அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Wednesday, February 20, 2008

சாந்தியும் சமாதானமும்.....

அன்பு ஏற்படுவதற்கான வழி

நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை சுவனத்தினுள் நுழையமாட்டீர்கள்; ஒருவரையொருவர் அன்பு பாராட்டும் வரை இறைநம்பிக்கை கொள்ளமாட்டீர்கள். நீங்கள் எந்த செயலை செய்தால் உங்களிடையே அன்பு ஏற்படுமோ அத்தகு செயல்முறை (திட்டத்தை) அறிவிக்க வேண்டாமா? உங்களிடையே ('உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக' என்ற பொருள் படக்கூடிய 'அஸ்ஸலாமு அலைக்கும்' எனும்) 'ஸலாம்' கூறுவதை பரவலாக்குங்கள்'' என்று இறைத்தூதர் நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்
விளக்கவுரை:


'ஸலாம்' கூறுவதன் மூலம் சகோதரத்துவம், அன்பு, பாசம், நேசம் ஏற்படுகிறது.
இறைநம்பிக்கையும் அன்பும் பிரிக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும்.இறைபக்தி மற்றும் இறைநம்பிக்கையுடன் செயல்படுவோர் தீமைகளைத் தவிர்ப்பர். நன்மை செய்வோருக்கு சுவனம் கிடைப்பது உறுதி இறைநம்பிக்கை கொண்டோரே! ஸலாத்தின் மூலம் அன்பை வெளிப்படுத்துங்கள்! சகோதரப் பிணைப்பிற்கு அது ஒன்றே வழி!
.
.
மக்களை இணைக்கும் பாலம்

''அல்லாஹ்விடம் மக்களிலேயே மிசச்சிறந்த நபர் முதலில் ஸலாம் கூறுபவராவார்''என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.




அறிவிப்பவர்: அபூ உமாமா(ரலி) நூல்: அஹ்மத், திர்மிதீ, அபூதாவூது)
விளக்கவுரை:

ஸலாம் கூறுவதை மரியாதைக் குறைவாக கருதுவோரும் உண்டு; நமது அந்தஸ்திற்கு இவருக்குப் போய் ஸலாம் கூறுவதா? என்ற அகந்தை எண்ணத்துடன் தலை நிமிர்ந்து செல்வோரும் உண்டு; இது அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். அடுத்தவரது நல்வாழ்விற்காக செய்யும் பிரார்த்தனையே ஸலாம் ஆகும். அதைச் சொல்வதற்குக் கூட கஞ்சத்தனம் செய்வோர் மனித நலனை எவ்விதம் காப்பர்? அதனால் தான் நபியவர்கள் தாங்களாகவே முந்திக் கொண்டு சிறுவர்களுக்கு ஸலாம் கூறுவார்கள். இந்த நபி மொழியை செயல்படுத்துவதற்காக அப்துல்லாஹிப்னு உமர் என்ற நபித்தோழர் கடைவீதிக்குச் சென்று, ஏழை, எளியோர், வியாபாரிகள் மற்றும் வருவோர், போவோர் அனைவருக்கும் ஸலாம் கூறும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தார். முதல் மனிதர் ஆதமின் முதல் வார்த்தையே ஸலாம் தான்! ஒருவரையொருவர் வெறுத்து பிரிந்து வாழ்வோர் ஸலாம் கூறுவதன் மூலமாக ஒன்று சேர்வதற்கான அருமையான வழிமுறையை அண்ணல் நபியவர்கள் காட்டியுள்ளார்கள்.
.
.
குரோதமும், விரோதமும் நீங்குவதற்கான வழி


''கைலாகு செய்து கொள்ளுங்கள்: அதனால் குரோத மனப்பான்மை நீங்கிவிடும்; ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள்; அதனால் உங்களிடையே அன்பு உண்டாகும்; விரோதம் அகன்று விடும்.'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பாளர்: அதாவுல் குராஸானீ நூல்: மாலிக்

விளக்கவுரை



கைலாகு செய்வது, அன்பளிப்புச் செய்வதன் வாயிலாக கிடைக்கும் நற்பயன்களை இந்த நபிமொழி அறிவுறுத்துகிறது. ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் போது ஸலாம் கூறிக் கொள்வதுடன் வலக்கரம் நீட்டி முஸாஃபஹா (கைலாகு) செய்து கொள்வது உள்ளத்தில் உண்டாகும் போட்டி, பொறாமை எண்ணங்களை அகற்றி சமாதானத்திற்கு பச்சைக்கொடி காட்டுகிறது. அதுபோன்றே உறவினர்கள், அக்கம்பக்கத்தவர்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்புக்களை வழங்கி அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது பதிலுக்குப் பதில் என்ற ரீதியில் அமையாமல் உள்ளன்போடு வழங்கும் பயன்பொருளாக இருத்தல் வேண்டும். ''இரு முஸ்லிம்கள் ஒருவரையொவருவர் சந்தித்து கைலாகு செய்தால், இருவரும் பிரிந்து செல்லும் முன்னரே அவ்விருவருக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டுவிடுகிறது'' என்பது நபிமொழி! தங்களுக்கு வரும் அன்பளிப்புகளை வசதியற்ற திண்ணைத் தோழர்களுக்கு வழங்கி மகிழ்ந்தது நபிவழி!
.
.
மென்மையின் மேன்மை

''திண்ணமாக அல்லாஹ் மென்மையானவன்; அனைத்து விஷயங்களிலும் மென்மையை விரும்புகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரீ, முஸ்லிம்
விளக்கவுரை :



நபி(ஸல்) அவர்களிடம் வந்த யூத மத அன்பர்கள் சிலர், ஸ்லாமு அலைக்கும் (வார்த்தையை மாற்றி - 'உங்களின் மீது சாவு உண்டாகுக!') என கடின வார்த்தை கூறி ஸலாத்தைக் கிண்டல் செய்தனர். இதைச் செவியுற்றதும் நபியவர்களின் அருகிலிருந்த துணைவி ஆயிஷா, ''உங்களின் மீதே சாவும், சாபமும் உண்டாகுக!'' என பதிலுரைத்தார்கள். அப்போது தான் நபியவர்கள் மேற்கூறிய மணிவாசகத்தை மொழிந்தார்கள். அவர்கள் மட்டும் சாபமிடுகிறார்களே! என ஆயிஷா கோபித்துக் கொண்ட போது நபியவர்கள், 'உங்களின் மீது உண்டாகட்டும் என்று கூறி அவர்களுக்கு பதிலளித்து விட்டேனே'' என மொழிந்தார்கள். விரோதிகளிடமும் மென்மைப் போக்கைக் கடைப்பிடித்து அவர்களைத் திருந்தச் செய்வதே நபியவர்களின் அழகிய வழிமுறை!

இறையில்லத்தில் (பள்ளிவாசலில்) சிறுநீர் கழித்த காட்டரபீ ஒருவரை நபித்தோழர்கள் தாக்க முனைந்தபோது அவர்களைத் தடுத்து நிறுத்தி, தம் திருக்கரங்களால் தண்ணீர் ஊற்றித் தூய்மை செய்தது மென்மையின் உச்சகட்டம்! ஹீதைபிய்யா உடன்பாட்டின் போது கடுமையாக நடந்துகொண்ட காஃபிர்களை மென்மைப் போக்கினால் வென்று காட்டியது, ''மென்மையினால் கிடைக்கும் நன்மை''க்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு.

0 comments: