அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Saturday, August 30, 2008

திரித்துவம் பற்றிய கேள்விக்கு ஜாகிர் நாயக்கின் பதில்

இது அமெரிக்காவில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கும் டாக்டர் வில்லியம் கேம்பெல் அவர்களுக்கும் நடந்த விவாத்தின் போது, இறுதியில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோதரி ஒருவர் Dr. ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்ட கேள்வி மற்றும் அதற்கு Dr. ஜாகிர் நாயக் அவர்கள் அளித்த விளக்கத்தின் தமிழாக்கம் ஆகும்.

சகோதரியின் கேள்வி: -

தண்ணீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் பனிக்கட்டியாகவும், தண்ணீராகவும் மற்றும் நீர் ஆவியாகவும் இருப்பது போல் ஒரு கடவுள் பிதா, தேவ குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரில் இருக்கிறார். இது திரித்துவக் கோட்பாட்டுக்கான அறிவியல் விளக்கமாகும். இந்த விளக்கம் சரியானது தானா?

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் விளக்கம்: -
தண்ணீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் பனிக்கட்டியாகவும், தண்ணீராகவும் மற்றும் நீர் ஆவியாகவும் இருப்பது போல் ஒரு கடவுள் பிதா, தேவ குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரில் இருக்கிறார் என்று சில கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். அறிவியல் கோட்பாட்டின் படி தண்ணீர் மூன்று நிலைகளில் இருப்பது உண்மை தான். ஆனால் தண்ணீருக்கான மூலப்பொருள்கள் (components) மாறாமல் அப்படியே இருக்கிறது. அதாவது H2O, ஹைட்ரஜனின் இரண்டு அணுக்களும், ஆக்ஸிஜனின் ஒரு அணுவும் தான் தண்ணீரின் மூலப்பொருள்கள் ஆகும். அந்த மூலப்பொருள்கள் அப்படியே மாறாமல் இருக்கிறது. ஆனால் அதன் நிலை தான் திட, திரவ மற்றும் வாயு நிலைக்கு மாறுகிறது.

அடுத்து இவர்களின் திரித்துவத்தை எடுத்துக் கொண்டால், தண்ணீர் மூன்று நிலைகளில் இருப்பதைப் போல் ஒரே கடவுள் மூவரில் இருக்கிறார் என்கின்றனர். ஆனால் தண்ணீரின் மூலப்பொருள் அதன் மூன்று நிலைகளிலும் ஒன்றாக இருப்பது போல இந்த மூவரின் மூலப்பொருள் ஒன்றாகவா இருக்கிறது? கடவுள் மற்றும் பரிசுத்த ஆவி ஆகியோர் ஆவியினால் (made of sprit) ஆனவர்கள். ஆனால் மனிதராகிய இயேசுவோ சதைத் துண்டுகளாலும், எலும்புகளாலும் உருவாக்கப்பட்டவர். எனவே அவர்கள் மூலப்பொருட்களால் சமமானவர்கள் அல்லர். மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு உணவு அவசியமாகிறது. ஆனால் கடவுள் உயிர் வாழ உணவு உண்ண வேண்டிய அவசியம் இல்லை. அதனால் அவர்கள் எப்படி சமமானவர்களாக முடியும்? மேலும் இதை இயேசு கிறிஸ்துவே பைபிளில் உறுதிப்படுத்துகிறார்.

லூக்கா, 24 வது அதிகாரம், வசனங்கள் 36-40:

இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்(தார்).

இயேசு கிறிஸ்து அவருக்கு தமக்கு சதை உடைய கைகள், கால்கள் இருக்கிறது என்றும் அவருடைய சீடர்கள் கொடுத்த உணவை சாப்பிட்டும் தாம் ஒரு ஆவியல்ல (no sprit) என்றும் நிரூபித்தது எதற்காக? தாம் கடவுள் என்பதற்காகவா? இல்லை! தாம் கடவுள் இல்லை என்பதற்காவே தாம் ஆவி (sprit) இல்லை என்று நிரூபித்தார்! ஏனென்றால் ஆவியானவருக்கு சதை மற்றும் எலும்புகள் இல்லை. எனவே அறிவியல் மூலமாகவும் இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியும் கடவுளாக இருக்க முடியாது என்பது நிரூபனமாகின்றது.

மேலும் திரித்துவம் (Concept of Trinity) என்ற தத்துவமோ (மூன்று கடவுள் கொள்கை) அல்லது அந்த வார்த்தையோ பைபிளில் எந்த ஒரு இடத்திலும் காணப்படவில்லை. ஆனால் திருக்குர்ஆனில் திரித்துவம் குறித்துக் கூறப்பட்டிருக்கிறது.

திருக்குர்ஆன் அத்தியாயம் 4,ஸுரத்துந் நிஸா, வசனம் 171 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் ('குன்' ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். (அல்-குர்ஆன் 4:171)

மேலும் அத்தியாயம் 5, ஸுரத்துல் மாயிதா, வசனம் 17 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். 'மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்' என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்-குர்ஆன் 5:17)

'நான் கடவுள்' என்று இயேசு கிறிஸ்து சொல்லவே இல்லை. திரித்துவம் பற்றிய கடவுள் தத்துவம் பைபிளில் அறவேயில்லை. பைபிளில் திரித்துவத்தை ஒத்திருக்கிறதாக அவர்கள் கூறும் ஒரே ஒரு வார்த்தை என்னவெனில்,

பையிளின் புதிய ஏற்பாடு, I யோவான், 5 அதிகாரம், வசனம்-7

பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;

ஆனால், மிகச்சிறந்த கிறிஸ்தவ அறிஞர்களால் பைபிளின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பைப் பார்த்தோமேயானால் (Revised Standard Version), அதில் அவர்கள், 'பைபிளின் மேற்கண்ட வசனம் இட்டுக்கட்டப்பட்டு இடை செறுகப்பட்ட வசனம்' என்று கூறி அந்த வசனத்தை பைபிளிலிருந்து நீக்கிவிட்டனர்.
இயேசு கிறிஸ்து நான் கடவுள்' என்று ஒரு போதும் கூறியதே இல்லை. பைபிளின் எந்த ஒரு இடத்திலும் 'நான் கடவுள்' அல்லது 'என்னை வணங்குங்கள்' என்று இயேசு கிறிஸ்து சொன்னதாக முழுமையான ஒரே ஒரு வசனம் கூட கிடையாது.

ஆனால் உண்மையில் நாம் பைபிளைப் படித்தோமேயானால், (இந்த திரித்துவக் கோட்பாட்டுக்கு முரணான ஏராளமான வசனங்கள் இருக்கின்றன.)

யோவான், 14 அதிகாரம், வசனம் 28

நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
யோவான், 10 அதிகாரம், வசனம் 29

அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.

மத்தேயு, 12 அதிகாரம், வசனம் 28

நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.

லூக்கா, 11 அதிகாரம், வசனம் 20

நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.

யோவான், 5 அதிகாரம், வசனம் 30

நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை!

(சுயமாக எதையும் செய்யாமல் பிறரின் சொல்படி செய்கிறவர் எப்படி கடவுளாக முடியும்?)

யார் ஒருவர் தன் சுயவிருப்பப்படி எதையும் செய்யாமல் இறைவனின் விருப்பப்படி செய்கிறாறோ அவர் 'முஸ்லிம்' ஆவார். ஏனென்றால் 'முஸ்லிம்' என்பவர் 'தன் விருப்பங்களை இறைவனின் விருப்பப்படி அமைத்துக் கொள்பவராவார்'. இயேசு கிறிஸ்துவும் தம் விருப்பப்படி தாம் எதையும் செய்யவில்லை என்றும் கடவுளின் விருப்பப்படி செய்கிறேன் என்று கூறியதால் அவரும் ஒரு முஸ்லிம் ஆவார்.

இயேசு கிறிஸ்து இறைவனின் சிறந்த தூதர்களில் ஒருவர் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். மேலும் முஸ்லிம்களாகிய நாங்கள்:

  • ஆண் துணையில்லாமல் பிறந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அற்புதம் வாய்ந்தவை என்று நம்புகிறோம்
  • பைபிள் கூறுவதைப் போல, இறைவனின் அனுமதியுடன் இறந்தவரை உயிர்ப்பித்தார் என்று நம்புகிறோம்
  • பிறவிக் குருடர்களுக்கு பார்வை அளித்தார் என்றும் நம்புகிறோம்
  • குஷ்டரோகிகளைக் குணப்படுத்தினார் என்றும் நம்புகிறோம்
எனவே முஸ்லிம்களாகிய நாங்கள் இயேசு கிறிஸ்து இறைவனின் உண்மையான தூதர் என்று நம்புகிறோம். அவருக்கு மதிப்பளிக்கின்றோம். ஆனால் அவரே இறைவன் என்று நம்புவதில்லை. அவர் மூன்று கடவுள்களில் ஒருவராக இருக்கவில்லை. மேலும் இந்த திரித்துவம் என்பது இல்லவே இல்லை.

திருக்குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹ் அவன் ஒருவனே (அல்-குர்ஆன் 112:1)

(திரித்துவம் மற்றும் இயேசு கடவுளா? என்பது பற்றிய மிக விரிவான ஆய்வுக் கட்டுரை கூடுதல் விளக்கங்களுடன் விரைவில் ஏகத்துவம் வலைதளத்தில் வர இருக்கின்றது இன்ஷா அல்லாஹ்...)

வீடியோ இணைப்பு : திரித்துவம் குறித்து Dr. ஜாகிர் நாயக் விளக்கம்-1 English

வீடியோ இணைப்பு : திரித்துவம் குறித்து Dr. ஜாகிர் நாயக் விளக்கம்-2 English

நன்றி : சுவனத்தென்றல்
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

0 comments: