபிளின் தள்ளுபடி ஆகாமங்களில் ஒன்றான (Gospel of Thomas) 'தோமாவின் சுவிஷேஷத்தில்' உள்ளதாகவும் அதிலிருந்து தான் நபி (ஸல்) அவர்கள் காப்பியடித்து எழுதினார்களே யொழிய இறைவனின் புறத்திலிருந்து ஒன்றும் புதிதாகச் அவர்களுக்குச் சொல்லப்படவில்லை என்கிறார். அதை பின்வருமாறு எழுதுகின்றார்:

//இஸ்லாம் கல்வி சகோதரர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்று தான், அதாவது, இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட இந்த குழந்தையாக இருக்கும் போது பேசிய அற்புதம், மற்றும் களிமண் பறவையை உயிர் பெறச்செய்த அற்புதம், இவைகள் முகமது பைபிளிலிருந்து காப்பி அடிக்கவில்லை, மாறாக கிறிஸ்தவர்கள், யூதர்கள் எல்லாரும் தள்ளுபடி ஆகமங்கள் என்றும், இவைகள் இறைவனின் வெளிப்படுகள் அல்ல என்றும் ஒதுக்கி தள்ளிவிட்ட புத்தகங்களிலிருந்து அவர் காப்பி அடித்துள்ளார் என்பதை மட்டும் நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.//
இது எவ்வளவு மடத்தனமான வாதம் என்பதை சாதாரணமாகவே நமக்கு விளங்கும். இயேசுவின் குழந்தை அதிசயம் இடம்பெறாத, கிறிஸ்தவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பைபிளே நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திற்கும் 200 ஆண்டுகளுக்கு பின்புதான் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது என்னும் போது தமிழ் உட்பட உலகின் ஏராளமான மொழிகளில் இன்றுவரையில் மொழிபெயர்க்கப்படாத தள்ளுபடி ஆகமங்களை பார்த்து காப்பிஅடிக்கபட்டது என்ற வாதம் எப்படி சரியாகும்? இவர் சொல்லக்கூடிய தள்ளுபடி ஆகாமங்கள் எழுதப்பட்டு கிட்டத்தட்ட 1800 ஆகிவிட்ட நிலையில் உலகில் உள்ள பெரும்பாலான மொழிகளில் அது இன்று வரை மொழிபெயர்க்கப்படவில்லை. காரணம் அதை பின்பற்ற வேண்டிய கிறிஸ்தவர்களே ஒதுக்கித் தள்ளிவிட்ட பிறகு வேறு யாருக்கும் அது தேவைப்படாத ஒன்று. அப்படி இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் இவர்களால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு ஆகாமம் எப்படிக் கிடைத்திருக்கும்? அதுவும் எழுதப்படிக்கத்தெரியாத நபி (ஸல்) அவர்கள், நீங்கள் சொல்லும் புழக்கத்தில் உள்ள இன்றைய பைபிளை விட்டு விட்டு தள்ளுபடி செய்யப்பட்ட - புழக்கத்தில் இல்லாத - ஆகாமங்களை எங்கிருந்து பெற்றார்கள்? ஒருவேளை நபி (ஸல்) காலத்தில் இன்று நீங்கள் தள்ளுபடி செய்யப்பட்ட ஆகாமங்கள் தான் கிறிஸ்தவர்களின் வேதமாக இருந்தது என்று சொல்லவருகின்றீர்களா?

அடுத்து, இன்னொன்றையும் நாம் புரிந்துக்கொண்டாக வேண்டும். இன்று நடைமுறையில் உள்ள இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள பைபிளை 500 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெரும் பெரும் கிறிஸ்தவ குருமார்களைத் தவிர வேறு யாரும் படிக்க முடியாது. அந்த அளவுக்கு மிகக் கடுமையாக பொதுமக்களைத் தடுத்து வைத்திருந்தார்கள். அந்த பைபிள்களோ மதகுருமார்கள் மட்டும் படிக்கும் வகையில் கிரேக்க, எபிரேயு மற்றும் லத்தீன் மொழிகளில் மட்டும் தான் இருக்கும். பாமரர்கள் யாரும் படித்துவிட முடியாத படி சங்கிலியால் கட்டி வைத்து பாதுகாத்தனர் என்றும் அப்படி மீறி படிக்க நினைக்கும் மதகுருமார்கள் அல்லாதவர்கள் பலர் சிலுவையில் அறையப்பட்டும் இன்னும் பல கொடுமைகளுக்கு ஆளாக்கபட்டும் துன்புறுத்தப்பட்டனர் என்று கிறிஸ்தவ வரலாறே நமக்கு சான்று பகர்கின்றது. இன்னும் சொல்லப்போனால் இந்த அவதூறு கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவான 'ப்ரொட்டஸ்டன்ட்' பிரிவே இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக இன்றிலிருந்து 500 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது.

இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட பைபிளை படிப்பதற்கு அதைப் பின்பற்றும் கிறிஸ்தவர்களுக்கே இந்த நிலைமை என்றிருக்கும் பொழுது, இவர்களால் தள்ளுபடி செய்யப்பட்ட ஆகாமங்களை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபி (ஸல்) அவர்கள் மட்டும் எப்படி காப்பி அடித்திருப்பார்கள்? யோசிக்க வேண்டாமா?

எனவே உங்களது வரட்டு வாதங்கள் எல்லாம் உங்களைப் போன்ற குருட்டு நம்பிக்கை உடைய குறுமதியாளர்களைத் திருப்தி படுத்தவே உதவும் என்று சொல்லி முடிக்கின்றேன். வஸ்ஸலாம்.
.
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.