அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!
Showing posts with label இராமர்பாலம். Show all posts
Showing posts with label இராமர்பாலம். Show all posts

Monday, March 10, 2008

இராமர் பாலமும்... இந்துத்வாவினரும்...

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பெயரால் ஹிந்துத்வாவினர் பரப்பிய பச்பைப் பொய்:

- சின்னக்குத்தூசி

'சேது சமுத்திரத் திட்டமும் இராமர் பாலமும்' எனும் ஆய்வு நூலில், திராவிட கழகத்தலைவவர் கி. வீரமணி,

இராமர் பாலம் என்பது எவ்வளவு பெரிய புரட்டு என்பதைப் புட்டு புட்டு வைத்திருக்கிறார். அவரது நூலின் முக்கியப் பகுதிகளில் இது ஒரு பகுதி: -

'இது இராமன் கட்டிய பாலம் என்றும், 17 இலட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராமன் கட்டினான்' என்றும் கதைக்கிறார்கள்.

17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வாழ்ந்தானா என்பதற்கு ஆதாரம் என்ன? அதற்கெல்லாம் அறிவியல் ரீதியாக விளக்கம் அளிக்காமல் 'நம்பிக்கை' என்று சொல்லி சொதப்புகிறார்கள்.

நம்பிக்கை என்பதையெல்லாம் நம்பி கைகட்டிக் கொண்டு வெறுமனே இருக்க முடியுமா? பூமியை பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் விழுந்தான் என்கிற புராணங்களையெல்லாம் கூட நம்ப முடியுமா?

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் இருக்கக்கூடியது வெறும் மனல் திட்டுக்களே - அவற்றின் மீது பாசிப்படிமங்கள் தோன்றி பாலம் போண்ற அமைப்பாக உருவானதாக அறிவியலாளர்கள் கூறுகின்றார்கள். இதனை வெகு காலமகாக ஆதாம் பாலம் என்றே வழங்கி வருகின்றனர். ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கே நீண்ட நெடிய தூரத்திற்கு இத்தகைய பாலங்கள் இருக்கின்றன. இவற்றையெலல்லாம் கட்டியவர்கள் இராமன் போன்ற இன்னொரு அவதாரமா? என்று பேராசிரியர் தமயந்தி ராஜதுரை எழுப்பிய வினாவுக்கு விடை என்ன?

17.3.2007 நாளிட்ட இந்து ஏட்டில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி புவியியல் ஆய்வுத்துறைத் தலைவர் என் ராமானுஜம் அவர்கள் 'இது மனிதன் உருவாகிய அமைப்பு அல்ல' இது புவியியல் நிகழ்வால் ஏற்பட்டதே' என்று எழுதியுள்ளார்.

பிரபல வரலாற்று ஆசிரியர் ஆர். ஏன். சர்மா (ராம் சரண் சர்மா) கூறியுள்ளார்:

'இராமாயண கால பாலம் கட்டியதற்கு அகழ்வாராய்ச்சி சான்றோ, இலக்கியச் சான்றோ இல்லை. பாலம் போலத் தோன்றும் மணல் திட்டுகளின் காலம் பதினேழரை லட்சம் ஆண்டுகள் பழையது என்று வைத்துக்கொண்டாலும் அந்தக் காலத்தில் மனிதர்களேயில்லை. கிடைத்துள்ள சான்றுகளின்படி இராமாயணம் எழுதப்பட்ட மிகப்பழங்காலம் கி.மு. 400 ஆகும்' என்று குறிப்பிட்டுள்ளாரே - என்று சுட்டிக்காட்டியுள்ளார் வீரமணி.

'இராமர் பாலம் இருக்கிறது என்று அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா விண்வெளியிலிருந்து பாலத்தைப் புகைப்படம் எடுததே வெளியிட்டிருக்கிறதே' என்று பா.ஜ.கவினர் ஒரு புதுக்கரடியை அவிழ்த்து விட்டார்கள்.

'இன்டோ லிங்க் காம் - வைஷ்ணவ நிறுவன நெட்வொர்க்' என்கிற இணையத்தளம் வெளியிட்ட செய்தியை இதற்கு ஆதாரமாக அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

'உன்மைகள் உறங்கும் நேரத்தில் - பொய்கள் உலகையே ஒரு முறை சுற்றி வலம் வந்துவிடும்' என்று குறிப்பிடுவதுன்டு. அது போலத்தான் இந்த இணையதளம் வெளியிட்ட செய்தியைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு 'இராமர்தான் பாலம் கட்டினார் என்பதற்கு இதுவே ஆதாரம், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவே கூறிவிட்டது' என்று பாஜகவினர் வானத்துக்கும் பூமிக்குமாக எகிறிக் குதித்தார்கள்.

கெட்டிக்காரன் புளுகே எட்டுநாளில் குட்டு உடைக்கப்பட்டு - அம்பலமாகிவிடும் என்றால் எத்துவாளிகள் புளுகுகள் எத்தனை நாளைக்கு நீடித்திருக்கமுடியும்?

பாஜகவினர் பரப்பிவிடும் இந்தத் தகவல் உண்மையா? என்று பலரும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தினரிடமே கேட்டார்கள்.

நாசா விண்வெளி மையத்தின் அதிகாரியான மைக்கேல் பிரவ்கசு அளித்த விளக்கத்தின் மூலம் பாஜகவினர் பரப்பிய இந்தப் பொய் தகர்க்கப்பட்டு பொடிப்பொடியானது.

'விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி பார்த்தால், இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதைப்போல மனிதர்களால் கட்டப்பட்ட எந்தவொரு பாலமும் அந்த இடத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடையாது' என்று திட்டவட்டமாக அறிவித்த அவர்...

'ஒரு பொருளில் இருந்து அதன் துகள்களைச் சேகரித்து கார்பன் ஆய்வு நடத்தினால் அது எத்தனை ஆண்டுகளுக்கு முந்தையது என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அவ்வாறு 17 லட்சம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த எந்த ஒரு கட்டுமான அமைப்பும் அந்த இடத்தில் இருந்ததாக மெய்ப்பிக்கும் வகையிலான எந்தவித கார்பன் ஆய்வு முடிவுகளும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இது பற்றி மேலும் கூறிய அவர் :

'எங்கள் அறிவியல் வல்லுநர்கள் எடுத்த புகைப்படங்களை வைத்துக்கொண்டு சிலர் நாசா வெளியிட்ட படங்கள், இராமர் கட்டிய பாலம் என்பதையே நிரூபிப்பதாக் கூறி வருகிறார்கள்.

கடலுக்கடியில் இருக்கும் பொருளின் வயது, அதன் தன்மை போன்ற விவரங்களை, வெறும் புகைப்படத்தை வைத்துக்கொண்டு கணக்கிட முடியாது. எனவே அவர்கள் கூறுவதில் எந்த அடிப்படையும் கிடையாது' என்பது நாசா அதிகாரி மைக்கேல் பிரவ்கசுவின் விளக்கம்.

அதே அமைப்பைச்சேர்ந்த இன்னொரு அதிகாரியான மார்க்ஹெஸ், 'விண்வெளிச் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள், பூமிக்கு மேலே சுற்றுப்பாதையில் இருந்து எடுக்கப்படும் படங்கள் ஆகியவை மூலம் தீவுகள் மற்றும் பிற பொருட்களின் வயது, தன்மை ஆகியவற்றைக் கணக்கிட முடியாது.

அப்படியே ஒரு கட்டுமானம் போன்ற அமைப்பு அதில் தோன்றினாலும் அதை மனிதர்கள்தான் உருவாக்கினார்களா என்பதை அந்தப் படத்தின் மூலம் உறுதி செய்ய முடியாது.

இந்தப் பாலம் என்று கூறப்படுவது 30 கி.மீ. நீளம் உள்ளதாக இருக்கிறது.
இது சாதாரணமாகத் தோன்றும் மணல் திட்டுகள்தான். இதைத்தான் ஆதாம் பாலம் என்று சொல்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக - குறிப்பிட்ட அந்த இணைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிற புகைப்படங்கள் நாங்கள் வெளியிட்டதாக இருக்கலாம்.

ஆனால் அந்த புகைப்படங்களுக்கு (இது தான் ராமர் பாலம் - நாசாவே புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறது என்று) சிலர் கூறும் விளக்கம் - அவர்களது சொந்த விளக்கமே தவிர நிச்சயமாக நாங்கள் (நாசா) தந்த விளக்கமல்ல' என்று சந்தேகங்களுகே இடமற்ற வகையில் பளிச்சென்று பதிலளித்துவிட்டார் நாசாவின் அதிகாரி மார்க் ஹெஸ்.

நாசா விண்வெளி அதிகாரிகள் இருவர் அளித்த மறுப்பினால் - 'ராமர் கட்டிய பாலம்தான் - நாசாவே புகைப்பட ஆதாரத்தோடு உறுதி செய்திருக்கிறது' என்று ஓர் இணையத்தளச் செய்தி மூலம் பாஜகவினர் பரப்பி வந்த பொய் தகர்க்கப்பட்டு தரைமட்டமாகிவிட்டது.

ராமர் பாலம் கட்டினார் என்ற புளுகை மறுத் தந்தை பெரியார் அவர்கள்,
- கிமு 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கடற்பெருவெள்ளம் நிகழ்ந்தது.
அந்த வெள்ளம் நிகழ்வதற்கு முன்புவரை இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவே இருந்தது. வெள்ளம் காரணமாகவே - தமிழ்நாட்டிலிருந்து இலங்கை பிரிவுபட்டது.
- என்று தமது 'இராமாயணக் குறிப்புகள்' என்ற நூலில் நினைவுபடுத்தியிருக்கிறார்.

அது வருமாறு: இது வரை இவ்வுலகில் ஏற்பட்ட கடற்பெரு வெள்ளங்களின் காலங்கள் காட் எலியட் என்பவர் குறித்துள்ளபடி பார்க்கையில் பதினாயிரம் நூற்றாண்டுகளுக்கு (10,00,000 ஆண்டுகளுக்கு) முன்னர் நேர்ந்துள்ள கடற்பெருவெள்ளமே முதன்மையானதென்றும், இரண்டாவது வெள்ளம் எண்ணூறாயிரம் (8,00,000) ஆண்டுகளுக்கு முன் நேர்ந்திருக்கக்கூடும் என்றும், மூன்றாவது வெள்ளம் இருநூறாயிரம் (2,00,000) ஆண்டுகளுக்கு முன்னரும், நாலாவது வெள்ளம் எண்பதினாயிரம் (80,000) ஆண்டுகளுக்கு முன்னரும், அய்ந்தாவது வெள்ளம் ஒன்பதாயிரத்து ஐநூறு (9,500) ஆண்டுகளுக்குச் சிறிது முன்னும் பின்னுமிருக்கலாம் மென்றும் அறியக்கிடக்கின்றன.

இப்பெரு வெள்ளங்களில் காரணமாகப் பல நிலப்பரப்புகள் நீர்ப் பரப்பாயும், நீர்ப்பரப்புகள் நிலப்பரப்பாயும் மாறினவென்பதற்குப் போதிய ஆதாரங்கள் உண்டு. குமரிமுனைக்குத் தெற்கிலிருந்து பல நாடுகள் நீரினுள் மறைந்தனவென்றும் அறியக்கிடக்கின்றன.

இவை எக்கேல், அக்கிசிலி, டொயினார்டு, பேர்கவன், கவான்சு முதலியோர் தென்னாட்டின் தொன்மையைப் பற்றிக்கூறும் கருத்துகளாலும், நில நூல், தொல்லுயிர் நூல் முதலியவற்றின் சான்றுகளாலும், தென்னாட்டிற்கும், மேலை ஆசியாவிற்கும் கப்பல் வாணிபம் மிகப்பழைய காலத்தே நடந்ததாகத் தெரிவதாலும், தமிழரின் ஒரு பகுதியாரே தென்னாட்டிலிருந்து அக்கோடியா முதலிய இடங்களுக்குச் சென்றனர் என்றும் கொள்ளுதலே பொருத்தமுடைத்து. ஆரியர் வட மேற்கு வழியாக இந்தியாவிற்குள் புகுங்காலத்து பெலூசிஸ்தான் முதலிய இடங்களிலும் வடமேற்கு இந்தியாவிலும் தமிழ் சார்பான மொழிகள் வழங்கின என்பது அறிஞர் ராப்பன் என்பவர் கருத்தும் ஆகும்.

சுமார் கி.மு. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு பெரு வெள்ளத்தின் பின்னேயே இலங்கையானது தம்ழிநாட்டினின்றும் பிரிவுபட்டதென்பர்.
- என்று குறிப்பிட்டிருக்கிறார் தந்தை பெரியார்.

இதன்படி கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை இலங்கை - தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பது தெளிவாகிறது.

பதினேழரை லட்சம் வருடங்களுக்கு முன்பு தமிழகத்திற்கும் இலங்கைக்குமிடையே ராமர் பாலம் கட்டினார் என்பது எவ்வளவு பெரிய பொய். ஓன்றாக இருந்த நிலப்பரப்பில் பாலம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?


இலங்கை செல்ல கடலில் பாலம் கட்டிய (?) இராமர் - அயோத்திக்கு புஷ்பக விமானம் ஏறி - வான்வழியே சென்றார் எனும் கற்பனை !

... அப்படித்தான் சேதுவில் இராமர் பாலம் கட்டினார். குரங்குகள் அந்தப் பாலத்தைக் கடலில் கட்டின என்று வால்மீகி இராமாயணத்திலேயே ஒரு கற்பனை கட்டவிழித்து விடப்பட்டிருக்கிறது.

அதே இராமாயணத்தில் 'யாருடைய துணையும் உதவியுமின்றி எனது அம்புகள் மூலமே – சமுத்திரத்தை ஒருசொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல் வற்றச் செய்து, சமதரையாக்கி எனது வானர சேனையுடன் இலங்கை செல்வேன் - என்று இராமர் கர்ஜிக்கிறார். தன்னாலே பாலம் எதுவும் கட்டாமலே அக்கரை சென்றடைய முடியும் என்பதை நிரூபிக்க சில பாணங்களை அவர் சமுத்திரத்தில் எய்ய - அந்த அம்புகளின் சக்தியால் - சமுத்திரமே வறண்டுவிடுமோ என்ற நிலை உருவாகிட - சமுத்திர ராஜன் கடலுக்கு அடியிலிருந்து எழுந்து வந்து 'பிரபே! என்னை மன்னியுங்கள்; கடலில் பாலம் கட்ட நான் உதவி செய்கிறேன். விசுவகர்மாவின் மகன் எனக் கூறப்படும் நளனை உங்களுக்குப் பாலம கட்ட உதவியாகத் தருகிறேன்' என்று செஞ்சுகிறார்.

அதன் பின் வானரங்கள் பிரம்மாண்டமான மரங்களையும் மலைகளையும் குன்றுகளையும் அடியோடு பெயர்த்துக்கொண்ட வந்து கடலில் போட - கடலில் ஒரு பாலம் உருவானது என்கிறார் வால்மீகி.... (தான் எய்யும் அம்பின் மூலம் கடலையே வற்றவைக்கும் அளவுக்கு சக்தி படைத்த இராமனுக்கு - சில கிலோமீட்டர் தூரமுள்ள இலங்கைக்கு தன் சக்தியால் நடந்தே சென்றிருக்கலாமே? மகா சக்தி பொருந்திய கடவுளுக்கு பாலம் எதற்கு? பதில் சொல்ல இயலுமா?)

... யுத்த காண்டத்தின் இறுதியில் - இராமர் - சீதை - லட்சுமனர் - வீபீஷணன் - அனுமன் மற்றும் வானரங்கள் எல்லாம் இலங்கையிலிருந்து அயோத்திக்கு எப்படிப் பயணம்செய்கிறார்கள்?

வால்மீகி கூறுகிறார் : புஷ்பக விமானத்தில் எல்லோரும் ஏறிக்கொண்டு - வானவீதி வழியாக அயோத்திக்குப் புறப்பட்டார்கள் - என்கிறார்.

யுத்தம் முடிந்து அயோத்தி திரும்பும்போது அனைவரையும் புஷ்பக விமானத்தில் அழைத்துச் சென்ற இராமருக்கு - வானர சேனையுடன் இலங்கை செல்ல மட்டும் பாலம் தேவைப்பட்டது ஏன்? அத்வானிகளால் பதிலளிக்க முடியுமா? முடியாது. முடியவே முடியாது.

(தோழர் சின்னக்குத்தூசி எழுதிய 'ராமர் பாலம் இருந்ததா? ராமாயணம் நடந்ததா?' என்ற புத்தகதிலிருந்து சில...)
.
.